(எம்.மனோசித்ரா)
சர்வ கட்சி மாநாட்டில் பங்குபற்றி அனைத்து கட்சிகளாலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தவறினால் அது நாட்டின் இறையான்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , எனவே அரசாங்கம் இதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல உத்வேகத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாடு நிறைவடைந்ததன் பின்னர் , இதன் போது சுதந்திர கட்சி முன்வைத்த யோசனைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சு.க. பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஷாந்த பண்டார மேலும் தெரிவிக்கையில் ,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான எந்தவொரு ஆட்சி காலத்திலும் இவ்வாறானதொரு நிலைமை நாட்டு மக்களுக்கு ஏற்படவில்லை. எவ்வாறிருப்பினும் தற்போது வரலாற்றினைப் பேசிக் கொண்டிருக்காமல் மக்களை நெருக்கடிகளிலிருந்து மீட்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறன்றி இதே நெருக்கடி நிலைமை தொடருமாயின் அது நாட்டின் இறையான்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள முடியாத நிலைமை ஏற்படும் போது , நாட்டு மக்களை எவ்வாறாயினும் வாழ வைக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படும்.
ஏற்கனவே வெளிநாட்டுக்கடன்களால் இறுகியுள்ள எமது நாடு விருப்பமின்றியேனும் சில விடயங்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.
அந்த அச்சுறுத்தல் எந்த வழியிலும் வரக் கூடும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அது நிச்சயம் நாட்டின் இறையான்மையில் தாக்கம் செலுத்தும்.
எனவே தான் சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை மதிப்பாய்வு செய்து அவற்றை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கையில் ,
நாட்டின் உண்மை நிலைமையை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தாமையின் காரணமாகவே இன்று இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் மாத்திரமே இதற்கு காரணம் என்று நாம் கூறவில்லை. எனினும் உண்மை நிலைமையை மறைப்பது தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும்.
சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறன்றி அதிலிருந்து பின்வாங்குமாயின் நாம் அடுத்த கட்டம் குறித்து சிந்திப்போம். எவ்வாறிருப்பினும் அவ்வாறு அரசாங்கம் இவற்றை உதாசீனம் செய்யாது என்று எதிர்பார்க்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி , ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் உண்மையில் நாட்டை நேசிக்கும் கட்சிகள் என்றால் இனிவரும் கலந்துரையாடல்களிலாவது பங்குபற்றி தமது யோசனைகளை முன்வைக்க வேண்டும். அதனை விடுத்து மக்களின் துன்பங்களை தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவும் , அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவிக்கையில் ,
சர்வகட்சி மாநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்ததன் நோக்கம் அரசாங்கத்துடனான முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கோ அல்லது அரசாங்கத்தை மேலும் பலப்படுத்துவதற்காகவோ அல்ல.
பெரும் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதை விரைவுபடுத்துவதற்காக அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதையே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதன் மூலம் எதிர்பார்க்கிறது.
இதற்காக சர்வகட்சி மாநாட்டில் சு.க. நீண்ட , மத்திய மற்றும் குறுகிய கால வேலைத்திட்டங்களை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
அதே போன்று நாடு இவ்வாறான பாரதூரமான நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற போதிலும் , நிதி ஆலோசகர்கள் ஏன் அரசாங்கத்திற்கு உரிய ஆலோசனைகளை வழங்கவில்லை என்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM