(நா.தனுஜா)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பிரிட்டனைத் தளமாகக்கொண்டியங்கும் சிவில் சமூக அமைப்பினர் மற்றும் தமிழ் செயற்பாட்டாளர்களுடன் சில தினங்களுக்கு முன்னர் சந்திப்பொன்றை நிகழ்த்தியுள்ள அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதுடன் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய தமது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ளனர்.
இச்சந்திப்பில் முதலாவதாக உரையாற்றிய தொழிற்கட்சிக்கான தமிழர்களின் தலைவர் சென் கந்தையா, போரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை ஆஜர்ப்படுத்தப்படவேண்டும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கவேண்டும், இலங்கைக்கான நிதியுதவிகளை பிரிட்டன் வழங்கும்போது தமிழர் தாயகத்தில் இராணுவமயமாக்கம் முழுமையாக இல்லாதொழிக்கப்படவேண்டும் என்பதை நிபந்தனையாக முன்வைக்கவேண்டும் என்ற 3 முக்கிய நிபந்தனைகளையும் எடுத்துரைத்தார். அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறல் உரியவாறு உறுதிப்படுத்தப்படாதபோது, அங்கு நீதி இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை நீதிநிலைநாட்டப்படவேண்டும் என்பதை மீள வலியுறுத்திய ஆசிய, பசுபிக் பிராந்தியங்களுக்கான பதில் அமைச்சர் கத்ரின் வெஸ்ற், 'இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான சம்பவங்களை அளவிடமுடியாது என்பதுடன், அவை மறக்கடிக்கப்படவும் கூடாது. அதேவேளை இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து தொழிற்கட்சி எப்போதும் வலியுறுத்தும் என உறுதியளிக்கின்றேன்' என்றார்.
மேலும் இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியானது பொறுப்புக்கூறல் அற்ற தன்மை, இழிவளவான பல்லினனத்தன்மை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறான நடவடிக்கையின்மை ஆகியவற்றை ஞாபகமூட்டும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்ட சர்வதேச வர்த்தகம் தொடர்பான பதில் அமைச்சர் கரெத் தோமஸ், இலங்கையின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதுடன் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி தாம் முன்னெடுத்துவரும் பிரசாரம் தொடரவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
அங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் றிம்ஸ், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் குடும்பத்தாருக்குத் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்ததுடன் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களைப் பொறுப்புக்கூறச்செய்வதை இலக்காக்கொண்டு வழங்கப்பட்டுவருகின்ற அழுத்தம் தொடர்ந்தும் பேணப்படவேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர் பெல் ரிபெய்ரோ, திறைசேரிக்கான பதில் நிதிச்செயலாளர் ஜேம்ஸ் முரே, சிரேஷ்ட சட்ட ஆலோசனை அதிகாரி ஆரபி ராஜ்குமார், சட்ட அதிகாரி மேகன் ஸ்மித் உள்ளிட்ட மேலும் பலர் இச்சந்திப்பில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM