(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் 48 வகையான மருந்துகளுக்கான தட்டுப்பாடு அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முறையான நிதி ஒதுக்கீடு இன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் இன்று புதன்கிழமை கொழும்பு உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்தோடு அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டன.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
கொழும்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் ஆரம்பமானது.
இதில் சுமார் 650 வைத்தியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்திலிருந்து சுகாதார அமைச்சு வரை பேரணியாகச் சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக லிப்டன் சுற்றுவட்டாரம், டீன்ஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில் , 'அரசாங்கத்தின் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாகவே இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
மின் துண்டிப்பு நெருக்கடியால் பல்வேறு வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளை உரிய நேரத்தில் முன்னெடுக்க முடியாமலுள்ளது.
அது மாத்திரமின்றி எரிபொருள் பிரச்சினையால் வாகனங்களில் நோயாளர்களை அழைத்துச் செல்வதில் கூட நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசியமான சில மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடுகளால் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது.
இவ்வாறான நெருக்கடிகளால் நாட்டின் மருத்துவ துறையில் சுகாதார அவசர நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலைமை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எமது கோரிக்கைகளுக்கான துரித தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் நாட்களில் சகல தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார்.
மருத்துவ பீட மாணவர்கள்
இதே வேளை நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலககுமாறு மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார அமைச்சின் வளாகத்தில் இன்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை மீறி மாணவர்கள் உட்பிரவேசிக்க முற்பட்டமையால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
அதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் இருவருக்கு அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அரசியல்வாதிகளின் வீடுகளை முற்றுகையிடல் தொடர்கிறது
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகளை முற்றுகையிடும் சம்பவங்களும் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
அதற்கமைய நேற்று போகந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதே வேளை குருணாகல் - மல்கடுவாவ பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லம் , அழுத்கம பிரதேசத்தில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள்
இன்றும் பாராளுமன்ற வீதிகள் மூடப்பட்டன
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களைக் கருத்திற் கொண்டு இன்றைய தினமும் பாராளமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அது மாத்திரமின்றி பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கான வீதிகளும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக நேற்று முற்பகல் இராஜகிரிய பாலத்துடனான பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெறிசல் நிலவியது.
இதே வேளை போராட்டம் காரணமாக இன்று மாலை குருநாகல் - புத்தளம் வீதியை பொலிஸாரால் தடைகள் பயன்பபடுத்தப்பட்டு மூடப்பட்டிருந்தது. மேலும் கொழும்பு - கண்டி பிரதான வீதி கடவத்தை வங்கிச் சந்தியில் எரிபொருள் கோரி தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். .
இதே போன்று நாளைய தினமும் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM