ஏ.எல்.நிப்றாஸ்
ஒரு பெண்ணை நீண்டகாலமாக காதலித்து வந்தவன் கல்யாணம் நெருங்கும் நேரத்தில் ஒரு நிபந்தனை முன்வைக்கின்றான்.
ஆதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, நீண்டகாலமாகவே அத்தையின் மகளை மனதுக்குள் நினைத்து உருகிக் கொண்டிருந்த ‘முறை மச்சானை’ அவசர அவசரமாக கூட்டிவந்து, தாலிகட்டச் செய்து விடுகின்றார்.
இப்படியான கதைகளை சினிமாக்களின் பார்த்திருக்கின்றோம். இப்போது இலங்கை அரசியலில் நடந்தேறியிருக்கின்றது.
இந்தப் பதவியை காதலித்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கனவு கண்டுகொண்டிருந்த அனுரகுமார உள்ளிட்ட மேலும் பலரும் இந்த அவசர பதவியேற்பால் இலகுகாத்த கிளியாகியுள்ளனர். யாரோ நட்ட மரத்தில் ரணில் கனி தின்கின்றார்.
மக்கள் எழுச்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் வெறுமனே ராஜபக்ஷக்களை மாற்றுவதோ ஆட்சியை மாற்றுவதோ அல்ல.
ஜனாதிபதி கோட்டாபயவையும் ஏனைய ராஜபக்ஷக்களையும் வீட்டுக்கு அனுப்புவதன் மூலம் ‘ஆட்சி முறைமை’ மாற்றம் ஒன்றை தொடக்கி வைக்க வேண்டும் என்பதாகும்.
அந்த வகையில், நாட்டுமக்கள் உண்மையிலேயே எதிர்பார்த்த ‘முடிவு’ அலலது மாற்றம் இதுவல்ல.
கோட்டாபய மீதான மக்கள் எதிர்ப்பு ஒரு கட்டத்தில் சட்ட ஏற்பாடுகளைக் காரணம் காட்டி மிக சூட்சுமமான முறையில் மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி திருப்பி விடப்பட்டது. இது மஹிந்தவுக்கு தெரியாததல்ல.
தான் கட்டிவைத்திருந்த சாம்ராஜ்யத்தை உடைத்து சுக்குநூறாக்கி, தமது பிள்ளைகளின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியமைக்காக அவர் எதிர்வினை ஆற்றாமல் விட மாட்டார் என்றே நோக்கர்கள் கூறுகின்றனர்;.
பிரதமரை மாற்றி இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் என்ற கட்டத்திற்கு வந்தபிறகு, அப்பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவே நியமிக்கப்படுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர் சமூக வலைத்தள கணக்கெடுப்புக்களின்படி அனுரகுமார திசாநாயக்க முன்னணியில் இருந்தார். வேறுபலரின் பெயர்களும் அடிபட்டன.
இந்த தருணத்திலேயே அரசாங்கம் சொந்த செலவில் சூனியம் வைத்தது போராட்டத்தின் மீது வன்முறையை தூண்டியமை அரசாங்கத்தின் முட்டாள்தனமான நகர்வாகும். மக்கள் எழுச்சி பற்றிய உலக அறிவற்ற தனத்தை இது காட்டியது.
எவ்வாறிருப்பினும், உயிhத்த ஞாயிறு தாக்குதலைப் போல, இலங்கையில் நடந்த அண்மைக்கால நிகழ்வுகளும் ஒரு பின்புல நிகழ்ச்சி நிரலை கொண்ட திட்டம் என்றால், அதில் இது ஒரு உச்சக்கட்ட காட்சி என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தக் கட்டத்தில்தான் மஹிந்த பதவி விலக வேண்டி ஏற்பட்டது, அவர் முன்னதாகவே இராஜினாமா செய்ய எத்தனித்த போதும், அவர் விலகினால் நாம் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்தவர்கள் அவரை அப்பதவியில் இருந்து அவரைச்செல்லவிடாது தடுத்துக் கொண்டே இருந்தமையை அனுமானிக்க முடிகின்றது.
ஆனாலும், கோட்டாபய மீதான மக்கள் எதிர்ப்புக்காக தான் விலகுவதை உளப்பூர்வமாக மஹிந்த ஏற்றுக் கொண்டதாக கூற முடியாது. ஆனால், அதனையும் தாண்டி அதனை அவர் செய்தார். இதன்மூலம் இரண்டு பேரை அவர் காப்பாற்றினார்.
முதலாமவர், சகோதரர் கோட்டாபய. இரண்டாமவர், மகன் நாமல் ராஜபக்ஷ. அதாவது, இன்னும் சில வருடங்களுக்குப் பிறகாவது நாமலுக்கு அரசியல் எதிர்காலம் சிறப்பதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.
இந்தப் பி;ன்னணியில், புதிய பிரதமரை நியமிப்பதற்கான நிர்ப்பந்தம் எழுந்தது. ‘பெரும்பான்மையை நிரூபிக்கின்ற நபருக்கு அப்பதவி வழங்கப்படும்’ என்று ஜனாதிபதி சொன்னார். ‘ஜனாதிபதி பதவி விலகினால் பொறுப்பெடுப்பேன்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார்.
இதே கருத்தையே ஜே.வி.பி தலைவரும் சொன்னார்.
இப்படி, ‘கீறல் விழுந்த சீ.டி. போல’ ஜனாதிபதியும் எதி;ர்க்கட்சி தலைவரும் ஒரே விடயத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தனர்.
எனவே, அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதியும், ஒழிந்திருக்கும் ஏனைய ராஜபக்ஷக்களும் இவ்விடத்தில் ஒரு காய்நகர்த்தலை மேற்கொண்டதாக கூறலாம்.
இதற்குப் பின்னால் சர்வதேச நாடுகளின் செல்வாக்கும் உள்ளது.
அந்தவகையில், முன்னர் 5 தடவை பிரதமராக பதவி வகித்தவரும் ராஜபக்ஷர்களின் திரைமறைவு கூட்டாளியாகவும் கருதப்படுகின்றவருமான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமாக நியமித்துள்ளார்.
இதற்காக போராடியவர்கள் யாரோ இருக்க, சத்தமில்லாமல், எந்த ஆயுதத்தையும் கையில் எடுக்காமல் ரணில் வெற்றிபெற்றுள்ளார்;
கடைசித் தறுவாயில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு சஜித் அந்தளவுக்கு ‘கனதியானவர் இல்லை’ என்ற கருத்து எதிரணியினர் மத்தியில் மட்டுமன்றி மக்களிடமும் ஏற்பட்டது. உண்மையில், முதன்முதலாக சஜித் இவ்வாறு பிரதமராக பதவியேற்பது அவருக்கு வாழ்வா சாவா போராட்டமாகும்.
அத்துடன், இது ஒரு (சர்வதேச, உள்நாட்டு) அரசியல் பொறி என்பதால் இதற்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கருத்தியிருக்கலாம்.
எது எவ்வாறிருப்பினும், இந்தப் இழுபறிநிலை ஜனாதிபதிக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. ராஜபக்ஷர்கள் தாம் நினைத்த காயை வெகுசுலபமாக முன்னகர்த்த வசதியாக அமைந்தது. 52 நாள் காலப்பகுதியில் ரணில், இரவோடிரவாக மஹிந்தவை நியமித்தது போல, அவசர அவசரமாக கோட்டாபய, ரணிலை பிரமராக நியமித்துள்ளார்.
‘ரணில் பிரதமராகப் போகின்றார்’ என்று தெரிந்து கொண்டதும் சஜித் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து, தளர்த்தப்பட்ட நிபந்தனைகளுடன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.
அத்துடன், ‘ராஜபக்ஷர்களை காப்பாற்றக் கூடிய ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது’ என்று ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார கடுமையாக எதிர்த்திருந்தார்.
அதுமட்டுமன்றி, ஓமல்பே சோபித்த தேரர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை போன்றோரும் இவ்வாறு நியமிக்கப்படுவதற்கு ரணில் பொருத்தமற்றவர் என்று பகிரங்கமாகவே கூறியிருந்தனர். இந்தக் கருத்துக்களுக்குப் பின்னால் பல நியாயங்கள் இருந்தன.
ஆனால், இன்னும் தாமதிக்கக் கூடாது என்று கருதிய ஜனாதிபதி, உடனடியாக பிரதமராக ரணிலை நியமித்து விட்டார்.
இதுதான் அவரது சத்தமில்லாமல் காய்நகர்த்தும் (ராஜ) தந்திரமாகும்.. இதற்குப் பின்னால் அமெரிக்க, இந்திய அரசியல் செல்வாக்கு இருந்துள்ளது என்பது பேசப்படாத தனிக்கதையாகும்.
இந்நிலையில், புதிய பிரதமர் நாட்டின் உடனடிப் பொருளாதார பிரச்சினைகளை அவர் தீர்த்து வைப்பாரா? என்று கேட்டால், ‘அது நடக்கும்’ என்று நம்பலாம்.
ஏனெனில் அவருக்கு அதற்கான ஆற்றலும் சர்வதேச நாடுகளின் குறிப்பாக மேற்கத்தேயத்தின் ஆதரவும் எப்போதும் உள்ளது என்பதை நாமறிவோம்.
இந்தப் பின்னணியில் நோக்கும் ராஜபக்ஷர்கள் மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் செய்த ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிட்ட நாட்டு மக்களின் நீண்டகால கோரிக்கை, எதிர்பார்ப்பு, கனவு நிறைவேறுமா என்றால், ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனெனில், 2015இல் பிரதமரான ரணில், பாதுகாப்பாக ஹெலி மூலம் மஹிந்தவை தென்னிலங்கைக்கு அனுப்பி வைத்தார். மத்திய வங்கி ஊழல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளடங்கலாக பல விவகாரங்களில் அவர்கள் இரு தரப்பும் பரஸ்பரம் மற்றவரை காப்பாற்றும் விதத்தில் செயற்பட்டதை மக்களும் நன்கு அறிவார்கள்.
அத்துடன் மேட்டுக்குடி பின்னணியை சாராத (சஜித் போன்றவர்கள்) உள்நுழையாதவாறு இவர்களே மாறிமாறி ஆட்சி செய்தும் வந்தனர்.
ரணில் இப்போது பிரதமராக வருவதே தமக்கு எல்லா வழிகளிலும் சாதகமானதும், பாதுகாப்பானதும் என்று ராஜபக்ஷர்கள் கணக்குப் போட்டுள்ளனர்.
எனவே, இந்த திட்டத்திற்கு புதிய பிரதமர் துணைபோவாராக இருந்தால், நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் தீரலாம்.
எனினும், மக்கள் எதிர்பார்த்த முழுமையான ஆட்சி மாற்றமோ, ஆட்சி முறைமை மாற்றமோ மிகக் கிட்டிய காலத்தில் ஏற்பட வாய்ப்புக்களே இல்லாது போகும்.
அப்படி நடந்தால், மக்களின் எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகும். மக்களும் இலவுகாத்த கிளிகளாக ஆகிப் போவார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM