( எம்.எப்.எம்.பஸீர்)
அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடாத்தும் சி.ஐ.டி.யின் பணிப்பாளருக்கு தொலைபேசியில், விசாரணைகளுக்கு முகம் கொடுக்கும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக அறிய முடிகிறது.
இது குறித்து சி.ஐ.டி. பணிப்பாளர் முறைப்பாடுகள் எதனையும் இன்று வரை முன் வைத்திராத போதும், அது குறித்து குறிப்புப் புத்தகத்தில் குறிப்பொன்றினை இட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட விடயங்களை மையப்படுத்தி இந்த அச்சுறுத்தும் தொனியிலான அழுத்தத்தை தேசபந்து தென்னகோன் பிரயோகித்துள்ளதாக அறிய முடிகிறது.
கடந்த 19 ஆம் திகதி, வழக்கு விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன மன்றில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் கேள்வியெழுப்பினார். 'இந்த விசாரணைகளில் அதிகார ரீதியில் வலுக்குறைந்தவர்கள் மன்றில் சி.ஐ.டியினரால் ஆஜர் செய்யப்படுகின்றனர்.
சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரிகள் சுதந்திரமாகவே உள்ளனர். தேசபந்து தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 22 பேரைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியும், சி.ஐ.டியினர் அதனைச்செய்யாமல் இருக்கின்றனர். தேசபந்து தென்னகோன் சரியாகத் தனது கடமையைச் செய்திருந்தால் நாடு முழுவதும் பதிவான சொத்து சேதங்கள், தீவைப்புக்கள், வன்முறைகள் எவையும் பதிவாகியிருக்காது.
காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்கு அப்பால் அரசாங்க ஆதரவுக்குழுக்களை வருகைதர அனுமதிக்கப்போவதில்லை என உறுதியளித்த தேசபந்து தென்னகோன் ஏன் அதனைச் செய்யவில்லை? தெளிவான சான்றுகள் இருந்தும் சி.ஐ.டி அவரைக் கைது செய்யாமல் இருப்பதன் பின்னணி என்ன?' எனக் கேள்வியெழுப்பினார்.
இதனையடுத்து நீதிவான் திலின கமகே தேசபந்து தென்னகோன் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னவென சி.ஐ.டி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சர் சானக டி சில்வா, அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அவ்வாக்குமூலத்தில் அவர் குறிப்பிட்ட விடயங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் தற்போது விசாரித்துவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது மீண்டும் கேள்வியெழுப்பிய நீதிவான், கைதுசெய்யப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலான உண்மைத்தன்மை உறுதிசெய்யப்பட்டதன் பின்னரா அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்? அதிகாரமற்றவர்கள் தொடர்பில் ஒருவிதமாகவும், அதிகாரமிக்க, காப்பாற்றவேண்டும் எனத் தாம் எண்ணுபவர்கள் தொடர்பில் மற்றொரு விதமாகவும் விசாரணை செய்வது ஏன்? எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்கு சி.ஐ.டியிடம் பதில் இருக்கவில்லை. இந்நிலையில் எல்லா சந்தேகநபர்களையும் ஒரே மாதிரியாக நடத்துமாறும், ஆட்களைப்பார்த்து விசாரணை செய்யாது சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெக்குமாறு நீதிவான் சி.ஐ.டியினரை எச்சரித்தார்.
இதனையடுத்து நீதிவான் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளிடம் கைதுசெய்ய ஆலோசனை வழங்கிய 22 பேரில் தேசபந்து தென்னகோன் உள்ளடங்குகின்றாரா? அதில் பெயரிடப்பட்ட ஏனையோர் யார்? என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு சிரேஷ்ட அரசசட்டவாதி உதார கருணாதிலக பதிலளித்தார். 'சட்டமா அதிபர் கைதுசெய்யுமாறு நேரடியான உத்தரவுகள் எதனையும் பிறப்பிக்கவில்லை.
22 பேரின் பெயர்கள் சி.ஐ.டிக்கு வழங்கப்பட்டமை உண்மைதான். சட்டமா அதிபரிடம் காணப்பட்ட தகவல்களுக்கு அமைய அந்த 22 பேரும் விசாரணை செய்யப்படும் சம்பவத்துடன் தொடர்புபட்டிருந்தமையால் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் இருப்பின், குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் செயற்படுமாறுகூறி அந்த ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் தேசபந்து தென்னகோனின் பெயரும் உள்ளடங்குகின்றது. எனினும் கைதுசெய்வது தொடர்பான தீர்மானத்தை சட்டமா அதிபர் எடுக்கமுடியாது. அதனை சி.ஐ.டியினரே மேற்கொள்ளவேண்டும்' எனத்தெரிவித்தார்.
இதனையடுத்து திறந்த மன்றில் நீதிவான் திலின கமகே தேசபந்து தென்னகோன் விடயத்தில் நிலையான ஆலோசனையொன்றை சி.ஜ.டிக்கு வழங்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவித்துதுடன், அவ்வாறு ஆலோசனை வழங்கப்படாதவிடத்து நீதிமன்றம் பொருத்தமான உத்தரவொன்றைப் பிறப்பிக்கவேண்டிவரும் எனவும் அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் சி.ஐ.டி. பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், நீதிவான் கேள்வி எழுப்பும் போது, தன் மீது எந்த தவரும் இல்லை என ஏன் மன்றில் கூறவில்லை என கேள்வி எழுப்பி அழுத்தம் பிரயோகித்துள்ளதாக அறிய முடிகிறது.
இந் நிலையிலேயே அது தொடர்பில் சி.ஐ.டி. பணிப்பாளர் குறிப்பொன்றினை பதிவுப் புத்தகத்தில் இட்டுள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் குறித்த தொலைபேசி அழைப்பு விசாரணைகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனவும், அதனால் அவர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருப்பது விசாரணைகளை பாதிக்கலாம் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM