(எம்.மனோசித்ரா)
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு மக்கள் விடுதலை முன்னணியுடன் எவ்வித தொடர்பும் கிடையாது.
ஜே.வி.பி. ஆதரவாளர்கள் மீது அரசியல் பழிவாங்கலை முன்னெடுப்பதற்கு சிலர் முயற்சிப்பதால் இது தொடர்பான விசாரணைகளில் பக்கசார்பற்ற தன்மையைப் பேணுமாறு பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபருடன் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பயங்கரவாதிகளே இந்த தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் பின்னர் அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் வன்முறைகள் பரவலடைந்தன. இவற்றின் பின்னணியில் ஜே.வி.பி. காணப்படுவதாக சாட்சியற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே இவை தொடர்பில் ஜே.வி.பி. அங்கத்தவர்கள் எவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா ? அல்லது வேறு கட்சி உறுப்பினர்கள் எவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டது.
பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் ஜே.வி.பி.க்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அவர்கள் ஏனைய கட்சிகளுடன் தொடர்புடையவர்களாவர்.
எனினும் கடந்த வாரங்களில் பாராளுமன்றத்தில் பலராலும் ஜே.வி.பி. மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. அவர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவையாகும்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய இதனை எம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
அத்தோடு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் அரசியல் கட்சி பேதமின்றி கைது செய்யப்படுவதாகவும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
தனிப்பட்ட பழிவாங்கல் மற்றும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் எமது கட்சி உறுப்பினர்களை வேட்டையாடும் நோக்கில் சில விடயங்கள் மேற்கொள்ளப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டினோம்.
அதையும் பரிசீலிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர். காவல்துறையினரின் பாரபட்சமற்ற தன்மையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினோம்.
இது தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் உறுதியளித்தனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM