(ஆர்.ராம்)
நாடளவிய ரீதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களை செய்து வரும் நிலையில் அவர்களின் வெளிப்பாடுகளுக்கு அமைவாக அவர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம், வாரமொன்றுக்கான பொருளாதார நிலைமைகள் கையாள்வதற்கான நிதி உள்ளமையால் அதன் பின்னர் நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று ஆளும் தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று மெய்நிகர் வழியில் நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்கண்ட விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டம் தொடர்பில் மேலும் தெரிய வந்துள்ளதாவது,
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கூட்டம் ஆரம்பித்தபோது, அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் முன்வந்து கலந்துரையாடி தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன் மூலமாகவே நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைகளை சுமூகமாக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, பொதுஜனபெரமுனவின் சார்பில் பங்கேற்றிருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர், நாட்டின் பொருளாதார நிலைமைகளை கையாள்வதற்கான நிதிக் கையிருப்பு வாரமொன்றுக்கே போதுமானதாக உள்ளது.
அதன் பின்னர் நிலைமைகள் மோசமானதாகும். அதற்கு முன்னதாக அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கு கலந்துரையாடல்கள் மூலம் அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி தயாராக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளர்ர்.
இதேவேளை, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, பொதுமக்களின் கோரிக்கை ஜனாதிபதியைப் பதவி விலகச் செல்ல வேண்டும் என்பதாகும். அவ்வாறு அவர் பதவி விலகும் பட்சத்தில் நாம் ஆட்சியதிகாரப்பொறுப்பினை ஏற்பதற்கு தயராகவே உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்ட சுமந்திரன், அரசாங்கத்தினை ஸ்தாபிப்பது ஜனாதிபதியினுடைய கடமையாகும். அந்தப்பணியை அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக அவசரகால நிலைமை அமுலில் உள்ளது.
ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாராளுமன்றத்தினை அவசரமாகக் கூட்டி அதில் அவசரகால நிலைமை தொடர்பிலும், நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்தும் உரிய தீர்மானம் எடுக்க வேண்டும்.
மேலும் பாராளுமன்றம் ஜனாதிபதி மீது நம்பிக்கை இல்லை என்பதையும் வெளிப்படுத்த முடியும். அத்துடன் பொதுமக்கள் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரியுள்ள நிலையில் அவர் அதற்கு செவிசாய்த்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ஜே.வி.பின் தலைவர் அநுரகுமாரவும் ஜனாதிபதி பதவி விலகச் செல்லும் வரையில் தமது போராட்டம் தொடரும் என்றும் அதன் பின்னர் அரசாங்கத்தினை அமைத்துக்கொள்வது பற்றிப் பார்த்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டிலான் பெரேரா சஜித்தோ, அநுரவோ, சுமந்திரனோ யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் அதற்கு நாம் ஆதரவளிப்பதற்கு தயராகவே உள்ளோம். குறிப்பாக சிறுபான்மை தேசிய இனத்திலிருந்து சுமந்திரன் அப்பதவிக்கு வந்தால் வரவேற்கத்தக்கது.
எம்மைப்பொறுத்தவரையில் தற்போதைய நெருக்கடிகள் உடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதே கருத்தினை ஆமோதித்து சுதந்திரக்கட்சி சார்பில் பங்கேற்றிருந்த, மஹிந்த அமரவீரவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொருளாதார நெருக்கடிகளை அடுத்து அரசாங்கம் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்தாலும் அரசு ஸ்திரமாக இருந்தது.
தற்போது, அரசாங்கமும் அரசும் ஸ்திரமற்ற நிலைக்கு சென்று விட்டன. பொதுமக்கள் வீதிக்கு இறங்கிவிட்டார்கள். ஆகவே ஜனாதிபதி பதவி விலகுவதே ஒரே தெரிவாக இருக்க முடியும்.
அத்துடன், கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெறுகின்றது என்று அனைத்து மக்களும் அறிந்துள்ள நிலையில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தீர்மானமொன்றை எடுத்து சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டியதை தவிர வேறு எந்தவொரு முறைமையாலும் நிலைமைகளை மாற்றியமைக்க முடியாது என்று ஏனையவர்களும் வலியுறுத்திய நிலையில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு எவ்வளவு காலம் தேவை.
அதற்கான காரணம் என்ன என்பதை பகிரங்கமாக தெரிவிக்கும் பட்சத்தில் கூட அடுத்த கட்டம் பற்றி யோசிக்க முடியும் என்றும் சபாநாயகரிடத்தில் கட்சித்தலைவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பின்னர் பாராளுமன்ற அமர்வு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் செய்யப்பட்டபோது, குறித்த கூட்டம் முறைசாரா கட்சித்தலைவர்கள் கூட்டம் என்றும் பாராளுமன்ற நடவடிக்கைக்குழு கூடவில்லையென்றும் சபாநாயகர் பதிலளித்துள்ளார்.
எனினும், அநுரகுமார, சுமந்திரன் ஆகியோரின் தர்க்கங்களை அடுத்து நாளையதினம் பாராளுமன்ற நடவடிக்கை குழுவினை கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM