எஸ்.ஜே.பிரசாத்
ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியாளர்களையும் குற்றவாளிகளையும் தடுத்து நிறுத்த சிறை அமைப்பை அவர்கள் தொடங்கினர். 1844 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் சிறைச்சாலைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி வெலிக்கடை சிறைச்சாலை 1871 இல் நிறுவப்பட்டது, மஹர சிறைச்சாலை 1875 இல் மற்றும் போகம்பறை சிறைச்சாலை 1876 இல் நிறுவப்பட்டது.
பிரான்ஸின் பாஸ்டில் சிறைச்சாலையின் கட்டிடக்கலையைப் போலவே, போகம்பறை சிறைச்சாலையும் அப்போதைய சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒவ் பொலிஸ் ஆகியோரின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
போகம்பறை சிறைச்சாலை கட்டிடமே ஆசியாவிலேயே மிக நீளமான கட்டிடம், எங்கும் காணப்படாத இந்தக் கட்டமானது ஒரே அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது.
இது 556 அடி நீளமும், 244 அடி அகலமும், 102 அடி உயரமும் கொண்டது.
சிறைச்சாலையின் அனைத்து கதவுகளையும் ஒரே சாவியால் திறக்க முடியும்.
இது "மாஸ்டர் கீ" என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ரகமான கைதிகளுக்கும், அதாவது ஆயுள் தண்டனை கைதிகளுக்கும், சிவில் குற்றங்களில் தண்டனை பெற்ற கைதிகளுக்கும், சாதாரண குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கும் தனித்தனி அறைகள் இருந்துள்ளன. மேற்குப் பகுதியில் உள்ள மருத்துவமனை கட்டிடம் கடுமையான குற்றவாளிகள் மற்றும் மரண தண்டனை கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்படி சிறைச்சாலை 3 தளங்கள் மற்றும் 328 அறைகளைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் அரசியல் கைதிகளுக்கு ஒரு தனி பிரிவு, மத நடவடிக்கைகளுக்கான இடம், தச்சு வேலைக்கான ஒரு கட்டிடம் மற்றும் முடி வெட்டுவதற்கு ஒரு முடிதிருத்தும் கடை ஆகியவையும் இருந்துள்ளன.
அப்போதைய பொதுப்பணித்துறை மற்றும் 92 கைதிகளின் உதவியுடன் 408 கைதிகள் தங்கும் வகையில் இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது.
இங்கு முதல் ஜெயிலராக வெலிங்டன் செயற்பட்டார்.
இது நாட்டின் இரண்டாவது பாதுகாப்பான சிறைச்சாலையாகும். இந்த சிறைச்சாலை கட்டப்பட்ட பிறகு, அதில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட்டது.
இங்கு ஒரே நேரத்தில் மூன்று பேருக்கான தூக்கு தண்டனைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் தூக்கு மரங்கள் இருந்துள்ளன. இங்கு கடைசியாக 1975ஆம் ஆண்டு ஒருவர் தூக்கிலிடப்பட்டார். மொத்தம் 524 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
போகம்பறை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சரதியல், மருசிரா எனப்படும் சிறிபால, மற்றும் கொல்வின் ஆர். டி சில்வா, பிலிப் குணவர்தன மற்றும் வில்லியம் டி சில்வா ஆகியோராவர். கண்டியின் மையத்தில் கட்டப்பட்ட போகம்பறை சிறைச்சாலை 12 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று மாடிகளில் கட்டப்பட்டது.
சிறைச்சாலையின் முன்புறம் நுழைவாயிலில் உள்ள ஜெயிலர்களின் குடியிருப்பும் திறந்தவெளியும், மதில் சுவர் கொண்ட பிரதான கட்டிடத்தில் ஐந்தரை ஏக்கரும், மீதமுள்ள இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த சிறைக் குடியிருப்புகளும் இதில் அடங்கும்.
தற்போது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், 1976 ஆம் ஆண்டு அதன் அமுலாக்கம் நிறுத்தப்பட்டது. அப்போது வெலிக்கடை மற்றும் போகம்பறை சிறைச்சாலையில் தூக்கு மேடைகள் இருந்தன.
ஆனால் இன்று வெலிக்கடை சிறைச்சாலையில் மட்டுதான் தூக்கு மேடை உள்ளது. போகம்பறை சிறைச்சாலை தும்பறைக்கு மாற்றப்பட்டதன் மூலம் அங்கு இருந்த தூக்கு மேடையும் அகற்றப்பட்டது.
போகம்பறை சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறைச்சாலை ஆணையாளரான சேனக்க ஸ்டெம்பு ஓய்வுபெற்று பின்னர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருந்தார்.
அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ஒரு தூக்கு தண்டனை எப்படி நிறைவேற்றப்படு கின்றது என்பது இங்கே விவரிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவைப் பெற்ற கைதி, வராந்தாவில் பகல் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தீர்ப்பு நாளில் கைதியை சிறையிலிருந்து அழைத்துச் செல்ல இரண்டு ஜெயிலர்கள் செல்ல வேண்டும். இந்த கைதி அழைத்து வரப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு பதிவு செய்யப்படுவார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஒரு தலையணை, ஒரு மெத்தை உறை, ஒரு தட்டு, ஒரு போர்வை வழங்கப்படுகிறது.
காலையிலும் மாலையிலும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வெளியே அழைத்துச் செல்லப்படுவார்.
அவருக்கான முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அவருக்கு உரிமை உண்டு.
சில நேரங்களில் அவர்கள் மேல்முறையீடு செய்கிறார்கள், ஆனால் சிலர் அதே முடிவைப் பெறுகிறார்கள்.
அந்த கைதியை அன்றைய தினம் தூக்கிலிடப்போவதாக அப்போதைய கவர்னர் ஜெனரல் தான் அறிவிப்பார்..
அது குறித்து சம்பந்தப்பட்ட கைதிக்கு பதினான்கு நாட்களுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும். அதுதான் சற்று கடினமான விடயம்.
இந்த அறிவிப்பை கைதிக்கு கொடுத்த பிறகு அவருக்கு பிடித்த உணவு மற்றும் பானத்தை அவர் கேட்டு பெற்றுக்கொள்ளளலாம். அவை சிறைச்சாலையால் வழங்கப்படும்.
அந்த நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
கைதியின் இரத்த வாரிசுகள் அவரைப் பார்க்க முடியும். அதாவது அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்.
மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முன் உறவினர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவர்.
மரண தண்டனை கைதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களிலும் அதிகாரிகள் அவர்களை சென்று பார்வையிடுவார்களாம்.
ஒரு ஜெயிலர் வந்து கைதியின் எடையை கணக்கிட்டு, அவரது எடைக்கு ஏற்றவாறு மணலை அளப்பார். பின்னர் தூக்கு மேடை செயல்படுத்தப்பட தயாராகுமாம். அதே போல ஒரு தச்சன் வந்து தூக்கிலிடப்படுபவரின் உயரத்தை அளந்து சவப்பெட்டியை தயார் செய்வாராம்.
மனிதன் உயிருடன் இருக்கும்போதே சவப்பெட்டி தயாரிக்கப்படுகிறது. சமீபகாலமாக பல்வேறு நாடுகளில் இருந்து இதற்கான கயிறுகள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கைதி தூக்கிலிடப்படும் நேரம் காலை எட்டு மணி , ஆனால் சிறைச்சாலை அதை 8 மணி 5 நிமிடமாக நீடித்தது.
அந்த நபரை தூக்கிலிடக் கூடாது என்ற உத்தரவு எந்த நேரத்திலும் வரலாம் என்பதற்காக அனைவரும் காத்திருப்பார்களாம்.
ஆனால் அத்தகைய செய்தி வராதபோது, சரியாக 8:05 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
“அந்த நேரத்தில் கைதியின் விருப்பப்படியும் அவர் நம்பும் மதத்தின்படியும் ஒரு மதத் தலைவரை அழைத்து வரலாம்.
கைதியின் கை, கால்கள் கட்டப்படும். தலையணை உறைபோன்ற ஒரு துணியால் தலை மூடப்படும். அன்றைய நாள் மரணத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட நபர் சிறையிலிருந்து தூக்கு மேடைக்கு கொண்டு வரப்படுவார்.
நடந்தே வரும் அந்தக் கைதியின் கால்கள் தூக்கு மேடையை நெருங்கியதும் பின்னர் நாம் பல திரைப்படங்களில் பார்ப்பதுபோல தண்டனை நிறைவேற்றப்படும்... கைதியின் இறுதி மூச்சு அங்கே உள்ளிழுத்து வெளியிடப்படும்.
தூக்குக்கயிற்றிலிருந்து உடலை இறக்கி கீழ் மேசையில் உடலை வைத்த பின், மருத்துவர் பரிசோதித்து கைதி இறந்துவிட்டதை உறுதி செய்வார். பின்னர் அவரது உடல் முதல் நாள் நாள் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவரது உடல் சிறையிலிருந்து வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.
உடல் பின்னர் அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படும். மரண தண்டனை இப்படித்தான் செயல்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM