(இராஜதுரை ஹஷான்)
நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்நிலைமைக்கு செல்ல தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட பாராளுமன்ற குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரைத்துள்ளார்.
பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் தவறான தீர்மானங்களின் காரணமாக முழு நாடும் இன்று பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளதை குற்றமாக கருதி விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என கோப் குழுவின் தலைவர் மத்திய வங்கியிடம் பரிந்துரைத்தார்.
பொருளாதார நெருக்கடி,எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்க சேவையில் உள்ளவர்களை குறைந்தபட்ச அளவில் சேவையில் ஈடுப்படுத்தி பணிகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி,எதிர்வரும் மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்த தேவையான செயற்திட்டத்தை உடனடியாக தயாரிக்குமாறு கோப்குழுவின் தலைவர்,நிதியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்
மத்திய வங்கி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்கு மத்திய வங்கி நேற்று கோப் குழுவில் முன்னிலையான போது கோப் குழுவின் தலைவர் மேற்கண்டவாறு பரிந்துரைகளை முன்வைத்தார்.
தற்போதைய மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமை தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணம் என்ன என வினவப்பட்ட போது அதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்நலால் வீரசிங்க,
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடனுதவிகளை பெற முனைந்த போது,இலங்கையின் கடன் நிலைபேறான தன்மையில் இல்லை என்பதை அவர்கள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.எனவே கடன் வசதியை பெற்றுக் கொள்வதாயின் கடன் மறுசீரமைக்கப்பட வேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதற்கமைய நிதிச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய தொழில்நுட்பக் கலந்துரையாடல்களின் பின்னர் மத்திய வங்கியின் நாணயக் சபையின் ஊடாக நிதி அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு குறித்த தொழில்நுட்ப பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சரவையின் அது தொடர்பான இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாகவும் ஆளுநர் பதிலளித்தார்.
அப்போதைய காலக்கட்டத்தில் நிதியமைச்சராக பதவி வகித்தவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதனை பாராளுமன்றிற்கு அறிவிக்கவில்லை.பாராளுமன்றில் கருத்துரைத்த முன்னாள் நிதி மூலதனச்சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இதன் உண்மையான நிலையை பாரர்ளுமன்றிற்கு தெரிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இதன்போது சுட்டிக்காட்டினார்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைய இலங்கையின் கடன் நிலைபேறான தன்மையில் காணப்பட்டதாகவும்,ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சில மாதங்கள் கழித்து வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு அமைய இலங்கையின் கடன் நிலைபேறானது அல்ல என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
வரி வருமானம் குறைக்கப்படக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் ஆலோசனை வழங்கியிருந்த நிலையில் அப்போதைய ஜனாதிபதியின் செயலாளரது தலையீட்டின் ஊடாக 600 பில்லியன் ரூபா வரியை குறைப்பதற்கான தீர்மானம் எவ்வாறு எடுக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா கேள்வியெழுப்பினார்.
புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஆரம்பத்தில் நாணய மாற்று விகிதத்தை மிதக்க விடாது தக்கவைத்துக்கொண்டமையால் பாரிய தொகை இழக்கப்பட்டிருப்பதாக சமூகத்தில் நிலவும் கருத்து தொடர்பில் கோப் குழு இதன்போது வினவியது.
நாணய மாற்று விகிதத்தை மிதக்க விடல் தொடர்பான தீர்மானத்தை முன்னெடுக்கும் உரிமை நாணய சபைக்கே உள்ளது என மத்திய வ்ங்கியின் ஆளுநர் இதன்போது பதிலளித்தார்.
மத்திய வங்கியின் கையிருப்பை கொண்டு நாணய மாற்று விகிதத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு எடுத்த தீர்மானத்தை தானும்,நாணயச் சபையின் உறுப்பினராக பதவி வகித்த சஞ்ஜீவ ஜயவர்தனவும் கடுமையாக எதிர்த்ததாக நாணயச்சபையின் முன்னாள் உறுப்பினர் கலாநிதி ராணி ஜயமஹா கோப் குழுவின் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் நாணயச்சபையின் மூன்று உறுப்பினர்களின் தீர்மானத்திற்கமைய நாணயமாற்று விகிதத்தை ஒரே தொகையில் தக்கவைக்கப்பட்டதாகவும்,மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் பேராசிரியர் டப்ள்யூ.டி.லக்ஷமன்,திறைச்சேரியின் முன்னாள் செயலாளர் மற்றும் நியமிக்கப்பட்ட நாணயச் சபை உறுப்பினர் சமந்த குமாரசிங்க ஆகியோரின் விருப்பத்திற்கமையவே அத்தீர்மானம் செயற்படுத்தப்பட்டதாக கோப் குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்டது.வெளி தரப்பினரின் ஆதரவின்றி துல்லியமான தொழில்நுட்ப காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை மத்திய வங்கிக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை கோப் குழு வலியுறுத்தியது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் 3 தொடக்கம் 4 மாதம் வரையான காலப்பகுதிக்கு தேவையான அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வது சிக்கலானதாக அமைந்தாலும் அச்சவாலை வெற்றிக்கொள்ள முன்னேற்றகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கோப் குழுவிடம் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்க சேவையில் உள்ளவர்களை குறைந்தபட்ச அளவில் சேவையில் ஈடுப்படுத்தி பணிகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி,எதிர்வரும் மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்த தேவையான செயற்திட்டத்தை உடனடியாக தயாரிக்குமாறு கோப்குழுவின் தலைவர்,நிதியமைச்சின் செயலாளருக்கு பரிந்துரைத்தார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான முயற்சிகளுக்காக நிதி அமைச்சின் செயலாளரையும்,மத்திய வங்கியின் ஆளுநரையும்,மத்திய வங்கியையும் கோப்குழுவின் தலைவர் பாராட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM