(எம்.எப்.எம்.பஸீர்)
நான்கு ஆண்டுகளில் 1,000 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட போதைப் பொருளை நாட்டுக்குள் தருவித்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலக குழு உறுப்பினரும் போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான 'தெமட்டகொடை ருவன்' எனும் பெயரால் அறியப்படும் ருவன் சமில பிரசன்ன கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பிணைப் பெற்றுத் தருவதற்கு என சுமார் ஒன்றரைக் கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் செயலாளர்களில் ஒருவர் என அடையாளப்படுத்தப்படும் நபர் உட்பட மூவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் சஞ்சீவ ரத்நாயக்க நேற்று உத்தரவிட்டார்.
பொது மக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவின் செயலர்களில் ஒருவர் எனக் கூறப்படும் மாலபே பகுதியைச் சேர்ந்த காஞ்சன எரிக் சிங்ஹாரகே, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர் ஆர். துமிந்த சில்வாவின் இணைப்புச் செயலர் என கூறப்படும் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த மீரா சாஹிபு மொஹம்மட் மொஹிதீன் சப்ராஸ் மற்றும் அவரது மனைவியான ஷகிலா மும்தாஸ் தையூப் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவர்களாவர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், வணிக குற்ற விசாரணைப் பிரிவினர் சந்தேக நபர்களைக் கைது செய்து மன்றில் ஆஜர் செய்திருந்தனர்.
இந்த சந்தேக நபர்கள், தெமட்டகொட ருவனின் மகனிடம், சி.ஐ.டி. அதிகாரிகளுக்கும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்னவுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறி, ஒன்றரைக் கோடி ரூபாவைப் பெற்றுக்கொண்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் மன்றுக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில் இவ்வாறு பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இணைப்பாளராக செயற்பட்டதாக நம்பப்டும், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் சந்தேகத்துக்கு இடமான கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்யும் உப பிரிவின் பொலிஸ் சார்ஜன் ஒருவரை கைது செய்யவுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்தனர்.
அத்துடன் பொது மக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சரின் செயலாளர் எனக் கூறப்படும் நபரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர். துமிந்த சில்வாவே, தெமட்டகொட ருவனின் மகனுக்கு ஏற்படுத்திக்கொடுத்துள்ளகதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
முன்னதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த காலங்களில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பாரிய தொகை போதைப் பொருட்கள் தொடர்பில் விஷேட விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அவ்விசாரணைகளில், பல பாரிய போதைப் பொருள் தொகையை தெமட்டகொட ருவன் தருவித்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய மேலதிக விசாரணைகளை போதைப் பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் முன்னெடுத்த அதே சமயம், குறித்த நபரின் (தெமட்டகொட சமிந்த) சொத்துக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ் சி.ஐ.டி.யின் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லக்சிறி கீத்தாலின் ஆலோசனையின் கீழ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தகவல்
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் விசாரணையில், தெமட்டகொடை சமிந்த பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் காரர் ஒருவருடன் இணைந்து இலங்கைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் போதைப் பொருள் கடத்தி வந்துள்ளதாக தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த 2017 இல் தெமட்டகொடை சமிந்த இரு சந்தர்ப்பங்களில் மொத்தமாக 320 கிலோ ஹெரோயினையும், 2018 இல் தலா 200 கிலோ ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களையும், 2019 இல் 200 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ஐஸ் போதைப் பொருளினையும் கடத்தி வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
2019 இல் 200 கிலோ ஹெரோயின் தெற்கு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்த போதைப் பொருலின் பின்னணியிலும் தெமட்டகொடை சமிந்தவே இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் அதே ஆண்டு மேலும் 200 கிலோ ஹெரோயின் 5 கிலோ ஐஸ் மற்றும் 30 கிலோ ஹஷீஸ் போதைப் பொருளினை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக கூறபப்டுகிறது. இந்த வருடமும் (2021) 21 கிலோ ஐஸ் போதைப் பொருளை அவர் இலங்கைக்கு ப்கொண்டு வந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் உள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகிறது.
இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்
இவ்வாறான நிலையிலேயே கடந்த 2021 ஏப்ரல் 10 ஆம் திகதி இந்திய கடலோர காவல் படையினர் இலங்கையின் சஷீலா துவ எனும் மீன் பிடிப் படகை 340 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் கைப்பற்றியிருந்தனர். இதன்போது 5 சந்தேக நபர்களும் சிக்கியுள்ளனர். படகிலிருந்த செய்மதி தொலைபேசியை ஆய்வு செய்த போது குறித்த போதைப் பொருள், தெமட்டகொடையைச் சேர்ந்த ருவன் என்பவரால் தருவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் அது தொடர்பிலும் இலங்கைக்கு இந்தியாவால் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சி.ஐ.டி. விசாரணை
இவ்வாறான நிலையிலேயே கடந்த 2021 மார்ச் மாதம் முதல் தெமட்டகொடை ருவனின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள சி.ஐ.டி.யின் சட்ட விரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவு, கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி வெள்ளியன்று தெமட்டகொடை ருவனைக் கைது செய்தது. தெமட்டகொடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த சி.ஐ.டி., சட்ட விரோத வருமானம் ஊடாக கொள்வனவுச் செய்யப்பட்டதாக நம்பப்படும் 4 சொகுசு வாகனங்கள், ஒரு கிலோ 500 கிராம் தங்கத்தினையும் கைப்பற்றினர்.
நீதிமன்றில் ஆஜர்
இந்நிலையிலேயே தெமட்டகொடை ருவன் ஒக்டோபர் 2021 30 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார். அது முதல் இன்று வரை தெமட்டகொட ருவன் விளக்கமறியலில் இருந்து வருகின்றார்.
இவ்வாறான நிலையிலேயே, தெமட்டகொடை ருவனின் மகனிடம், தந்தைக்கு பிணைப் பெற்றுத் தருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் செயலர் என கூறப்படும் நபர் உள்ளிட்டவர்கள் ஒன்றரை கோடி ரூபா வரைப் பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பில் விசாரிக்கும் பொறுப்பு, சி.ஐ.டி.யின் வணிக குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் தற்போது 3 சந்தேக நபர்களைக் கைதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM