–ரொபட் அன்டனி–
வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து மத்திய வங்கியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் சர்வதேச கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்துவதை இடைநிறுத்துவதன் மூலம் எஞ்சுகின்ற நிதி அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதிக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சு என்பன அறிவித்துள்ளன.
வெளிநாட்டுப் பொதுக்கடன்களை உரிய காலப்பகுதியில் மீளச்செலுத்தமுடியாத நிலையேற்பட்டுள்ளது. இலங்கையின் கடன் மீள்செலுத்துகை நிலைவரம் நிறைபேறற்றதாகக் காணப்படுவதாகக் கடந்த மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்திருந்தது.
செயற்திறன்மிக்க கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளவேண்டியது தற்போது மிகவும் அவசியமானதாக மாறியிருக்கின்றது. இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட இலங்கை பொருளாதார மீட்சி செயற்றிட்டத்தைத் தயாரிப்பதற்கான அனுசரணையைப் பெற்றுக்கொள்வதற்கும் கடனுதவி பெறுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தை நாடியது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே நிலுவையிலுள்ள வெளிநாட்டுக்கடன்களின் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பொருளாதாரமீட்சி செயற்றிட்டத்தை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் மத்திய வங்கியும் நிதியமைச்சும் அறிவித்துள்ளன.
அந்தவகையில் இலங்கை தற்போது வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத நாடாக உத்தியோகபூர்வமாக பிரதானப்படுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதாவது இலங்கையானது தற்போது பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக பொருளாதாரத்துறை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சிகளும் இதனை கடுமையாக விமர்சித்துள்ளன.
அதாவது இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாக எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் கடந்த காலம் முழுவதுமாக அரசாங்கம் இவ்வாறு வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
காரணம் அந்த நிதியை வைத்து தற்போது நாட்டில் காணப்படுகின்ற அத்தியாவசிய பொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாணலாம். அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்ற விடயம் கூறப்பட்டு வந்தது. அந்தவகையில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
முக்கியமாக முதலாவதாக வட்டி வீதத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை அவர் எடுத்திருந்தார். 7 வீதத்திலிருந்து 14.5 வீதமாக வட்டி வீதத்தை அதிகரித்தார்.
அதேபோன்று தற்போது வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்துவதை இடைநிறுத்தியிருக்கின்றார். அதுமட்டுமன்றி சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவான முறையில் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் அதிரடியான சில நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதை காணமுடிகிறது.
சர்வதேச கடன்களை செலுத்த முடியாது என்று ஒரு நாடு அறிவிப்பு செய்வதானது பொருளாதார ரீதியான மிகவும் ஒரு பாதகமான அதலபாதாளமான நிலைமையை எடுத்துக் காட்டுகின்றது.
இந்த நிலையில் அவ்வாறான சூழலில் ஒரு நாடானது உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாடி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கை எட்டப்பட்டதும் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பான ஒரு ஆக்கபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கும்.
அதாவது இலங்கையானது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவதால் இலங்கை கடன்களை மீள் செலுத்துவதை தாமதப்படுத்துவது பிரச்சினை இல்லை என்ற ஒரு நிலைப்பாட்டுக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் வரும். இலங்கையின் கடன் நிலைமையை எடுத்து நோக்கும் போது வெளிநாட்டு கடன்களுள் 60 வீதமானவை இறைமை பிணை முறிகளாகவே காணப்படுகின்றன.
அதாவது இரு நாடுகளுக்கிடையில் பெறப்படுகின்ற கடன்களைவிட பிணை முறிகளின் ஊடாக பெறப்படுகின்ற கடன்களே அதிகமாக இருக்கின்றன.
எனவே அவற்றை மீள செலுத்தாமல் இருப்பது ஒரு பாதகமான நிலையை எடுத்துக்காட்டும். ஆனால் இலங்கை தற்போது ஒரு நெருக்கடியில் இருக்கின்றது என்பதாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இதற்கு தீர்வு காண முயற்சிகள் எடுப்பதாலும் இந்த பிரச்சினை தொடர்பாக சர்வதேச நிதி நிறுவனங்கள் சாதகமான நிலைப்பாட்டுக்கு வரலாம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் ஒரு உடன்பாட்டுக்கு வராமல் உடன்படிக்கையை செய்து கொள்ளாமல் சர்வதேச நாடுகளுடன் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே இந்த தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கின்றது.
இதேவேளை சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான பிட்ச் நிறுவனம் இலங்கையின் கடன் செலுத்தும் இயலுமையை சிசி என்ற நிலையிலிருந்து தற்போது சி என்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அதாவது மேலும் இலங்கையை கடன் மீள் செலுத்தும் இடத்திலிருந்து தரமிறக்கியுள்ளது.
இந்த அறிக்கை ஆச்சரியமானது அல்ல. காரணம் இலங்கையின் கடன் மீள் செலுத்த இயலுமை ஸ்தம்பித்துள்ளது. இலங்கையே தற்போது கடன்களை செலுத்த முடியாது என்று அறிவித்திருக்கிறது. பிட்ச் நிறுவனம் என்பது உலக நாடுகளின் பொருளாதார நிலைமை மற்றும் நிதி நிலைமை, டொலர் நிதி நிலைமை, வெளிநாட்டு கையிருப்பு மற்றும் அந்த நாட்டினால் கடன்களைப் பெற்றால் கடன்களை மீள்செலுத்த முடியுமா என்பது தொடர்பாக மதிப்பீடு செய்து குறிகாட்டிகளை வெளியிடுகின்ற நிறுவனமாக இருக்கிறது. அதனடிப்படையில் இலங்கையின் வெளிநாட்டு கடன்களை மீள்செலுத்தும் இயலுமையானது மிக மோசமாக இருப்பதாக பிட்ச் நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
மேலும் மே மாதம் ஆகும்போது இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் ரூபா நிதியுதவி முடிவடைகின்றது. அதனால் மே மாதம் முடிவின் பின்னர் இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு டொலர் இல்லை. எனவே ஜூன் மாதத்திலிருந்து இலங்கை பாரியதொரு எரிபொருள் மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார்.
தற்போது இலங்கையில் கையிருப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதாவது இலங்கை மத்திய வங்கியிடம் 2 பில்லியன் டொலர் அளவுக்கு வெளிநாட்டு கையிருப்பு இருந்தாலும்கூட அதில் பயன்படுத்தக்கூடிய இயலுமை அல்லது திரவத்தன்மையானது மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அது மிகவும் ஒரு அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் ரணில் விக்கிரமசிங்க கூறுவது போன்று மே மாதம் முடிவின் பின்னர் இலங்கை மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கும். அதாவது அத்தியாவசிய பொருள் இறக்குமதி மற்றும் எரிபொருள் விடயங்களில் மிகப்பெரிய ஒரு சிக்கலை எதிர்கொள்ளக்கூடிய நிலையிலேயே இலங்கை உள்ளது.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்தி விரைவாக கடன்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நிதி அமைச்சர் சப்ரி மற்றும் மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் உள்ளிட்டோர் 18ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் பயணமாக இருக்கின்றனர்.
அங்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய நிதியுதவி தொடர்பாக ஆராயவுள்ளனர். சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு குழுவை நியமிக்கும்.
அந்த குழு இலங்கை வந்து நிலைமைகளை ஆராய்ந்து நிபந்தனைகளை விதிக்கும். அந்த நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவிகளை வழங்கும். அதன்படி இலங்கையானது சர்வதேச நாணய நிதியத்திடம் 4 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் சப்ரி தெரிவித்திருக்கிறார்.
அவ்வாறு ஜூன் மாதமாகும்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவிகள் இலங்கைக்கு வழங்கப்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்டால் மட்டுமே இலங்கையினால் ஜூன் மாதத்திலிருந்து அத்தியாவசிய சேவைகளை கொண்டு செல்ல முடியும். இல்லாவிடில் மிகவும் நெருக்கடியான நிலைமை ஏற்படும். அத்தியாவசிய தேவைகள், அத்தியாவசிய பொருள் வருகை தாமதமடையும். அது மேலும் நெருக்கடியை நாட்டில் ஏற்படுத்தும்.
அதுமட்டுமன்றி இந்தியா ஏற்கனவே வழங்கிய ஒரு பில்லியன் டொலர் உதவி மே மாத இறுதியுடன் முடிவடைகிறது. எனினும் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு இந்தியாவானது இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த விடயம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எப்படியிருப்பினும் இந்தியா அந்த இரண்டு பில்லியன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி சீனாவிடம் இலங்கை 2.5 பில்லியன் டொலர் உதவியை கோரியிருக்கின்றது. அந்த உதவியை சீனா வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அது தொடர்பாகவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் பொருளாதார ரீதியில் வெளிநாட்டு வர்த்தக விடயத்தில் மிகப்பெரிய ஒரு நெருக்கடியான நிலையில் இலங்கை இருக்கின்றது.
இது தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைகளை முன்வைக்கின்றனர். சர்வதேச நிதி நிறுவனங்கள் தமது யோசனைகளை முன்வைக்கின்றன. கடந்த பத்து மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியிருந்தால் இவ்வாறு ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்பதே சகல தரப்பினராலும் கூறப்படுகின்ற விடயமாக இருக்கின்றது.
இந்த பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பொருளாதார ரீதியான ஸ்திரத்தன்மை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அவசியமானது. எனவே இது தொடர்பாக சகலரும் கவனம் செலுத்த வேண்டும். இந்த நெருக்கடி நிலைமை தொடர்பாக கவனம் செலுத்தி மக்களின் பிரச்சினைகளை நெருக்கடிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பது முக்கியமாகும்.
எவ்வாறான பிரச்சினைகள் எமக்கு முன் இருக்கின்றன என்பது தெரிகின்றது. அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் எமக்கு தெரிகின்றன. எனவே சரியான முறையில் தேவையான நடவடிக்கைகளை பிரயோகித்து விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதும் தீர்மானம் எடுப்பதுமே முக்கியமாக இருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM