(என்.வீ.ஏ.)
ஷிவம் டுபே, ரொபின் உத்தப்பா ஆகியோரது அபரா அதிரடி அரைச் சதங்களும் இலங்கை சுழல்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவின் 4 விக்கெட் குவியலும் நடப்பு ஐபிஎல் இருபது 20 அத்தியாயத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு முதலாவது வெற்றியை ஈட்டிக்கொடுக்க உதவின.
இந்த வருடம் தனது முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளைத் தழுவிவந்த சென்னை சுப்பர் கிங்ஸ், புனே, டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (12) நடைபெற்ற இரவு போட்டியில் பலம்வாய்ந்த றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 23 ஓட்டங்களால் வீழ்த்தி தனது முதல் வெற்றியை சுவைத்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 216 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர்களில் ஒருவரான ருத்துராஜ் கய்க்வாட் (17), 3ஆம் இலக்க வீரர் மொயீன் அலி (3) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது (6.4 ஓவர்களில் 36 - 2 விக்.) சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றொரு தோல்வியைத் தழுவப் போகிறதோ என எண்ணவைத்தது.
ஆனால், அனுபவசாலியான ஆரம்ப வீரர் ரொபின் உத்தப்பாவும் 4ஆம் இலக்க வீரர் ஷிவம் டுபேயும் மேலும் விக்கெட்கள் சரிவதை தடுக்கும் வகையில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய வண்ணம் இருந்தனர்.
இதன் காரணமாக 10 ஓவர்கள் நிறைவில் சென்னை சுப்பர் கிங்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
ஆனால், அதன் பின்னர் எதிரணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம்செய்த உத்தப்பாவும் டுபேயும் 3ஆவது விக்கெட்டில் 73 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 165 ஓட்டஙகளைப் பகிர்ந்து தமது அணி 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
சென்னை சுப்பர் கிங்ஸின் இன்னிங்ஸில் பவுண்ட்றிகளை விட சிக்ஸ்களே அதிகம் விளாசப்பட்டதுடன் கடைசி 10 ஓவர்களில் 154 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.
ரொபின் உத்தப்பா 50 பந்துகளில் 9 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது களைப்பு காரணமாக சோர்வான அடி மூலம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களம் புகுந்த அணித் தலைவர் ரவிந்த்ர ஜடேஜா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து சென்றார்.
தனது 4ஆவது ஓவரின் கடைசி 2 பந்துகளில் உத்தப்பா, ஜடேஜா ஆகிய இருவரினதும் விக்கெட்களை கைப்பற்றிய இலங்கையின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க டி சில்வா, அடுத்த போட்டியில் வீசும் முதல் பந்து அவருக்கு ஹெட்-ட்ரிக்கை பூர்த்தி செய்துகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வெண்டும்.
ஷிவம் டுபே 46 பந்துகளில் 8 சிக்ஸ்கள், 5 பவுண்டறிகள் அடங்கலாக 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
இவர்களை விட ருத்துராஜ் 3 பவுண்டறிகளை அடித்திருந்தார்.
ஜொஷ் ஹேஸல்வுடின் கடைசிப் பந்தில் சிக்ஸ் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்ய டுபெ முயற்சித்தபோதிலும் அது கைகூடவில்லை. அவர் அடித்த பந்து நேராக பவ் டு ப்ளெசிஸின் கைகளை நோக்கி சென்றது. ஆனால், டு ப்ளெசிஸ் பிடித்த பந்து நழுவி தரையில் வீழ்ந்தது.
கடைசி ஓவரில் துடுப்பெடுத்தாட வந்த எம்.எஸ். தோனி ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.
பவ் டு ப்ளெசிஸ் (8), விராத் கோஹ்லி (1), அனுஜ் ராவத் (12) க்ளென் மெக்ஸ்வெல் (26) ஆகிய நால்வரும் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறிய நிலையில் 7ஆவது ஓவரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதன பின்னர் ஷர்பாஸ் அஹ்மத் (41), சுயாஷ் ப்ரபுதேசாய் (34) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்ட முயற்சித்தனர்.
ஆனால், 36 ஓட்டங்கள் வித்தியசாத்தில் ப்ரபுதேசாய், ஷர்பாஸ், வனிந்த ஹசரங்க (7), ஆகாஷ் தீப் (0) ஆகியோர் களம் விட்டகழ றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆட்டம் கண்டது.
எனினும் தினேஷ் கார்த்திக் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்ததால் அவ்வணி வெற்றிபெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இவ் வருடம் தனது முதல் நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் இந்தப் பொட்டியில் முதல் தடவையாக ஆட்டமிழந்தார். 14 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 34 ஒட்டங்களுடன் கார்த்திக் ஆட்டமிழந்ததும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அற்பசொற்ப நம்பிக்கையும் அற்றுப் போனது.
மொஹமத் சிராஜ் 14 ஓட்டங்களுடனும் ஜொஷ் ஹேஸ்ல்வுட் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஷிவம் டுபே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM