(நா.தனுஜா)
பாலியல் வன்புணர்வின் விளைவாகக் கருத்தரிக்கும் சந்தர்ப்பங்களுக்கென கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குதல் குறித்துப் பரிசீலிப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை முக்கியமானதொரு முன்னேற்றமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், பாலியல் வன்புணர்விற்கு உள்ளானவர்களுக்கு மாத்திரமன்றி அனைவருக்கும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கக்கூடியவாறான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கூட்டு வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு சில நிபந்தனைகளின்கீழ் கருக்கலைப்புச் செய்வதற்கான சட்டத்தைக்கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்தையடுத்து இவ்விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
உலகிலேயே மிகுந்த மட்டுப்பாடுகளைக்கொண்ட கருக்கலைப்புச்சட்டம் இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றது. அவ்வாறிருக்கையில் பாலியல் வன்புணர்வின் விளைவாகக் கருத்தரிக்கும் சந்தர்ப்பங்களுக்கென கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குதல் குறித்துப் பரிசீலிப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை முக்கிய முன்னேற்றமாகும்.
இலங்கையில் கடந்த 1883 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி, பெண்ணின் உயிர்ப்பாதுகாப்புத் தவிர்ந்த வேறு காரணங்களுக்காக வேண்டுமென்ற கருவைச்சிதைப்பது மூன்று வருடத்திற்கும் அதிக காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாகும்.
அதேபோன்று ஒரு பெண் தனது கருச்சிதைவதற்குக் காரணமாக இருக்கும்போதும் அல்லது கருவைக்கலைக்கும்போதும் மேற்குறிப்பிட்ட தண்டனை வழங்கப்படும்.
குடும்ப உறுப்பினர் ஒருவரால் வன்புணரப்பட்டதன் பின்னர் கருத்தரித்ததாகக் கூறப்படும் முல்லைத்தீவைச்சேர்ந்த 13 வயது சிறுமியொருவர், சட்டவிரோத கருக்கலைப்பின் விளைவாக உயிரிழந்த சம்பவமொன்று கடந்த டிசம்பர் மாதம் பதிவாகியிருந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடவடிக்கைகள் இலங்கையில் கர்ப்பந்தரித்தலுடன் தொடர்புடைய 10 - 13 சதவீதமான மரணங்கள் இடம்பெறுவதற்குக் காரணமாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்தக் கருக்கலைப்புச் செயன்முறை சட்டவிரோதமானதாக இருப்பதே அதற்குக் காரணமாகும். அதேபோன்று பெரும்பாலும் 15 - 49 வயது வரையான பெண்கள் மத்தியிலேயே 1 - 20 கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன. இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 658 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக கடந்த 2016 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு மதிப்பீடு செய்திருந்தது.
பெண்களுக்கு பாதுகாப்பானதும் சட்டபூர்வமானதுமான கருக்கலைப்பிற்குரிய வாய்ப்பை மறுப்பதானது உயிர்வாழ்தல், ஆரோக்கியம், மிகமோசமான நிலைவரத்திலிருந்து பாதுகாப்புப்பெறல், முறையான விதத்தில் நடாத்தப்படுதல், சமத்துவம், பிள்ளைகளின் எண்ணிக்கையைத் தீர்மானித்தில் உள்ளடங்களாக மனித உரிமைகள் அச்சுறுத்தல்மிக்க நிலைக்குத் தள்ளப்படுவதற்கு வழிவகுக்கும்.
பாலியல் வன்புணர்வின் விளைவாகக் கருத்தரிக்கும் சந்தர்ப்பங்களின்போது கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கான பரிந்துரைகள் கடந்த 2013 ஆம் ஆண்டில் இலங்கையின் சட்ட ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டதுடன் கருக்கலைப்பு தொடர்பான சட்டத்தை மறுசீரமைக்குமாறு பல தசாப்தகாலமாக வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
இருப்பினும் அதற்குரிய புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அனைத்து அரசாங்கங்களும் தவறியிருக்கின்றன. இவ்விடயத்தில் அரசாங்கம் உரியவாறு செயற்படவேண்டும்.
பாலியல் வன்புணர்விற்கு உள்ளானவர்களுக்கு மாத்திரமன்றி அனைவருக்கும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கக்கூடியவாறான சட்டமொன்றை நீதியமைச்சர் அறிமுகப்படுத்தவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM