இவ்வருடத்தின் மே மாதம் 09ஆம் திகதி என்பது இலங்கையில் ஒரு கறைபடிந்த நாளாகவும் துயரம் நிறைந்த தினமாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
நாட்டில் பல பகுதிகளிலும் பாரியளவிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியதுடன் கடும் பதற்ற நிலைமை நிலவியது. இந்த வன்முறைச் சம்பவங்களில் 250 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர் .
கோடிக்கணக்கான சொத்துக்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. ஆளும் கட்சியின் 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்களின் இல்லங்கள் தீக்கிரையாகியுள்ளன.
அத்துடன் இந்த வன்முறைச் சம்பவங்களில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்ஒருவரும் உயிரிழந்திருக்கின்றார்.
நாட்டில் அவசரகால சட்டம், ஊரடங்கு சட்டம் என்பன அமுலில் இருக்கின்ற நிலையிலேயே இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
வன்முறை ரீதியான அணுகுமுறை எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் துரதிர்ஷ்டவசமாக மே 9ஆம் திகதிமிகப் பாரியளவிலான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எந்தத் தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டாலும் அது கண்டிக்கத்தக்கதாகும். எனவே இந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கின்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். முக்கியமாக இதன் பின்னர் எக்காரணம் கொண்டும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருளுக்கான வரிசை உள்ளிட்ட பல்வேறு சுமைகள் காரணமாகவே மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மார்ச் 30ஆம் திகதி ஜனாதிபதியின் மிரிஹானை இல்லத்திற்கு அருகில் ஆரம்பமான மக்கள் போராட்டம் காலிமுகத்திடல், அலரிமாளிகை வளாகம் பாராளுமன்ற சுற்றுவட்டம் என பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டன.
காலிமுகத்திடல் போராட்டம் கடந்த ஒரு மாதகாலமாக அசம்பாவிதங்களின்றி அமைதியானமுறையில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அதாவது அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் எதிர்க்கட்சியினர் ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும். அதன் பின்னர் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கலாம் என்று வலியுறுத்தி வருகின்றது.
பெளத்த பீடங்கள், சட்டத்தரணிகள் சங்கம் என்பன புதிய பிரதமருடன் சகல கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசாங்கம் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றன.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 40 பேர் கொண்ட அணியும் புதிய பிரதமருடன் இடைக்கால அரசாங்கம் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றது.
இந்த நிலையிலேயே போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற விடயம் ஆளும் கட்சிக்குள்ளேயே வலுவடைந்ததைத் தொடர்ந்து ஜனாதிபதியும் அந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.
அதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலகுவதற்கு தீர்மானித்தார். இதற்கிடையில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அலரிமாளிகைக்கு வருகை தந்து பிரதமருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் பிரதமர் பதவி விலகக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தனர்.
அந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் வெளியே வந்த பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அலரிமாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதன் பின்னர் காலிமுகத்திடல் நோக்கிச் சென்ற அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட வளாகம் கலவரபூமியாக மாறியதுடன் கடும் தாக்குதல்கள் இடம்பெற்றன.
ஒருகட்டத்தில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களை விரட்ட ஆரம்பித்தனர். இதனிடையே காலிமுகத்திடல் போராட்டக் களத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வருகை தந்திருந்தார்.
எனினும் அதன் பின்னர் அந்த இடத்துக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
இதனையடுத்து பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் வருகை தந்த பஸ் வண்டிகள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சில வாகனங்கள் கொழும்பு பேரவாவிக்குள் தள்ளிவிடப்பட்டன.
இவ்வாறு மிகப்பெரியதொரு கலவர நிலைமை கொழும்பில் ஏற்பட்டது. மேலும் அலரிமாளிகையில் பிரதமருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கோறளை நிட்டம்புவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார் .
ஒருவாறு நேற்று முன்தினம் பிற்பகல் ஆகும்போது கொழும்பில் நிலைமை குறிப்பிடத்தக்களவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததுடன் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் மீண்டும் பழைய நிலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் இரவு நேரத்தில் அலரிமாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஒரு நுழைவாயில் உடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து இராணுவத்தினர் ஆர்ப்பாட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர். அந்த சம்பவத்தில் பலர் காயமடைந்ததுடன் ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்.
அதேநேரம் நேற்று முன்தினம் இரவு நாட்டின் பலபகுதிகளிலும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
எம்.பி.க்களான சனத் நிசாந்த, திஸ்ஸ குட்டியராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அனுஷ பெஸ்குவல், பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, சாந்த பண்டார, அருந்திக்க, கனகஹேரத், காமினி லொகுகே , நிமல் லான்சா, பந்துல குணவர்த்தன, நாலக்ககொடகேவா, விமல் வீரவன்ச, சிறிபால கம்லத், கெஹெலியரம்புக்வெல்ல, ரோகித்த அபேகுணவர்த்தன, காஞ்சன விஜேசேகர, துமிந்த திஸாநாயக்க, அலி சப்ரி ரஹீம், எம்.எம். சந்திரசேன, சன்னஜயசுமன ஆகியோரின் இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
அத்துடன் நீர்கொழும்பிலுள்ள ஹோட்டல், வர்த்தக நிலையம், வீரகெட்டிய மெதமுலனவிலுள்ள ராஜபக் ஷவினரின்பூர்வீக வீடு, குருநாகல் மேயர் இல்லம், மொறட்டுவை மேயர் இல்லம் என்பனவும் தீக்கிரையாக்கப்பட்டன. டி.ஏ. ராஜபக் ஷவின் நினைவு தூபியும் இடிக்கப்பட்டது.
ஒரு சில பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதிவாகின. அத்துடன் உயிரிழப்புக்களும் பதிவாகின.
அந்த வகையில் தற்போது இந்த காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வந்ததன் காரணமாகவே இந்த வன்முறைகள் தோற்றம் பெற்றதாக கூறப்படுவதுடன் , இவர்கள் கைது செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகின்றது.
அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கியநாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இது தொ டர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றன.
மிகவும் ஒரு மோசமான வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றமை நாட்டுக்கு மிக பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்்ஷ தற்போது நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆராய்ந்து புதிய சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக தீர்மானிக்க சகல கட்சிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார்.
மேலும் சபாநாயகரும் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
அந்தவகையில் எந்தவொரு கட்டத்திலும் வன்முறைகளைக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அது நாட்டுக்கும் மக்களுக்கும் அழிவையே கொண்டுவரும்.
எனவே எந்தவொரு காரணத்துக்காகவும் எந்தவொரு தரப்பினரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது. யாரும் வன்முறைகளை கையில் எடுக்கவேண்டாம் என காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்ற இளைஞர், யுவதிகளும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இதுபோன்ற வன்முறைகள் நாட்டுக்கு ஒருபோதும் நன்மையை தராது என்பதுடன் அவை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே அதற்கு எந்தவொரு தரப்பினரும் இடமளிக்கக்கூடாது.
இதேவேளை தற்போது புதிய பிரதமர் யார் என்பது தொடர்பான கலந்துரையாடல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல அரசியல் தலைவர்களின் பெயர்கள் தற்போது அலசி ஆராயப்படுகின்றன.
கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா குமாரதுங்க, டலஸ் அழகபெரும உள்ளிட்ட பலரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் கருஜயசூரியவுக்கே பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்து வரும் மணித்தியாலங்கள் தற்போதைய அரசியல் சூழலில் மிகத் தீர்க்கமானதாக இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM