(நா.தனுஜா)
இலங்கையில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் திடீரென வன்முறையாக மாறக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு வலியுறுத்தியிருக்கும் பிரிட்டன், கனடா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள், மோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் அவசரகாலச்சட்டம், ஊரடங்குச்சட்டம் உள்ளிட்ட பாதுகாப்புக்கெடுபிடிகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளன.
நாடு பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதியைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி பொதுமக்களால் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்மீது கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம்பெற்றிருந்தது.
அதுமாத்திரமன்றி உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதுடன் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுவதாலும், நெடுநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும் இலங்கைக்குப் பயணம்செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறும், இலங்கைக்குச்செல்லவேண்டிய அத்தியாவசிய சூழ்நிலை காணப்படின் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் இடத்தைத் தவிர்ப்பதுடன் இலங்கை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி செயற்பாடுமாறும் பிரிட்டன், கனடா, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் அதன் பிரஜைகளுக்கு வலியுறுத்தியுள்ளன.
அதன்படி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் அரசாங்கம் அதன் பிரஜைகளுக்கு வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
இலங்கையில் அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருப்பதுடன் ஊரடங்குச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடந்த 9 ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை அடுத்து கொழும்பு, காலிமுகத்திடல் உள்ளடங்கலாக பல்வேறு இடங்களிலும் பல்வேறு சம்பவங்கள் பதிவாகின. பேர வாவி, கொழும்பு, கண்டி உள்ளடங்கலாக நாட்டில் பல பாகங்களிலும் பதிவான சம்பவங்கள் பிரஜைகள் காயமடைவதற்கும் சில உயிர்கள் பறிபோவதற்கும் வழிவகுத்தன.
எனவே நீங்கள் இப்போது இலங்கையில் இருக்கின்றீர்கள் என்றால், அல்லது இலங்கைக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருக்கின்றீர்கள் என்றால், அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் தவிர்ப்பதுடன் இலங்கை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகச் செயற்படுங்கள்.
ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வெளிநாட்டுப்பிரயாணிகள் அவர்களது கடவுச்சீட்டையும் விமானப்பயண டிக்கெட்டையும் வெளியில் செல்வதற்கான அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தமுடியும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதுடன், மருந்து, எரிவாயு, எரிபொருள், உணவுப்பதார்த்தங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடைகள், பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்புநிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நீண்ட வரிசைகள் காணப்படக்கூடும். அதுமாத்திரமன்றி தினமும் மின்சாரத்துண்டிப்பும் இடம்பெறுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இலங்கை அரசாங்கம் மிகக்குறுகிய காலத்தில் பல்வேறு உள்ளடக்கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நீங்கள் எப்போதும் அவதானமாக இருப்பதுடன் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பெருமளவானோர் ஒன்றுகூடும் கவனயீர்ப்புப்போராட்டங்களைத் தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பொருளாதார நெருக்கடியின் விளைவாக எரிபொருள், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அதன் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கும் கனேடிய அரசாங்கம், இலங்கையில் பாதுகாப்பற்றதன்மை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கையின் நிலைவரம் குறித்து நியூஸிலாந்து அரசாங்கம் அதன் பிரஜைகளுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் கூறப்பட்டிருப்பதாவது:
அண்மையகாலங்களில் இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகவும் மோசமடைந்துள்ளது. அதன் காரணமாக எரிபொருள், உணவுப்பதார்த்தங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிலையும் தோற்றம்பெற்றுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டின் விளைவாக நாடளாவிய ரீதியில் இடம்பெறும் போக்குவரத்து நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்புப்போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
அத்தோடு அண்மையில் பதிவான வன்முறைச்சம்பவங்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் பலர் காயமடைவதற்கும் காரணமாக அமைந்துள்ளன.
எனவே ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், இலங்கையிலுள்ள நியூஸிலாந்துப் பிரஜைகள் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச்செல்வதையோ அவற்றுக்கு அண்மையில் இருப்பதையோ தவிர்த்துக்கொள்ளவேண்டும்.
அதேவேளை ஊரங்குச்சட்டம் பிறப்பிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதனால், உள்நாட்டு ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்வையிடுவதுடன் தனிப்பட்ட பாதுகாப்புத்தொடர்பில் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்று அவ்வறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM