பல கோரிக்கைகளை முன்வைத்து அட்டன் டிக்கோயாவில் சாலை மறியல் போராட்டம்

Published By: Digital Desk 4

21 Apr, 2022 | 03:34 PM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், கேகாலை ரம்புக்கனை பகுதியில் உயிரிழந்த நபருக்கு நீதி வேண்டியும், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும்  அட்டன் – டிக்கோயா நகரில் இன்று (21.04.2022) மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. 

அட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்தும்,   கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர். வீதியை வழிமறித்ததன் காரணமாக அட்டன் பொகவந்தலாவ, அட்டன் மஸ்கெலியா, அட்டன் போடைஸ் வழியான போக்குவரத்து, அட்டன் சாமிமலை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.

டிக்கோயா தோட்டம், டிக்கோயா வனராஜா, அட்டன் பன்மூர், டிக்கோயாவை சூழவுள்ள பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

மக்களை வதைக்கும் இந்த அரசு வீடு செல்ல வேண்டும், ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பினர். டிக்கோயா நகரிலுள்ள பல வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது ஆதரவை வழங்கினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்