(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும். அதன் கொள்கை திட்டங்களுடன் இணக்கப்பாட்டினை எட்டினால் மாத்திரமே நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அதற்கான நடவடிக்கைகள் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சமூக வலைத்தளத்தினூடாக இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வழங்கிய நேர்காணலொன்றிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அவர் வழங்கிய நேர்காணலின் சுருக்கம் வருமாறு :
எதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும்?
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் எந்தவொரு நாட்டுக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுமாயின் அந்த நாடுகளுக்கு நிதியுதவி அளிப்பதற்காகவே சர்வதேச நாணய நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இதன் ஒத்துழைப்பைப் பெற்றுள்ளன, சர்வதேச நாணய நிதியத்தை நாடாத நாடுகள் இல்லை.
அதற்கமைய இலங்கை 1977 , 1989, 2011 மற்றும் 2015 உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
இதன் போது கிடைக்கப் பெற்ற ஒத்துழைப்புக்களின் அடிப்படையில் எம்மால் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடிந்தது, எனவே தான் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தினோம்.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமா?
பொருளாதார மேம்பாடு என்பது உற்பத்தி, சேவை மற்றும் விநியோகம் என்பன தடையின்றி வழங்கப்படுவதாகும்.
இவ்வாறான சூழலை மேம்படுத்துவதே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகும், இதற்கான ஆலோசனைகளை சர்வதேச நாணய நிதியம் வழங்கும்.
இதன் போது முன்வைக்கப்படும் கொள்கை திட்டங்களுக்கு இலங்கை இணக்கப்பாட்டை எட்ட வேண்டும்.
இணக்கப்பாடு எட்டப்பட்டால் அவற்றை செயற்படுத்துவதற்கு நிதி உதவி வழங்கப்படும் அதனைக் கொண்டு படிப்படியாகவே பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒத்துழைப்புக்கள் கிடைக்கப் பெற்றால் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளிடமிருந்தும் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெறும் அதே போன்று உலக சந்தையிலும் நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் எவ்வாறு பொருளாதாரம் மேம்படுத்தப்பட்டது?
1977 களில் இரண்டு நாட்களுக்கு சோறு உண்ண வேண்டாம் என்று சட்டம் கூட நடைமுறைப்படுத்தப்பட்டது.
எவ்வாறிருப்பினும் அதன் போது சர்வதேச நாணய நிதியத்தை நாடி பின்னர் திறந்த பொருளாதார கொள்கை பின்பற்றப்பட்டது.
அதனையடுத்து வருமானமும் அதிகரித்தது. அத்தோடு இரு சந்தர்ப்பங்களில் ரூபாவின் தளம்பல் நிலையும் பேணப்பட்டது அதே போன்று அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான பல நாடுகள் உதவ முன்வந்தன.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு 5 நாடுகள் உதவின.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன கொள்கைகளை மாத்திரமின்றி வேலைத்தி;ட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இதன் போது வெளிநாட்டு வருமானமும் அதிகரித்தது அதன் ஊடாக வர்த்தக வலயம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர என்பன எமது செலவில் ஸ்தாபிக்கப்பட்டன.
அதனையடுத்து உள்நாட்டு யுத்தத்தின் காரணமாகவும் வருமானம் வீழ்ச்சியடைந்தது. விடுதலைப்புலிகளால் கொழும்பில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையால் துறைமுகம் மற்றும் விமான நிலைய சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன இதனால் பொருளாதாரம் மறை பெறுமானத்தில் சென்றது.
இதன் காரணமாகவே நாம் போர் நிறுத்ததிற்குச் சென்றோம், போர் நிறுத்த்திற்கு சென்றமையால் அரசாங்கத்தின் வருமானம் வீழ்ச்சியடையும் என்று புலிகள் எண்ணிய போதிலும் , அதற்கு முரணாகவே இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2015 இல் எமது ஆட்சியின் போது முறையான திட்டமிடலுடன் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கடன் மீள் செலுத்தல் தவிர ஏனைய அனைத்து திட்டங்களுக்குமான பணம் எம்வசம் காணப்பட்டது.
அப்போது கிழக்கு முனைய அபிவிருத்திக்காக 500 மில்லியனும் , எல்.ஆர்.டி. வேலைத்திட்டத்திற்காக 2 பில்லியனும் , அதிவேக வீதிகளுக்காக 500 மில்லியனும் , ஜப்பான் - இந்தியா இணைந்து முன்னெடுத்த எல்.என்.ஜி. வேலைத்திட்டத்திற்கு 1.5 பில்லியனும் , எம்.சி.சி.க்காக 400 – 500 மில்லியனும் என சுமார் 5 பில்லியன் இருப்பில் காணப்பட்டது.
எனினும் அவற்றை நாம் செலவிடவில்லை. 2020 இல் ஆரம்பிக்கப்படவிருந்த இவ் அனைத்து வேலைத்திட்டங்களும் நிறுத்தப்பட்டன.
ரூபாவின் பெருமதியை தளம்பல் நிலையில் பேணுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் பொறுத்தமானதா?
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது, எனினும் அவர்களால் இதற்கு மேலதிகமாக பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே ஒரு ஆலோசனையை மாத்திரம் செயற்படுத்துவதால் பலனை எதிர்பார்க்க முடியாது.
சுற்றுலாத்துறையால் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியுமா?
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆடை தொழிற்துறை ஊடாகவே எமக்கு அந்நிய செலாவணி அதிகளவில் கிடைக்கப் பெறுகிறது.
கொவிட் தொற்றுக்கு முன்னர் வருடாந்தம் சராசரியாக 2 – 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தனர், ஆனால் கொவிட் தொற்றுக்கு பின்னர் இதில் 10 சதவீதமானோர் கூட நாட்டுக்கு வருகை தரவில்லை.
இவ்வாறான நிலையில் தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கான தங்குமிட கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன அவ்வாறிருக்கையில் சுற்றுலாப்பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அதன் ஊடான வருமானம் அதிகரிக்கப் போவதில்லை.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை பொறுத்தமானதா?
இல்லை. பொருட்கள் மற்றும் சேவைகளை தேவைக்கேற்ப வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் அதற்காகவே அரசாங்கம் என்ற ஒன்று காணப்படுகிறது.
அதனை விடுத்து சுதந்திர பொருளாதாரத்தில் இவ்வாறான கட்டுப்பாடுகளை விதிப்பது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழியாக அமையாது.
பொருளாதார வீழ்ச்சிக்கு கொவிட் காரணமா?
கொவிட் தொற்றின் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது காரணம் ஏனைய நாடுகளில் கொவிட் காலத்தின் பின்னரும் அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது.
2020 இல் கொவிட் நிலைமை தீவிரமடைந்த போதே சர்வதேச நாணய நிதியத்தை நாடி அந்நிய செலாவணி இருப்பை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏனைய நாடுகள் அதனையே செய்தன ஆனால் இலங்கை அவ்வாறு செய்யாமையே தற்போதுள்ள நிலைமைக்கான காரணமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM