ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி பெருமளவானோர் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு, காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் சனிக்கிழமையுடன் (28) 50 நாட்களைப் பூர்த்திசெய்துள்ளது.
அதனை முன்னிட்டு சனிக்கிழமையன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடலை நோக்கி ஏற்பாடு செய்திருந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுக்கொண்டிருந்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்குப் புத்துயிர் அளிப்பதற்காகவே தாம் வருகைதந்திருப்பதாகவும் கோஷங்களை எழுப்பினர்.
50 நாட்கள் நிறைவு
நாடு மிகப்பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி இளைஞர், யுவதிகள், வயதுமுதிர்ந்தோர், பல்துறைசார்ந்தோர், கலைஞர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினர் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டமொன்றை ஆரம்பித்தனர்.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட மறுதினமே அங்கு கூடாரங்களைத் தயார்செய்த போராட்டக்காரர்கள், அப்பகுதிக்கு 'கோட்டா கோ கம' எனப்பெயரிட்டு இரவு, பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்தனர்.
அதுமாத்திரமன்றி நூலகம், சட்ட ஆலோசனை வழங்கல் நிலையம், தற்காலிக வைத்தியசாலை, திரையரங்கு, கோட்டா கோ கம பல்கலைக்கழகம் உள்ளடங்கலாக நாடொன்றில் இருக்கக்கூடிய அடிப்படைக்கட்டமைப்புக்கள் பலவும் அங்கேயே நிறுவப்பட்டு, புத்தாக்க சிந்தனைகளுடன் கூடியதாக நாளுக்குநாள் அந்த மக்கள் போராட்டம் எழுச்சியடைந்துவந்தது.
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் அப்போராட்டம் சற்றே வீரியம் குறைந்திருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, குறிப்பிடத்தக்களவான மக்கள் அப்போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துவந்த நிலையில், நேற்றுடன் காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பமாகி 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
போராட்டத்திற்குப் புத்துயிர் அளிக்க ஒன்றுதிரண்ட மக்கள்
இவ்வாறானதொரு பின்னணியில் காலிமுகத்திடல் போராட்டம் 50 நாட்களைப் பூர்த்திசெய்துள்ளமையினை நினைவுகூரும் வகையிலும், அப்போராட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கும் விதமாகவும் சனிக்கிழமை (28) பிற்பகல் 2 மணியளவில் கொழும்பில் ஒன்றுதிரண்ட மக்கள் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து பேரணியாக அலரிமாளிகையைக் கடந்து காலிமுகத்திடலை வந்தடைந்தனர். தொழிற்சங்க மத்திய நிலையம், ஐக்கிய ஒன்றிய தொழிற்சங்க சம்மேளனம் உள்ளிட்ட பெருமளவான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வமதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றுக்கொண்டிருந்தனர்.
போராட்டக்காரர்களின் கோஷங்கள்
இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் 'கோட்டா கோ ஹோம்' (வீட்டிற்குச்செல்லுங்கள் கோட்டா), 'கோ ஹோம் ராஜபக்ஷ' (வீட்டிற்குச்செல்லுங்கள் ராஜபக்ஷாக்களே), 'கோட்ட கோ ஜெய்ல்' (கோட்டா சிறைக்குப்போ), 'நோ டீல்', 'எங்களுடைய சொத்துக்கள் எங்கே?', 'பொருளாதாரம் வீழ்ச்சியடையக் காரணம் யார்?', 'கொள்ளையடித்த நிதி எங்கே?', 'காலிமுகத்திடல் போராட்டத்திற்குப் புத்துயிர் அளிப்போம்' என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியவண்ணம் காலிமுகத்திடலை நோக்கிப் பேரணியாக நடந்துசென்றனர்.
போராட்ட உத்திகள்
அதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது நிலைப்பாட்டை வெளிக்காட்டுவதற்குப் பல்வேறு புத்தாக்க உத்திகளைக் கையாண்டனர். பலர் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் கறுப்புநிற ஆடையணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், கறுப்புக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர். சிலர் தமது உடலில் கறுப்புநிறத்தால் 'நோ டீல்' என்று எழுதியிருந்தனர். ஒருவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப்போன்று வேடமிட்டு அப்பேரணியின் நடுவே நடந்துவந்தார். மற்றுமொரு குழுவினர் உறுமி மேளத்தில் இசை எழுப்பியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பொம்மலாட்டத்தில் ஈடுபட்டனர்.
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
ஏற்கனவே கடந்த 9 ஆம் திகதி 'கோட்டா கோ கம' மற்றும் 'மைனா கோ கம' அமைதிப்போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து, நாடளாவிய ரீதியில் வன்முறைகள் வெடித்ததுடன் பெருமளவான சொத்துக்கள் சேதமடைந்தன. எனவே இம்முறை அத்தகைய அமைதியின்மை நிலை தோற்றம்பெறுவதைத் தடுக்கும் வகையில் அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலும் பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. வழமையை விடவும் பெருமளவான பொலிஸார் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்
கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்ட பேரணியின் காரணமாக பிற்பகல் 2 மணியளவில் கொள்ளுப்பிட்டியை அண்மித்த காலிவீதியில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM