(எம்.மனோசித்ரா)
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்குகின்றோம்.
குறித்த காலப்பகுதிக்குள் உரிய தீர்வுகள் முன்வைக்கப்படாவிட்டால் ஜனநாய ரீதியில் அரசாங்கத்தை பதவி விலக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (15) கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தினை எந்தவொரு முறையிலும் முடக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு முயற்சித்தால் அதனை விட கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் ஹரின் பெர்னாண்டோ எச்சரித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சுதந்திரத்தின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை. 3 ராஜபக்ஷ மூளைகளும் தோல்வியடைந்துள்ளன.
இவர்களின் தோல்வியை நிரூபிப்பதற்காக நாளைமறுதினம் செவ்வாய்கிழமை பகல் 2 மணிக்கு கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்.
நாட்டின் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்குகின்றோம் என்ற செய்தியை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. கொழும்பில் ஜனாதிபதி எங்கிருந்தாலும், அவர் இருக்குமிடத்திற்கு சென்று இதனை உரத்த குரலில் வலியுறுத்துவோம்.
நாடு எதிர்கொண்டுள்ள பாரதூரமான நிலைமையை இப்போதாவது புரிந்து கொண்டு , தனது குடும்பத்திற்கு மாத்திரமே அனைத்தும் முடியும் என்ற மமதையிலிருந்து வெளியே வருமாறு ராஜபக்ஷர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில் ஒரு மாதத்தின் பின்னர் இதனை விட கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று எச்சரிக்கின்றோம். ஜனநாயக ரீதியில் அரசாங்கத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உக்ரைனில் கூட மின்சாரம் காணப்படுகிறது. ஆனால் இந்நாட்டில் இல்லை. மக்களின் வாழ்க்கை செலவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.
நாட்டை இவ்வாறான நிலைமைக்கு உள்ளாக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக எம்முடன் இணையுமாறு ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இது நாட்டுக்கு கிடைத்துள்ள ஒரு சாபமாகும்.
இந்த சாபத்திலிருந்து மீள்வதற்காக முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை முடக்குவதற்கு எந்த வகையிலும் முயற்சிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடமும் , பிரதமரடமும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவ்வாறு எமது போராட்டத்தை முடக்குவதற்கு முயற்சித்தால் இதனை விட கடும் நடவடிக்கைகளுக்குச் செல்வோம் என்று எச்சரிக்கின்றோம்.
அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்னெடு;க்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் முன்னெடுப்போம். ஆனால் அதற்கான தருணம் இதுவல்ல.
மாறாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதே தற்போதைய தேவையாகும். எனவே சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டி அனைவரதும் ஆலோசனைகளைப் பெற்று பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM