( எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் சி.ஐ.டி.யினர் இன்று ( 21) சிறப்பு விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதலை தடுப்பதற்குத் தவறியமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் ஒரு அங்கமாக இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டு, பொலிஸ் மா அதிபரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சி.ஐ.டி.யினரால் கடந்த 17 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் வழங்கிய வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.
அதன்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜரான பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம் நீண்ட வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சி.ஐ.டி..க்கு வழங்கியதாக கூறப்படும் வாக்கு மூலத்தில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே, கோட்டா கோ கம மீது தாக்குதல் நடாத்த வந்தவர்களை தடுக்காமல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இவ்வாறான நிலையில் அவரின் வாக்கு மூலத்தின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொள்ள பொலிஸ் மா அதிபரிடம் இவ்வாறு வாக்கு மூலம் பெறப்பட்டதாக விசாரணைகளை கையாளும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதனிடையே, இன்று ( 21) பொலிஸ் மா அதிபருக்கு மேலதிகமாக, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர மற்றும் பொலிஸ் விஷேட நடவடிக்கை பணியகத்தின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.சி.ஏ. தனபால ஆகியோரிடமும் சி.ஐ.டி.யினர் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
குறிப்பாக , மைனா கோ கம, கோட்டா கோ கம தாக்குதல்களை தடுக்காமை, கடமையை தவறியமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் விசாரணைகளில், சாட்சிப் பதிவாக இந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.
இந்த சம்பவங்களின் போது அதிரடிப் படையினர் செயற்பட்ட விதம் தொடர்பில் அதிரடிப் படை கட்டளைத் தளபதியிடமும், முன் கூட்டியே வழங்கிய தகவல்கள் தொடர்பில் பொலிஸ் விஷேட நடவடிக்கை பணியக பிரதானியிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, இந்த விசாரணைகளில் கடந்த 9 ஆம் திகதி காலை வேளையில் கொழும்பு பொலிஸ் பிரதானிகளிடையே இடம்பெற்றதாக கூறப்படும் சூம் கலந்துரையாடல் ஒன்று தொடர்பிலும் சி.ஐ.டி.யின் அவதானம் திரும்பியுள்ளது.
கொழும்பு பொலிஸ் உயர் அதிகாரிகளிடையே நடந்த அந்த கலந்துரையாடலில் பேசியுள்ள பொலிஸ் பிரதானி ஒருவர், தனது கட்டளை வரும் வறை ஒரு சொட்டு தண்ணீர் பிரயோகம் கூட செய்யக் கூடாது என பொலிஸ் அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னர் தன்னை மீறி தண்ணீர் பிரயோகம் செய்த பொலிஸ் மேலதிக படைப் பிரிவின் கட்டளை அதிகாரியை எந்த பொறுப்புக்களும் வழங்காமல் இடமாற்ற நடவடிக்கை எடுத்ததாக அதன் போது அந்த பொலிஸ் பிரதானி எச்சரித்திருந்ததாக சி.ஐ.டி.க்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் படியே குறித்த சூம் கலந்துரையாடல் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM