(நா.தனுஜா)
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வை வழங்குவது என்ற சிறந்த திட்டம் எம்மிடம் உள்ளது.
இருப்பினும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சியதிகாரம் எம்வசம் இல்லை. எனவே அதற்கான ஆணையை மக்கள் எமக்கு வழங்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இந்த நாட்டைச்சேர்ந்த 69 இலட்சம் மக்களின் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாகத் தெரிவான கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, பொதுத்தேர்தலின் ஊடாகப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு மட்டுமீறிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் இன்றளவிலே நாடளாவிய ரீதியில் 'கோ ஹோம் கோட்டா' என்ற கோஷம் வலுவடைந்துள்ளது. ஜனாதிபதியினாலும் அரசாங்கத்தினாலும் எதிர்கொள்ளமுடியாத அளவிற்கு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாக எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றார். அதன்படி நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமது ஆதரவை வழங்கும் என்று நம்புகின்றேன். இவ்வாரம் அரசியலமைப்புத்திருத்தம் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன்.
நாட்டில் தற்போது டொலருக்கான பற்றாக்குறை காணப்படும் நிலையில், இது பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக இயல்பாக இடம்பெற்றதா? அல்லது முன்கூட்டியே திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் பலர் மத்தியில் காணப்படுகின்றது. ஏனெனில் ஊழல், மோசடிகள் மூலம் சட்டவிரோதமான முறையில் திரட்டிய கறுப்புப்பணத்தை வங்கிகளின் ஊடாக செல்லுபடியாகக்கூடிய பணமாக மாற்றமுடியாது. எனவே கறுப்புப்பணத்தை மாற்றுவதற்காக தற்போதைய டொலர் பற்றாக்குறை நிலைவரம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் பொருளாதார மீட்சிக்கான மாற்றுச்செயற்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். அந்தச் செயற்திட்டம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரதும் நம்பிக்கையை மையப்படுத்தியதாகவே அமையும். ஏனெனில் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் தொடக்கம் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை வரை பல்வேறு கட்டமைப்புக்களினதும் நிர்மாணப்பணிகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றன. அதன் காரணமாக பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய அனைவரும் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.
எனவே ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எமது பிரதான கொள்கையாகும். அதேபோன்று எமது ஆட்சியின்கீழ் சுயாதீன வழக்குத்தொடுநர் காரியாலயமொன்றும் ஸ்தாபிக்கப்படும். அதன்மூலம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கொன்றை நீதிமன்றம் தவிர்ந்த சம்பந்தப்பட்ட தரப்பினர் வாபஸ் பெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வை வழங்குவது என்ற சிறந்த திட்டம் எம்மிடம் உள்ளது. இருப்பினும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சியதிகாரம் எம்வசம் இல்லை. எனவே அதற்கான ஆணையை எமக்கு வழங்குங்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM