(ஆர்.யசி)
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதியம் உருவாக்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் நிதியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் நகர்வுகளை முன்னெடுக்கலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முன்னர் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் எனவும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் ஜனதிபதியிடதில் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிற்கும் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது.
நீண்ட நாட்களாக இந்த சந்திப்பு பிற்போடப்பட்டு வந்திருந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பானது மூன்று மணிநேரம் இடம்பெற்றிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.சித்தாத்தன், எஸ்.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அலி சப்ரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பில் முக்கியமான நான்கு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்ததாகவும், அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க விசேட ஒரு தீர்மானமும் எடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கேசரிக்கு தெரிவித்தார்.
அரசியல் தீர்வு விடயத்தில் அதனை உறுதியாக முன்னெடுக்கும் விதமாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் இருக்க வேண்டும் என்ற காரணிகளை நான் சுட்டிக்காட்டியிருந்தோம். இதில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து ரொமேஸ் டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் அதன் மொழிபெயர்ப்பு நடவடிக்கைகள் இன்னமும் முழுமைப்படுத்தப்படவில்லை எனவும், இன்னும் இரண்டு மாதங்களில் இந்த அறிக்கை கிடைக்கும் எனவும் அரசாங்கம் தெரிவித்தது. ஆகவே அறிக்கை கிடைத்தவுடன் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்தது.
அதேபோல் இந்த கால எல்லைக்கும் உடனடியாக செய்ய வேண்டிய விடயங்களாக முக்கிய நான்கு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்து பேசினோம். இதில் காணாமல் ஆகப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள ஒரு இலட்சம் குறித்து பாரிய முரண்பாடுகள் எழுந்துள்ளன. எமது மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணிகளை கூறினோம்.
ஆனால் காணாமல் ஆகப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள ஒரு இலட்சம் ரூபா நிதியானது, முழுமையான நட்டயீடு அல்ல எனவும், ஒரு நிவாரண தொகையாகவே இது வழங்கப்படுகின்றது எனவும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்வது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இதன்போது வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதியம் உருவாக்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் நிதியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் நகர்வுகளை முன்னெடுக்கலாம் என்பது குறித்து அரச தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முன்னர் அவர்கள் இலங்கை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம். அதனை கொண்டே எம்மால் அடுத்த கட்டத்தில் எதனையும் செய்ய முடியும் என்பதே எமது கருத்தாக அமைந்தது.
காணி அபகரிப்பு விடயங்களில் வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மகாவலி எல் வலயத்தின் ஊடாக கடந்த 35 ஆண்டுகளாக காணிகள் அபகரிக்கப்படுகின்றது, அதுமட்டுமல்ல பொதுமக்களின் வயல் காணிகள், விவசாய நிலங்கள் என இன்னமும் அரச கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
எனவே இவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அத்துடன் எல்லை நிர்ணய செயற்பாடுகளில் எமது பகுதிகளில் இனப்பரம்பலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதையும் வலியுறுத்தினோம்.
காணி அபகரிப்பு செயற்பாடுகள் இடம்பெறுமானால் அவற்றை உடனடியாக நிறுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதேபோல் எல்லை நிர்ணய விடயங்களை இனப்பரம்பலை மாற்றும் வகையிலான எல்லை நிர்ணயங்கள் இடம்பெறாது எனவும் இந்த செயற்பாடுகள் முழுமையாக கைவிடப்படும் எனவும் அவர் எம்மிடத்தில் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினோம்.
இந்த விடயத்தில் அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பரிந்துரைகளை முன்வைக்க ஜனாதிபதி பணித்தார். ஒவ்வொரு அரசியல் கைதிகளின் விபரங்களையும் தனித்தனியாக கருத்தில் கொண்டு அவர்களின் விடுதலைக்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்யுமாறும், விரைவாக அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயங்களை அடுத்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் நடைமுறைப்படுத்தவும், அரசியல் அமைப்பு உருவாக்க பரிந்துரைகளுக்கான மொழிபெயர்ப்பு கிடைத்தவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM