(ஆர். ராம்)
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட், பாதுகாப்பு கொள்கைகளுக்கான துணைச் செயலர் அமண்டா ஜே. டொரி, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்ட் லூ ஆகியோர் இரு நாள் விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை க்கு வருகை தரவுள்ளனர்.
இவர்கள், பங்களாதேஷ், இந்தியா ஆகிய நாடுகளுக்கான விஜயங்களை நிறைவு செய்து கொண்ட பின்னரே இலங்கை வரவுள்ளனர்.
இந்தோ - பசுபிக் பங்காளிகளுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை மையப்படுத்தியதே இந்தப் பயணத்தின் நோக்கமென்று விஜயத்தின் ஆரம்பத்திலேயே அறிவித்தும் விட்டனர்.
எனினும், இக்குழுவினரின் இலங்கை விஜயம் தொடர்பில் இருவேறு வெளிப்பாடுகள் மேலெழுந்துள்ளன. முதலாவது வெளிப்பாடு தமிழ்த் தரப்பிலிருந்து வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழுவினர் கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது, புலம்பெயர் தமிழர்கள் சார்பில் உலகத்தமிழர்கள் பேரவையின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டிருந்தனர்.
அமெரிக்காவில் நடைபெற்ற பல்வேறு சந்திப்புக்களின் ஈற்றில் இலங்கையின் மனிதஉரிமைகள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஆகியவற்றை சமாந்தரமாக முன்னகர்த்திக் கையாள்வதற்கு அமெரிக்க, இந்திய கூட்டில் புதிய கொள்கை வகுக்கப்படும் என்று சுமந்திரன் அறிவித்திருந்தார்.
முன்னதாக, 2011இல் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அமெரிக்காவிற்குச் சென்று சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.
இதன் விளைவாக அமெரிக்காவின் அப்போதைய, சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணை இராஜாங்க செயலாளர் மரியா ஓட்டேரோ, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரெபேர்ட் ஓ பிளேக் ஆகியோர் 2012 பெப்ரவரியில் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
இவர்களது வருகை அந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் கணிசமாக செல்வாக்குச் செலுத்தியிருந்தது என்பது வெளிப்படையானது.
இவ்வாறிருக்கையில், சுமந்திரன் குழுவினரும், உலகத் தமிழர் பேரவையின் அங்கத்தவர் குழுவும் கூட்டிணைந்து அமெரிக்காவில் முன்னெடுத்த சந்திப்புக்களின் பின்னர், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரங்களுக்கான குழுவிடமிருந்து இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திற்கு முக்கியத்துவம் அளிக்குமாறு வலியுறுத்தி இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கனுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தினை குறித்த குழுவின் தலைவரும் ஜனநாயக கட்சியின் பிரதிநிதியுமான கிறிகோரி மீக்ஸ் மற்றும் குடியரசுக்கட்சியின் பிரதிநிதியான மைக்கல் மெக்கால் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பரில் அனுப்பி வைத்திருந்தனர்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கனின் கவனத்திற்கு உடன் எடுத்துச் செல்லப்பட்டமை சந்திப்புக்களின் விளைவாக கொள்ள முடியும் என்று உலகத்தமிழர் பேரவையின் சிரேஷ்ட ஆய்வாளர் பவன் பவகுகன் தெரிவிக்கின்றார்.
அதேநேரம், இலங்கைக்கு வருகை தந்துள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்ட் லூ ஏற்கனவே சுமந்திரன் உள்ளிட்ட குழுவினருடன் சந்திப்புக்களை நடத்தியவராகவும் உள்ளார்.
மேலும் குறித்த குழுவினர் இந்தியாவிற்குச் சென்று விட்டுத்தான் இலங்கைக்கு வருகை தந்திருக்கின்றனர் ஆகவே, சுமந்திரன் மற்றும் பவகுகனின் கருத்துக்களின் அடிப்படையில் இக்குழுவினரின் விஜயத்தில் தமிழ்த் தரப்பு அதிகமான எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கின்றமையானது கடந்தகால பின்னணிகளின் அடிப்படையில் நியாயமானது.
இவ்வாறிருக்கையில் இரண்டாவது வெளிப்பாடு தென்னிலங்கையிலிருந்து மேலெழுந்துள்ளது.
இதற்கு, ராஜபக்்ஷ அரசாங்கத்திலிருந்து அண்மையில் வெளியேற்றப்பட்டுள்ள விமல், கம்மன்பில, வாசு உள்ளிட்ட 11 பங்காளிகள் தான் காரணமாக இருக்கின்றனர்.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான அவர்களின் பிரசாரத்தில் மீண்டும் எம்.சி.சி. உடன்படிக்கை என்பது பிரதான இடத்தினை கொண்டிருக்கின்றது.
குறித்த அணியினர் எம்.சி.சி.உடன்படிக்கை விடயத்தினை தூக்கிப்பிடிப்பதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.
500மில்லியன் டொலர்கள் பெறுமதியான எம்.சி.சி.உடன்படிக்கை பற்றிய உரையாடல் நேபாளத்தில் 2017இல் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான சட்டமூலம் 2019இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் உள்நாட்டு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த பெப்ரவரி 27இல் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் நூலண்ட் உள்ளிட்டவர்கள் தான் செயற்பட்டுள்ளார்கள். அவ்விதமானவரே இலங்கை வருகின்றார்.
இலங்கையில் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கும் பஷில் ராஜபக்க்ஷ நிதி அமைச்சராக இருக்கையில் எம்.சி.சி.உடன்படிக்கையை அவர் விரைந்து அமுலாக்கிவிடுவார் என்பது தான் விமல் உள்ளிட்ட அணியினரின் குற்றச்சாட்டாக உள்ளது.
மறுபக்கத்தில், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியமான பொருட்களைப் பெறுவதற்குகூட பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்றவாறு, அன்றாட வாழ்க்கையை கொண்டு நகர்த்த முடியாதும் திண்டாடி வருகின்றார்கள்.
நாட்டின், அந்நியச்செலாவணிக் கையிருப்பு பெப்ரவரியில் 2.31 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறக்குமதிகளுக்கான டொலர்களை வழங்க முடியாது தவித்து வருகின்றது அரசாங்கம்.
அதேநேரம், கடந்த மாத நிறைவில் பணவீக்கம் 15.1 சதவீதமாகியுள்ளதோடு, உணவுப்பொருட்களுக்கான விலையுயர்வு ஆசியாவிலேயே அதிகமாக 25.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் 6.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த வேண்டியுள்ளதோடு மொத்தக் கடன்களின் பெறுமதியாக 51 பில்லியன் டொலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டு, தமது குடும்ப ஆட்சி அதிகாரத்தினை தக்கவைத்தாக வேண்டுமென்பதே ராஜபக்க்ஷக்களின் விருப்பமாக உள்ளது.
அதனால் தான், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதில்லை என்று இதுகால வரையிலும் பற்றிப்பிடித்து வைத்திருந்த கொள்கைக்கு நேரெதிராக அவர்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
இதனடிப்படையில் எம்.சி.சி.உடன்டிக்கையை செய்து கொள்வதால் உத்தேச 480மில்லியன் டொலர்கள் அரசாங்கத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படும். தற்போதைய நிலையில் அது அரசாங்கத்திற்கு பேருதவியாகவே இருக்கும் என்பதால் விமல் அணியினரின் கணிப்பில் தவறில்லை.
2005இல் சந்திரிகாவின் ஆட்சியின்போது எம்.சி.சி நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியான போல் அப்ல்கிராத் குழுவினருடன் நடைபெற்ற பேச்சுக்களில் உடன்படிக்கையை மேற்கொள்வதில் அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்க்ஷ ஆர்வம் காண்பித்ததாக, போல் அப்ல்கிராத் கூறியுள்ளார்.
மேற்படி பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாக 2008இல் உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் மஹிந்த எடுத்திருந்தார்.
இருந்தபோதும், 2007ஆம் ஆண்டு டிசம்பரில், மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்ததை அடுத்து நிதி உதவியை இலங்கைக்கு வழங்காதிருக்க எம்.சி.சி நிறுவனம் தீர்மானித்தது என்று அமெரிக்க காங்கிரஸ் அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதும், பிரதமராக மஹிந்தவே உள்ளார் ஆனால், அவருக்கு அப்போதிருந்த ஆர்வம் இப்போது உள்ளதா என்பது கேள்விக்குரியதாகின்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் லலித்தசிறி குணருவன் தலைமையில் நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவால் எம்.சி.சி.உடன்படிக்கை குறித்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபயவிடம் அளித்துள்ள நிலையில் அவரின் நிலைப்பாடு பிரதானமானது.
அதேநேரம், இதுவரையில், 49 நாடுகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள 65 எம்.சி.சி.உடன்படிக்கை இலங்கையில் ஆழமாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் அலெய்னா டெப்லிஸ் பகிரங்கமாகவே கூறியுள்ள நிலையில் அரசியலமைப்பு சபையின் அனுமதியை பெற்று பாராளுமன்றில் சட்டமாக்க முடியுமா என்பதும் முக்கியமான விடயமாகின்றது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் வறுமை நிலையைப் போக்கவும், அந்நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக உள்ள விடயங்களை நீக்குவதற்காகவும் கடன் அற்ற தொகையாக வழங்கப்படும் எம்.சி.சி. நிறுவனத்தின் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மீள விண்ணப்பிக்கும் போதே அந்த நிறுவனம் அதற்கான ஏதுநிலைகள் தகுதிகள் குறித்து மீளாய்வுடன் மெளனம் கலைக்கும். அதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM