(எம்.மனோசித்ரா)
'மக்களை வதைக்கும் கொலைகார அரசாங்கத்தை விரட்டியடிப்போம் - மக்கள் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்' என்ற தொனிப்பொருளில் இன்று வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஹர்த்தால் போராட்டத்திற்கு சகல தொழிற்சங்கங்களும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.
இன்றைய ஹர்த்தாலுக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் புகையிரத தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளமையால் போக்குவரத்து ஸ்தம்பிதமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக சேவை ஊழியர்களும் ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமையால் அரச சேவை திணைக்களங்களில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவதுறைசார் தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள போதிலும் , நோயாளர்களின் நன்மை கருதி சேவையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தனியார் பேரூந்து
தனியார் பேரூந்துகளுக்கு உரிய முறையில் டீசல் விநியோகிக்கப்படாமை மற்றும் இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் 300 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளமை உள்ளிட்ட காரணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
டீசல் இன்மையின் காரணமாக இன்று மாத்திரமின்றி எதிர்வரும் சில தினங்களுக்கும் தம்மால் பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
புகையிரதம்
ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து புகையிரத சேவையும் ஸ்தம்பிதமடையும் என்று புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.விதானகே தெரிவித்தார். எனவே புகையிரத நிலையங்களுக்கு வந்து அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பயணிகளைக் கேட்டுக் கொண்டார்.
தபால் சேவை
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு பிரதிபலிப்பாக உறுப்பினர்கள் சிலர் அங்குமிங்கும் மாற்றப்பட்டுள்ளனர். நாம் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல. எனவே அரசாங்கத்தை மீண்டும் பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்' என்று அகில இலங்கை தபால் சேவை தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
அரச தாதிகள் சங்கம்
'இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்களும் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு மருத்துவதுறை சார் தொழிற்சங்கங்கள் முழுமையான ஆதரவை வழங்கும். எனினும் நோயாளர்களின் நலன் கருதி பணிக்கு சமூகமளித்தமையை உறுதிப்படுத்தும் நாளாந்த வரவு சீட்டில் கையெழுத்திடாமல் நோயாளர்களுக்கான சேவை வழங்கப்படும்' என்று அரச தாதிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி
ஹர்த்தால் போராட்டத்திற்கு அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவளிப்பர். அதற்கமைய அதிபர் , ஆசிரியர்களை பாடசாலைகளுக்குச் செல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகாவிட்டால் நாம் அவர்களை பதவி விலகச் செய்வோம். இவர்களை பதவி விலக்குவதற்காக நாட்டிலுள்ள சகல மீனவர் சங்கங்களும் ஹர்த்ததாலுக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் செயற்படும் தொழிற்சங்கங்கள் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM