குமார்சுகுணா
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.
உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் 142-ஆவது பிரிவைச் செயல்படுத்தி விடுதலை செய்துள்ளது.
இது அவரது தாயார் அற்புதம்மாளின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். "செய்யாத தவறுக்கு என் மகன் சிறை அனுபவிக்கக் கூடாது" என்ற வாதத்துடனான வேகம் அவரை சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள வைத்தது. இன்று உச்ச நீதிமன்றம் வரை சென்று மகனை வென்றெடுத்துள்ளார்.
1991 ஜூன் மாதம் தொடங்கிய அவரது போராட்டம் 2022 ஆம் ஆண்டு மே மாதம் நிறைவுபெற்றுள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த வழக்கு கடந்து வந்த பாதை மற்றும் தீர்ப்பு தொடர்பில் பார்ப்போம். .
1991 மே 21ஆம் திகதி, ஸ்ரீபெரும்புதூரில் இரவு 10.20 மணிக்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் 1991-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ஆம் திகதி பேரறிவாளனை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு வயது 19.
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான சிவராசனுக்கு, மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்காக 9 வோல்டேஜ்கொண்ட இரண்டு பெற்றரிகளை வாங்கிக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் பேரறிவாளன் கைதுசெய்யப்பட்டார்.
அப்போது எலெக்ட்ரானிக்ஸ் டிப்ளோமா படிப்பு முடித்து, உயர் கல்வியைத் தொடர சென்னையில் உள்ள திராவிடர் கழக தலைமையகமான பெரியார் திடலில் தங்கியிருந்தார். ஒரு சிறிய விசாரணை என்று கூறித்தான் சி.பி.ஐ., அவரை அழைத்துச் சென்றது.
ஆனால் விசாரணையின் முடிவில் அவருக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது.
2011, செப்டம்பர் 9 ஆம் திகதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில், அது தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் 2014, பெப்ரவரி 18 அன்று பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை இரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது
2014-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் கருத்து கேட்டார்.
அப்போதிருந்த காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் அரசாங்கம் உடனடியாக உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கியது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த அறிவின் தாயார் அற்புதம்மாள் மகனை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தார்.
அவரது அறப்போராட்டத்துக்கு கிடைத்த இமாலய வெற்றிதான் விசாரணை அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம். 2017இல் அவர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
"பேரறிவாளனிடம் நான் நடத்திய விசாரணையின் போது ‘அவர் எனக்கு பெட்டறி வாங்கியது எதற்கு என்பது தொடர்பில் ஒன்றுமே தெரியாது’ என்று சொன்னதை நான் அறிக்கையில் பதிவு செய்யத் தவறிவிட்டேன்" என்றார்.
இதன் பின்னர் இந்த வழக்கில் அற்புதம்மாளின் போராட்டம் உத்வேகத்துடன் வேகமெடுத்தது.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. 2018-ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரத்தில் விடுதலை செய்ய முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது
அதன் மீது 2 ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்த ஆளுநர் குடியரசு தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக உள்துறை அமைச்சகம் மூலமாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தார்.
இதற்கிடையே 2021 மே 28: பேரறிவாளன் பரோலில் தனது வீட்டிற்கு வந்தார். உடல்நலக்குறைவால் அவருக்கு 10 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது அவருக்கு பிணை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. 31 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவானனுக்கு கிடைத்த முதல் பிணை இதுவாகும் கடந்த 11 ஆம் தகதி பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநருக்கு சராமாரியான கேள்விகளை எழுப்பியது.
அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் எப்படி அனுப்பலாம்? அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
"பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும்?" என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், "அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது" எனவும் வினவியிருந்தனர்.
இந்த வழக்கின் மற்ற வாதங்களை அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ்,பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் (18) புதன்க்கிழமை பிற்பகல் 10.45 மணியளவில் வாசிக்க தொடங்கினர். 161-ஆவது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்ச நீதிமன்றமே அந்த வழக்கில் முடிவெடுக்க அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு வழிவகுக்கிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர். ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசமைப்புச் சட்டப்படி தவறு எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
நீண்ட நெடிய போராட்டத்தை பேரறிவாளன் மேற்கொண்டிருந்த நிலையில் அவரை விடுதலை செய்துள்ளது உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு. இந்த தீர்ப்பு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் 30 வருடத்துக்கும் மோலான சட்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியே.
ஒரு தாயின் போராட்டம் இன்று வென்றுள்ளது. தனது இளமைக்காலம் முழுவதனையும் சிறையில் தொலைத்த பேரறிவாளனின் விடுதலையை தமிழகம் மட்டும் அல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM