(எம்.மனோசித்ரா)
நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் உள்ளதை நேர்மையாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் வெளிகளில் நிற்கும் வெறும் பொம்மைகளாகவே இன்று நாம் உள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாக பதவி விலகி தேசிய ஒழுங்குபத்திரத்திற்கு அமைய சர்வ கட்சி புதிய அரசாங்கத்தை அமைத்து அனைவரும் ஒன்றிணைந்து சவாலை வெற்றி கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
வரலாற்றில் என்றும் இல்லாத அரசியல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த கடிதத்தின் ஊடாக உங்களை பொறுப்புள்ள பிரஜை என்ற வகையில் தொடர்ப்பு கொள்கின்றேன்.
அதே போன்று 69 இலட்ச மக்கள் ஆணையை துஷ்பிரயோகம் செய்யாத மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் சில விடயங்களை குறிப்பிட வேண்டியது சிறப்பானதாகும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலக்கிற்காக அனைத்தையும் தியாகம் செய்யக் கூடிய மனித நேயம் மிக்க ஒருவராக இந்த விடயத்தைக் கூறுகின்றேன்.
இரண்டான்டுகளுக்கு முன்பு நாட்டு மக்கள் எம்மீது வைத்த பெரும் நம்பிக்கை இன்று சரிவடைந்துள்ளது.
இதற்கான காரணத்தை நாம் நேர்மையாகக் கண்டறிய வேண்டும். தற்போதைய நெருக்கடிக்கு எம்மை போன்று கடந்த 4 தசாப்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த தூர நோக்கமற்ற கொள்கைகளின் பிரதிபலிப்புகளையே இன்று அனுபவிக்கின்றோம். இவ்வாறான முறைகேடான நிதி நிர்வாகத்தினால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கபபட்டுள்ளது.
இதனை மறுசீரமைக்கும் சவாலை பொறுப்பேற்றுள்ள தற்போதைய நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்க உட்பட அனைத்து அதிகாரிகளும் மக்களின் உண்மையான நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.
இறுதியாக நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் உள்ளதை நேர்மையாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று ஒரு பாரிய அரசியல் சவாலாக மக்களின் போராட்டங்கள் அமைந்துள்ளன.
இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் தூர நோக்கமற்ற தீர்மானங்களிலிருந்து விலக வேண்டும் என்பது பலரினதும் வலியுறுத்தலாக உள்ளது.
அறுவடையைப் பெற்ற பின் விவசாயி வீட்டை நோக்கி செல்லும் போது வயல்வெளியில் பொம்மைகள் எஞ்சி நிற்கும்.
கடந்த பல தசாப்த காலமாக ஆட்சியாளர்களால் நாட்டுக்கு விட்டுச்சென்ற அடையாளமாகவே இவை உள்ளன.
அந்த வகையில் அரசியல் வெளிகளில் நிற்கும் பொம்மைகளாகவே இன்று நாமும் உள்ளோம். எமக்கு அதிகாரத்தை வழங்க பெரும் பங்களிப்பு செய்த தேசிய மற்றும் சர்வதேச நாடுகளில் உள்ள இலங்கை மக்கள் மற்றும் ஏனைய கட்டமைப்புக்கள் இன்று எம்மை நிராகரிக்கின்றன. இவ்வாறு பங்களிப்பு செய்தவர்களுக்கு இன்று நெருக்கடியான நிலைமையே ஏற்பட்டுள்ளது.
வரலாற்றில் அதிக இளம் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிப்பதற்கு நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் , அது காலம் கடந்த தீர்மானமாகும்.
எனவே பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்கான அமைச்சரவையை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் .
அதற்கமைய தற்போது உடன் செய்ய வேண்டியது பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உடனடியாக பதவி விலகி தேசிய ஒழுங்குபத்திரத்திற்கு அமைய சர்வ கட்சி புதிய அரசாங்கத்தை அமைத்து. இந்த சவாலை அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி கொள்ள வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறான சவால் மிக்க அரசியல் தீர்மானத்திற்கு செல்லும் போது , ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினரின் பொறுப்பற்ற செயற்பாட்டையும் சமூகம் தெரிந்து கொண்டுள்ளது.
பொறுப்பற்ற அரசாங்கத்திலும் , எதிர்க்கட்சியிலும் உறுப்பினர்களாக செயற்படுவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை.
225 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான கருத்துக்கள் யதார்த்தமானவையாகும். மக்களின் மனசாட்சிக்கமைய ஆட்சியாளர்களும் செயற்பட வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM