(எம்.மனோசித்ரா)
கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் போன்ற பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு , அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் , வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரு தினங்களாகப் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மலர் வலயம் வைத்து , மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பினை வெளியிட்டமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
புத்தாண்டை இங்கு கொண்டாடுவோம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் , யுவதிகள் தாம் தமிழ் - சிங்கள புத்தாண்டையும் இந்த இடத்திலேயே கொண்டாடுவோம் என்று அறிவித்துள்ளனர். அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் , சகோதரத்துவத்துடனும் போராட்டத்தையும் கைவிடாது , அதே வேளை புத்தாண்டையும் கொண்டாட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
இரவு நேரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையால் கொழும்பு - காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கடந்த மூன்று நாட்களிலும் அப்பகுதியில் எவ்வித அமைதியற்ற நிலைமையோ அல்லது வன்முறைகளோ பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடமாடும் மலசலகூடங்கள்
தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவோரின் நலன் கருதி உணவு மற்றும் குடிநீர் என்பவை வழங்கப்படுவதோடு மாத்திரமின்றி , சமூக சேவையாளர்களால் நடமாடும் மலசலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நவீன முறையில் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பலராலும் வரவேற்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி மருத்துவ முதலுதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
பாராளுமன்றத்திடம் அதிகாரத்தை வழங்குங்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருக்கும் வரை எமது போராட்டம் ஓயப் போவதில்லை. அவர் பதவிலியிருந்து விலகி பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கையளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யப்படும் தலைவரால் நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர் யுவதிகள் தெரிவித்தனர்.
அவ்வாறில்லை எனில் தமது கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மக்கள் அனைவரும் தற்போது எச்சரிக்கையாகவே உள்ளனர். இனிமேலும் முட்டாள்களாக யாரும் தயாராக இல்லை. இதற்காக மரணிக்கவும் தயாராகவே உள்ளோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
ஏனைய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள்
இது தவிர நேற்றைய தினம் நாட்டின் மேலும் பல பகுதிகளிலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய திருகோணமலை மகாசங்கத்தினரின் ஏற்பாட்டடில் எதிர்ப்பு பேரணியும் , ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இதில் பெருமளவான இளைஞர் யுவதிகளும் பங்குபற்றினர். மேலும் காலி , அரகலன்வில, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வெளிநாட்டவர்களும் ஆர்ப்பாட்டம்
இதே வேளை அம்பலாங்கொட - கஹவ பிரதேசத்தில் கஹவ பாலத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் , 'நான் கடந்த 3 வாரங்களாக இலங்கையில் தங்கியுள்ளேன். இங்கு தினந்தோரும் மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது. எரிபொருள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்த நெருக்கடி நிலைமை மேலும் மேலும் அதிகரிப்பதையே அவதானிக்க முடிகிறது.' என்று குறிப்பிட்டு 'கோ ஹோம் கோட்டா' என்று கோஷமளித்தனர்.
வெளிநாடுகளிலும் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளும் அந்நாடுகளில் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்மைய இன்றைய தினம் இத்தாலி - மிலானோ நகர் , வெரோனா, பேர்கமோ, இங்கிலாந்தின் ஹென்லி, பிரிஸ்டல், கனடா, பிரஸ்பேன் உள்ளிட்ட பல நாடுகளிலும் இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM