இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுக்களை மக்கள் மத்தியில் அதிகளவில் கேட்கக் கூடியதாக உள்ளது.
இன்று ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் என்பன குறித்து இன்னும் மக்கள் மத்தியில் பூரண அறிவின்மையே நிலவுகின்றது.
ஆனால், முன்பெல்லாம் இந்த வார்த்தைகளையே பலரும் அறிந்திருக்கவில்லை. இன்று எல்லோரும் இது குறித்த செய்திகளை ஓரளவு அறிந்திருக்கின்றனர். இருப்பினும் இது பற்றிய பூரண தெளிவு இன்னும் நம்மில் பலரிடம் இருப்பதில்லை.
புவி வெப்பமடைதல் என்பது வளிமண்டலத்தில் காபனீரொட்சைட், காபனோரொட்சைட் போன்ற பசுங்குடில் வாயுக்கள் அதாவது, புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் அதிகரிப்பதனால் புவி இயல்புக்கு மாறாக வெப்பமடைவதே புவி வெப்பமடைதல் ஆகும்.
கடந்த நூறு ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை 1.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்த குறிப்பிட்ட நூறு வருட காலத்துக்குள் பெற்றோல், டீசல், நிலக்கரி போன்ற எரிபொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தியதும், காடழிப்பும், வெப்ப வாயுக்களை அதிகளவில் வெளிவிடும் தொழிற்சாலைகள் அதிகரித்ததுமே இதற்கான முக்கிய காரணங்களாகும்.
காலநிலை மாற்றம் எனப்படுவது புவி வெப்பமடைவதனாலேயே நிகழ்கின்றது. புவி வெப்பமடைவதால் புவியின் பருவ காலநிலை, தற்பவெப்பநிலை, இயற்கை சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றம் ஆகும்.
புவியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஒரு போர்வை போல காணப்படும் நீராவி, காபனீரொட்சைட், மீத்தேன், நைதரசன் ஒட்சைட் உள்ளிட்ட கரியமில வாயுக்கள் சூரிய வெப்பத்தை பூமிக்குள் அனுமதிக்கின்றன.
ஆனால், பூமியின் மேல் பரப்பில் இருந்து எதிரொலிக்கப்படும் வெப்பத்தை விண்வெளிக்கு அனுமதிக்காமல் தடுத்து பூமிக்கே திரும்ப அனுப்புகின்றன.
இதனாலேயே புவி கூடுதல் வெப்பமடைக்கிறது. க்ரீன் ஹவுஸ் எனப்படும் கண்ணாடி கூடு போல இந்த வாயுக்கள் செயற்பட்டு புவியை வெப்பமடைய செய்வதால் இந்த செயற்பாட்டை பச்சைவீட்டு விளைவு என அழைக்கின்றோம்.
வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் இல்லை என்றால் புவியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
அப்போது எல்லாம் உறைந்த நிலையில் இருக்கும், இங்கு உயிரினங்கள் வாழ முடியாத நிலை உருவாகும். எனவே, பூமியில் உயிரினங்களின் நீடிப்புக்கு பசுங்குடில் விளைவு அவசியமானதே.
ஆனால், தொழில் புரட்சிக்கு பின்னர் பசுங்குடில் வாயுக்களின் வெளியீடு எல்லை கடந்து அதிகரித்து விட்டதால் அவற்றின் அடர்த்தி அதிகரித்து அதிக வெப்பத்தை பிடித்து வைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டன. இதுவே இன்று உலகை அச்சுறுத்தும் அசுரனாக வளர்ச்சிபெற்று விட்டது.
நிலத்தில் இருந்த தாவரங்கள் கடலில் இருந்த உயிரினங்கள் நிலத்துக்கு அடியில் புதைந்து, கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு மக்கும்போது காபனை மூலப்பொருளாகக் கொண்ட நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை உருவாகின்றன.
இவற்றை அதிகளவில் பயன்படுத்துவதால் புவியை வெப்பமடையச் செய்யும் பசுங்குடில் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுகின்றன.
புவி வெப்பமடைதலால் புவியின் சராசரி வெப்பநிலை 1.6 டிகிரி செல்சியல் அளவு அதிகரித்திருக்கிறது. அதனால் பனிப்பாறைகள் உருகி 3.2 மி.மீ அளவு கடல் மட்டம் உயர்வடைந்திருக்கிறது.
சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை வளிமண்டலத்துக்கு பிரதிபலிப்பதில் பனிப்பாறைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
பனிப்பாறைகள் உருகுவதனால் வெப்பம் நிலத்திலேயே உள்வாங்கப்பட்டு, புவி மேலும் வெப்பமடைக்கிறது. புவி வெப்பமடைவதனால் நேரடியாக விலங்குகளே அதிகம் பாதிக்கப்படுகின்றது.
எல்லா விலங்கினங்களாலும் எல்லா சூழ்நிலைகளிலும் வாழ முடிவதில்லை. குளிர் பிரதேசத்தில் வாழும் விலங்குகள் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் அழியும் நிலை கூட உருவாகின்றமை மிகவும் வருந்தத்தக்கது.
மேலும் புவி வெப்பமடைவதனால் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்படுகிறது. சில இடங்களில் அளவுக்கு அதிகமாக கடுமையான மழைவீழ்ச்சி ஏற்படுவதுடன், சில இடங்களில் கொஞ்சமும் மழை இன்றி கடுமையான வறட்சி நிலவுகின்றது.
இதனால் பயிர்கள் செழிக்காமல் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உணவுக்கு பஞ்சம் ஏற்படுகிறது. இதனாலும் அதிகளவில் பாதிக்கப்படுவது விலங்குகளே.
இதே நிலையில் புவி தொடர்ந்து வெப்பமடைந்தால் அடுத்த நூறு ஆண்டுகளில் 26இல் இருந்து 82 செ.மீ வரை கடல் மட்டம் உயரக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலை தொடர்ந்தால் புயல்களும், சூறாவளிகளும் வலுப்பெரும். எதிர்காலத்தில் உணவுக்கும் நீருக்கும் பஞ்சம் ஏற்படும். இதனால் அதிகளவில் உயிரினங்கள் அழிய நேரிடும். இதன் உச்ச கட்டத்தில் மனித இனம் முழுமையாக இல்லாமல் போகக் கூடும்.
இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் நாம் அழியப்போவது உறுதி. இவ் உலகில் மனித இனம் நீடித்து நிலைக்க வேண்டுமாயின் புவி வெப்பமடைவது குறித்து ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயற்பட வேண்டியது அவசியம்.
காபன் வெளியேற்றத்தை குறைக்கவும் பசுங்குடில் வாயுக்களின் அளவை குறைக்கவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தனித் தனி வாகனங்களை பயன்படுத்துவதை இயன்றளவு குறைத்து பொது போக்குவரத்தை பயன்படுத்துவது, வீட்டில் உபயோகப்படுத்தும் ஏ.சி, குளிர்சாதன பெட்டி போன்றவற்றின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்கலாம்.
காடழிப்பை முற்றாக தடை செய்தல், அதிகளவில் மரங்களை நடுதல் மூலம் புவி வெப்பமடைவதை தடுக்கலாம் என்பது நம்மில் பலரும் அறிந்ததே.
இப்போது மக்களில் பலருக்கு பிரச்சினையும் தெரியும்,அதற்கான தீர்வும் தெரியும். ஆனால், அதனை செயற்படுத்த மட்டுமே மறுக்கின்றோம் என்பதே மெய். பூனைக்கு யார் மணி கட்டுவது போன்ற அவல நிலையிலேயே இன்று உலகம் இருக்கிறது.
இந்த நிலையை ஒவ்வொருவரும் மனதால் உணர்ந்து மாற்றினால் நிச்சயம் பெரிய மாற்றம் உருவாகும். புவி வெப்பமடைவதை எம்மால் குறைக்க முடியும்.
இன்னும் ஏதோ கிரகத்தில் யாருக்கோ புவி வெப்பமடைவதால் பிரச்சினை அது நம்மை என்ன செய்யும் என்ற கனவு உலகத்தில் இருந்தோமானால், கூண்டோடு அழியப் போவது உறுதி. இந்த கனவு உலகத்தில் இருந்து கண் விழிக்கவில்லை என்றால் மனித இனம் நிரந்தரமாக கண்மூட வேண்டிய துர்பாக்கிய நிலை உருவாக போவது நிச்சயம்.
(எஸ். வினோஜா)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM