-ஆர்.ராம்-
“நான் பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை. பாலங்கள் மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. கைபிடி இல்லை. என்னுடைய கால்களில் கழற்ற முடியாத பாதணிகள் போடப்பட்டுள்ளன. அதன் அடியில் கூர்மையான இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை பாதுகாப்பாக அடுத்த பக்கம் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. இந்தச் சவாலை நான் நாட்டிற்காகவே பொறுப்பேற்றேன்”
இந்த வசனங்களுக்குச் சொந்தக்காரர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. புதிய பிரதமராக அவர் பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் இறுதித் தருணத்தில் உதிர்த்த வசனங்கள் தான் இவை.
இந்த வசனங்கள் இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமையையும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு காணப்படும் பாரிய சவால்களையும் புடம்போட்டுள்ளன.
பிரதமர் ரணில் மேற்படி வசனங்கள் ஊடாக நாட்டின் நெருக்கடியான நிலைமைகளை உணர்வு ரீதியாக வெளிப்படுத்த முயன்றிருந்தாலும், எதிரணிகள் அவரை 'நாட்டை மீட்பராக' கருதவில்லை. “ராஜபக்ஷக்களின் மீட்பராகவே” கருதுகின்றன. பிரதிபலிப்புக்களையும் செய்கின்றன. பொதுமக்களுக்கும் சந்தேகத்தில் தான் உள்ளனர்.
பிரதமர் ரணில் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பிரதிசபாநாயகர் பதவிக்கு ஹோஹினி கவிரத்னவை ஏகமனதாக தெரிவு செய்ய வேண்டும் என்றே விரும்பினார்.
ஆனால், தனியொருவரான ரணிலால் அதனைச் சாதித்திருக்க முடிந்திருக்கவில்லை. பொதுஜனபெரமுன சார்பில் களமிறக்கப்பட்ட அஜித் ராஜபக்ஷவே வெற்றி பெற்றார். பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் ரணில் எடுத்த முதலாவது முயற்சியே 'தோல்வி' கண்டது.
ரணிலைப் பொறுத்தவரையில் அவருக்கும், ராஜபக்ஷக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற புரிதல் அவருக்கும் பொதுஜனபெரமுனவிற்கும் இடையில் இல்லை. அது எப்போதும் ஏற்படப்போவதும் இல்லை. அத்தகையவரால் எவ்வாறு அரசாங்கத்தினை இயக்க முடியும்?
ரணிலின் 'நம்பிக்கைக்குரியவர்கள்' என்று அமைச்சரவையில் உள்ளீர்ப்பதற்கு யாருமில்லை. அவ்விதமான 'நம்பிக்கைக்குரியவர்கள்' யாருமே இல்லாத அமைச்சரவையில் ரணிலால் செல்வாக்குச் செலுத்த முடியுமா என்பதும் கேள்விக்குரியதே?
எனினும், ரணில் பிரதமராகப் பதவியேற்றவுடன் சர்வதேசத்தின் பலதரப்பட்டவர்களும் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் செய்தமையானது அவர் மீது 'மீட்பர்' என்ற பிம்பத்தையும் வலுவாகவே ஏற்படுத்திவிட்டது. ஆனால் பிரதி சபாநாயகர் விடயத்தால் 'முதற்கோணல் முற்றிலும் கோணலாகிவிடுமோ' என்ற அச்சம் ரணிலுக்கு ஏற்பட்டது.
செய்வதறியாது தடுமாறிய ரணில், முதலில் நாட்டின் உண்மையான நிலைமையை பகிரங்க வெளியில் பொதுமக்களுக்கு தெரிவித்தார். அதில் 'எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் உணவுப்பிரச்சினை ஏற்படும்' என்பதும் 'மத்திய வங்கியால் ஒரு மில்லியனைக் கூட திரட்ட முடியாத நிலைமை உள்ளது' என்பதும் மிகவும் முக்கியமான விடயங்கள்.
இவ்விதமான நிலைமையைக் கையாள்வதற்கு, ரணில் கையாண்ட உபாயம் தான், “அனைத்துக் கட்சிகளும் அரசாங்கத்தில் பங்கேற்க வேண்டும்” என்று விடுக்கப்பட்ட அழைப்பாகும். “அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்கினால் தான் நாட்டை மீட்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது சுயாதீனமாக இயங்கப்போவதாக அறிவித்துள்ள மைத்திரி அணியோ அல்லது விமல், உதய உள்ளிட்டவர்களின் அணிகளோ தாயரில்லை என்றே பதிலுரைத்தன.
அத்தரப்புக்கள், “நாட்டை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு” என்பதில் கிடுக்குப்பிடியாக நின்றனர். அதுமட்டுமன்றி தமது அணியில் உள்ளவர்களை அரசாங்கத்திற்குள் இழுப்பதற்காக “ரணில் பேரங்களைச் செய்கின்றார்” என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கின.
'பேரங்கள்' தொடர்பில் ரணில் அமைதிகாத்திருந்தவர், “புதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவை அந்தஸ்து அமைச்சர்களுக்கோ அல்லது இராஜாங்க அமைச்சர்களுக்கோ மாதந்த சம்பளமும், இதர கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது” என்று அறிவித்தார். அத்துடன் திரைமறைவில் தொடர்ச்சியான பேச்சுக்களிலும் ஈடுபட்டார்.
அதன்விளைவாக, கடந்த வெள்ளிக்கிழமை காலையில் எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்களுக்கான நியமனத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுத்திரக்கட்சி மற்றும் சுயாதீன தரப்பினர் ஆகியவற்றிலிருந்து ஒன்றிரண்டு உறுப்பினர்கள் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு அரசியலை துடிப்பாக முன்நகர்த்தி வருவதற்கு காரணமாக இருந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் அமைச்சுகளைப் பொறுப்பெடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுத்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வா, சுயாதீன அணியில் இருந்து கலாநிதி.விஜயதாச ராஜபக்ஷ, டிரான் அலஸ் மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் பொதுஜனபெரமுனவின் 'குழப்படிகாரர்களாக இருக்கும்' பின்வரிசை பாராளுமன்றக் குழுவில் இருந்து நளின் பெர்னாண்டோ ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 20ஆக காணப்படவுள்ள நிலையிலும் இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனத்தின் போதும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மேலும் சிலர் 'கழன்று' கொள்ளும் நிலைமைகள் தான் அதிகரித்துள்ளன. சுதந்திரக்கட்சிக்குள்ளும் சரி, சுயாதீனக் குழுவினருக்குள்ளும் சரி இவ்வாறான நிலைமை தான் காணப்படுகின்றது.
ரணிலின் பிரித்தாளும் தந்திரம், எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பதில் தீவிரத் தன்மையைக் காண்பித்திருந்த சஜித், மைத்திரி, விமல், உதய, வாசு போன்றவர்களுக்கு புதிய தலையிடியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி அவர்களின் அடுத்த அரசியல் நகர்வுகளுக்கு முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால், தான் தமது அணியிலிருந்து அமைச்சுப்பதவிகளை பொறுப்பேற்றுள்ள ஹரின், மனுச மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த ஐக்கிய மக்கள் சக்தி உடன் அமுலுக்கு வரும் வரையில் அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் சு.க.வின் தலைவர் மைத்திரியால் அவ்விதமாக எடுத்த எடுப்பிலேயே தீர்மானம் எடுக்க முடியாதிருக்கின்றது. காரணம், நிமல் சிறிபால டி சில்வா சுதந்திரக்கட்சியின் நீண்டகால உறுப்பினர். கட்சியில் செல்வாக்குச் செலுத்தக்கூடியவர்.
ஆகவே நிமலுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அது நிச்சயமாக சு.க.வை பிளவுபடுத்தும். வெறுமனே 14 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற சு.க. மீண்டுமொரு பிளவுக்கு முகங்கொடுப்பதற்கான இயலுமையில் இல்லை.
சுயாதீன அணியைப் பொறுத்தவரையில் அதில் தனிநபர்களும், கட்சி சார்ந்தவர்களும் இருப்பதால் யார் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்ற திண்டாட்டமான நிலைமை தான்; உள்ளது. ஆகக் கூடுதலாக அமைச்சுப்பதவிகளை ஏற்றவர்களை தமது 'ஒன்றுகூடல்களின்' போது மட்டும் விலக்கி வைப்பதற்கு முடியும். அதற்கு அப்பால் எதனையும் செய்து விட முடியாது.
அடுத்து வரும் நாட்களில் டக்ளஸ் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் உள்ளன. அதனடிப்படையில், ரணில் ஆரம்பத்திலே கோரியதைப்போன்று கூட்டமைப்பு, முன்னணி, ஜே.வி.பி ஆகியன தவிர்ந்த ஏனைய தரப்புக்களின் பங்களிப்புடன் அமைச்சரவையை அமைத்துவிட்டார். இது ரணிலுக்கு அரசியல் ரீதியாக கிடைத்த முதற்கட்ட வெற்றி எனலாம். ஆனால், ரணிலின் கையை ஓங்கவிடாது 'கடிவாளம்' போடும் பொதுஜனபெரமுனவை கையாள வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.
அதற்கு ரணில் 21ஆவது திருத்தச்சட்டத்தினை அஸ்திரமாகப் பயன்படுத்தலாம். ஏனென்றால், பெரமுனவின் அத்தனை செயற்பாடுகளுக்கும் ஆணிவேராக இருப்பவர் பஷில் ராஜபக்ஷ.
அவரை பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தில் வைத்திருப்பதா இல்லையான என்பதை 21ஆவது திருத்தச்சட்ட மூலம் தான் தீர்மானிக்கப்போகின்றது. அச்சட்டமூலத்தை நகர்த்தவுள்ளவர் பஷிலின் அரசியல் 'ஜென்ம விரோதியான' தற்போதைய நிதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ.
எனினும் விஜயதாசவினால் கொண்டு வரப்படும் அரசியலமைப்பு திருத்தம் தம்முடைய கட்சியின் முக்கியஸ்தரும் அரசியல் வாழ்வளித்தவருமான பஷில் ராஜபக்ஷவுக்கு பங்கம் ஏற்படுத்துவதாயின் பொது ஜனபெரமுன தரப்பினர் அதற்கு ஆதரவு அளிப்பார்களா என்பதில் நிச்சியம் அற்ற நிலையே நீடிக்கிறது.
முன்னதாக ஜானாதிபதி கோட்டாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையை முன்னெடுப்பதற்காக நிலையியல் கட்டளையை இடை நிறுத்துவதற்காகன வாக்கெடுப்பில் ஆளும் தரப்பு வெற்றி கண்டது அந்த .ெவற்றி கோட்டாவுக்கான ஆதரவை வெளிப்படுத்தி உள்ளது. இந் நிலையில் பொது ஜனபெரமுனவில் உள்ள கோட்டா, பஷில் ஆதரவு தளத்தை தாண்டி 21ஆவது திருத்தச் சட்டம் வெற்றி பெறுவதே மாயாஜாலம் தான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM