தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை என்பவருக்கு நேற்று (15) வத்திக்கான் நகரில் பாப்பரசர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்தவர் வாசுதேவன் நம்பூதி மற்றும் தேவகியம்மாள் தம்பதிக்கு 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி பிறந்தவர் தான் நீலகண்டன் பிள்ளை.
நீலகண்டன் பிள்ளை சிறுவயது முதலே படிப்பில் கெட்டிக்காரர். பல்வேறு கலைகளை கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் பல்வேறு கலைகளிலும், மொழிகளிலும் அவர் சிறந்து விளங்கினார்.
குறிப்பாக தமிழ், மலையாளம், வடமொழி ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். மேலும் வர்மசாஸ்திரம், சிலம்படி, மல்யுத்தம், குதிரையேற்றம், அம்பு எய்தல், அடிமுறைகள், சண்டைப்பயிற்சி போன்ற பல கலைகளிலும் கைதேர்ந்தார். அவர்கள் வசிக்கும் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது.
இதையடுத்து மன்னரிடம் போர் படை வீரராக அவர் பணியாற்றினார். இவரது திறமையை கண்டு மன்னர் வியந்தார்.
இதையடுத்து அரசவை அதிகாரியாக நியமித்தார். நீலகண்டன் பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றிலும் கோட்டை கட்டுமான பணிகளை கண்காணித்தார்.
மேலும் அவர் அங்குள்ள நீலகண்டசாமி கோவில் அதிகாரியாகவும் இருந்தார். இந்நிலையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.
இதற்கிடையே குளச்சல் போர் ஏற்பட்டது. 1741 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் படைகளுக்கும், டச்சுப்படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுப்படைத் தளபதி பெனடிக்ட் டிலனாய் திருவிதாங்கூர் மன்னரிடம் சரண் அடைந்து போர்க்கைதியானார். பிற்காலத்தில் மன்னர் அவரை தமது படைத்தளபதியாக நியமித்தார்.
கத்தோலிக்க கிறிஸ்தவரான டிலனாயுடன், நீலகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது டிலனாய், இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் வரலாறையும் மேற்கோள் காட்டி ஆறுதல் கூறினார். இந்த விளக்கம் நீலகண்டனுக்கு பிடித்துப்போனதோடு, அவருடைய மனதில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து இயேசு பற்றி முழுமையாக அறிய அவர் விரும்பினார். இதையடுத்து திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மதம் மாறினார்.
தற்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தில் தேவசகாயம் பிள்ளை என்னும் பெயரில் திருமுழுக்கு பெற்றார்.
அவருடன் மனைவியும் மதம் மாறினார். அவருக்கு ஞானப்பூ என்று பெயர் சூட்டப்பட்டது. தேவசகாயம் திருமுழுக்கு பெற்றபிறகு நற்செய்தியை அறிவிக்க தொடங்கினார். சில படைவீரர்களும் மனம் மாறி கிறிஸ்தவரானார்கள்.
இதையடுத்து மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம், சாதி, மதம் எனும் ஏற்றத்தாழ்வுகள் மனிதர்களுக்கு கிடையாது என போதனைகளை துவங்கினார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களிடம் நெருக்கமாக பழகினார். பலரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கிறிஸ்தவ மதத்தை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் அவர் செவிசாயக்கவில்லை. மன்னர் கூறியும் அவர் மனம் மாறவில்லை. இதையடுத்து மன்னர் மார்த்தாண்ட வர்மா தேவசகாயத்தை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சிறை தண்டனை மூலம் அவர் மனம் மாறுவார் என்ற எதிர்பார்ப்பும் பொய்யானது. அவர் நற்செய்தி அறிவிப்பை கைவிடவில்லை.
இதனால் அவர் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். அவரை கொல்ல முடிவு செய்தனர். இதையடுத்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவரை எருமைமாடு மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
இறுதியாக ஆரல்வாய்மொழி அருகே காற்றாடி மலையில் படைவீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் வனவிலங்குகளுக்கு இரையாக போடப்பட்டதாக கூறப்படுகிறது.
உடலின் சில பாகங்கள் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் பலி பீடத்துக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டது.
இவரிடம் ஆசி பெற சென்றவர்களுக்கு நல்லது நடப்பாதக கூறப்படுகிறது. இதன்மூலம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக கருதப்பட்டு வந்தார்.
இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபை சார்பிலும், கோட்டார் மறைமாவட்டம் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வத்திக்கானில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இது நீண்ட காலமாக கிடப்பில் இருந்த நிலையில் இன்று 2012 இல் தேவசகாயம் முக்திப்பேறு பெற்றவர் (அருளாளர்) என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2021ல் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனித பட்டத்தை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கினார். இதன்மூலம் புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை தேவசகாயம் பெற்றுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM