(என்.வீ.ஏ.)
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக மும்பை, ப்றேபோர்ன் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ஜொஸ் பட்லர் குவித்த சதமும், யுஸ்வேந்த்ர சஹாலின் ஹெட்-ட்ரிக் அடங்கிய 5 விக்கெட் குவியலும் ராஜஸ்தான் றோயல்ஸுக்கு இறுக்கமான 7 ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.
ஆரொன் பின்ச், அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் கடைசிக் கட்டத்தில் உமேஷ் யாதவ்வின் அதிரடியும் போட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியபோதிலும் கணிசமான மொத்த எண்ணிக்கையை கொல்கத்தாவால் எட்ட முடியாமல் போனது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 217 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் ஜொஸ் பட்லர் நடப்பு பருவ காலத்தில் தனது 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் கடந்த 7 ஐபிஎல் போட்டிகளில் அவர் பெற்ற 3 ஆவது சதம் இதுவாகும்.
எதிரணி பந்துவீச்சாளர்களில் சுனில் நரேனை மாத்திரம் எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்ட பட்லர், ஏனையவர்களை இலகுவாக எதிர்கொண்டு 61 பந்துகளில் 9 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 103 ஓட்டங்களைப் பெற்றார்.
24 ஓட்டங்களைப் பெற்ற தேவ்தத் படிக்கல்லுடன் ஜொஸ் பட்லர் 58 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.
அணித் தலைவர் சஞ்சு செம்சன் 38 ஓட்டங்களைப பெற்று பட்லருடன் 2ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஷிம்ரன் ஹெட்மியர் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் சுனில் நரேன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
218 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்ளையும் இழந்து 210 ஓட்டங்களைப் பெற்று 8 ஒட்டங்களால் வெற்றி இலக்கை அடையத் தவறியது.
அதிரடியாக ஓட்டங்களைக் குவிப்பதற்காக ஆரம்ப வீரராக ஆடுகளம் நுழைந்த சுனில் நரேன், இல்லாத ஓர் ஓட்டத்தைப் பெற முயற்சித்து முதல் பந்திலேயே ஹெட்மயரினால் நேரடியாக ரன் அவுட் ஆக்கப்பட்டார்.
இது கொல்கத்தாவுக்கு பேரிடியாக அமைந்த போதிலும் ஆரொன் பின்ச், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினர்.
அவர்கள் இருவரும் 53 பந்துகளில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஆரொன் பின்ச் 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 9 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களை யும் விளாசியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து நிட்டிஷ் ரானா (18), அண்ட்ரே ரசல் (0), வெங்கடேஷ் ஐயர் (6) ஆகியோர் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.
மொத்த எண்ணிக்கை 180 ஓட்டங்களாக இருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மவி, பெட் கமின்ஸ் ஆகியோரின் விக்கெட்களை ஹெட்-ட்ரிக் முறையில் யுஸ்வேந்த்ர சஹால் வீழ்த்தி ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். இந்த 3 விக்கெட்களுடன் சஹால் 5 விக்கெட்களைப் பூர்த்தி செய்தார்.
இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இதுவே முதலாவது 5 விக்கெட் குவியலாக பதிவானது. 120 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சஹால பதிவு செய்த முதலாவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.
ஷ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 85 ஓட்டங்களைக் குவித்தார்.
9 ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ஷெல்டன் ஜெக்ஸனும் உமேஷ் யாதவ்வும் 29 ஓட்டங்களை வேகமாகப் பகிர்ந்து கொல்கத்தாவுக்கு சிறு நம்பிக்கையை ஊட்டினர். ஆனால், ஒபெட் மெக்கோயின் கடைசி ஓவரில் அவர்கள் இருவரும் ஆட்டமிழக்க ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM