சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை குறித்து முன் னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிரத்தியேக வைத்தியர் எலியந்த வைட்டிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் வைத்து சுமார் மூன்று மணி நேரம் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஆஜராகியிருந்த எலியந்த வைட் பிற்பகல் 1.00 மணி வரை விஷேட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது.
லசந்த கொலை செய்யப்பட முன்னர் அல்லது கொலை நடவடிக்கை இடம்பெற்றபோது இடம்பெற்றதாக கூறப்படும் சில தகவல் பரிமாற்றங்கள் தொடர்பில் இதன் போது விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.இதனிடையே சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நாட்களில் இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.
சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த போதே இரத்மலானை அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் வைத்து லசந்த விக்ரமதுங்க அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். அப்போது இரத்மலானை அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்கு பொறுப்பாக பொன்சேகாவின் மிக நெருங்கிய நம்பிக்கைக்கு உரியவராக இருந்த பிரிகேடியர் துமிந்த கெப்பட்டிவலான இருந்தார். இந் நிலையில் கிடைக்கப் பெற்றுள்ள சில தகவல்களை மையப்படுத்தி சரத் பொன்சேகாவிடம் வாக்கு மூலம் ஒன்றினை எதிர்வரும் நாட்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவு பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.
இதனை விட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் நெருங்கிய சகாவாக கருதப்படும் அப்போது புலனாய்வுப் பிரிவு முக்கியஸ்தராக இருந்த அமல் குணசேகரவுக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க புலனாய்வுப் பிரிவு ஆராய்ந்து வருவதாகவும் அவருக்கு எதிராக சாட்சியங்களை மறைத்த குற்றச் சாட்டு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் லசந்த விக்ரமதுங்கவின் குறிப்புப் புத்தகம் மற்றும் அது தொடர்பிலான பதிவுகளைக் கொண்டிருந்த கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் அன்றாட தகவல் புத்தகத்தின் பக்கங்கள் தொடர்பில் இந்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில கடந்த வாரம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி மற்றும் அப்போதைய பிரதான பொலிஸ் பரிசோதகர் மகேஷ் பெரேரா ஆகியோர் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தனக்கு குறித்த குறிப்புப் புத்தகம் தொடர்பில் எவ்வித தகவலும் தெரியாது என விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஜனவரி 8 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட முன்னர் அவரது காரை பின் தொடர்ந்து வந்த கொலையாளிகளின் வாகன இலக்கத்தை குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை யாரோ துரத்து கிறார்கள் என தெரிந்ததும் தற்போதைய அரசின் முக்கிய நபர் ஒருவருக்கு லசந்த விக்ரமதுங்க தொலைபேசியூடாக விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். அவர் உடனே வாகன இலக்கத்தை கேட்டபோது தனது காரின் பக்க வாட்டு கண்ணாடியூடா க பார்த்து அதனை தனது குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்துள்ள லசந்த அதனை குறித்த முக்கியஸ்தருக்கு அறிவிப்பதற்குள் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையிலேயே குற்றம் இடம்பெற்ற இடத்தை சோதனை செய்த கல்கிஸை பொலிஸார் அந்த குறிப்புப் புத்தகத்தை மீட்டுள்ளனர். அது தொடர்பிலான தகவல்களை பொலிஸில் அன்றாடம் தகவல்களை பதிவு செய்யும் பதிவுப் புத்தகமான ஆர்.ஐ.பி. புத்தகத்திலும் எழுதியுள்ளனர்.
பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி அந்த குறிப்புப் புத்தகம் கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துச் செல் லப்பட்டதாக கூறப்படும் அந்த புத்தகம் மிரிஹானையில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல் லப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM