( எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களை அருகிலுள்ள மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழிநுற்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி வீரகேசரிக்கு தெரிவித்தார்.
கடந்த ஒரு வருடமாக கொவிட்டினால் உயிரிழப்போரின் சடலங்கள், ஓட்டமாவடி - மஜ்மா நகரின் அடையாளம் காணப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்த காணியில் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது அனைத்து மையவாடிகளிலும் அடக்கம் செய்ய முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும் தெரிவித்தார்.
அவ்வாறு எந்தவொரு மையவாடியிலும் நல்லடக்கம் செய்யும் பணிகளுக்கு எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள EPID/400/2019/n- CoV எனும் சுற்று நிருபம் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் , அவ்வாறு நல்லடக்கம் செய்யும் பணிகள் கடந்த 2021 மார்ச் 5 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
அன்றைய தினம், மட்டக்களப்பு - ஓட்டமாவடி, மஜ்மா நகரில் அடையாளம் காணப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்த காணியில், ஜும் ஆ தொழுகையின் பின்னர் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில், கொரோனாவால் உயிரிழந்த முதலாவது ஜனாஸா நல்லடக்கம் இடம்பெற்றது.
அதன்படி முதலில், கொரோனாவால் உயிரிழந்து வைத்தியசாலை குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த இருவரின் ஜனாஸாக்களும், பின்னர் காத்தாண்குடியை சேர்ந்த மூவரின் ஜனாஸாக்களும் ஓட்டமாவடி - மஜ்மா நகர் கொரோனா மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டன. அது முதல் இன்று வரை மஜ்மா நகர் காணியில் சுமார் 3600 இற்கும் மேற்பட்ட சடலங்கள் நல்லடக்கம் செய்யப்ப்ட்டுள்ளன. முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மட்டுமன்றி, பெளத்தர்கள், இந்துக்கள் மற்றும் கிரிஸ்தவர்களின் சடலங்களும் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் புதிய சுற்று நிருபத்துக்கு அமைய, கொவிட் தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் இதன்பிறகு ( 5 ஆம் திகதி முதல் )அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அச்சடலம் சவப்பெட்டிக்குள் வைக்கப்படுவதற்கு முன்னர் எவ்வகையிலும் கசிவு ஏற்படாத பிரேத பையொன்றுக்குள் சுகாதார ஊழியர்களால் வைக்கப்படவேண்டும் எனவும் குறித்த சடலம் சுகாதாரத்தரப்பினரால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் 24 மணிநேரத்திற்குள் அச்சடலம் எந்தவொரு தகன சாலையில்தகனம் செய்யப்படவோ அல்லது எந்தவொரு மையவாடியிலும் நல்லடக்கம் செய்யப்படவோ வேண்டும் எனவும் தகனம் அல்லது அடக்கம் செய்யும் இடம் தவிர்ந்த வேறெந்தவொரு இடத்திற்கும் சடலம் கொண்டுசெல்லப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தொற்றுக்குள்ளானவரின் சடலம் பதப்படுத்தப்படக்கூடாது எனவும் சடலத்தை தகனம் அல்லது அடக்கம்செய்யும் முறை சம்பந்தப்பட்டவரின் உறவினர்களின் விருப்பத்தின்படி மேற்கொள்ளப்படலாம் எனவும் சடலத்தை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான செலவுகள் உறவினர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனவும் இதன்பின்னர் அதற்குரிய செலவுகள் சுகாதார அமைச்சினாலோ அல்லது வேறு திணைக்களங்களினாலோ வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த 2020 ஏப்ரல் 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சியினால் கடந்த 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி 2170/8 எனும் இலக்க வர்த்தமானி வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் எந்த ஒரு நபரையும் அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தீர்மானத்தை இலங்கையும் ஏற்றுக்கொண்டு, கடந்த 2021 பெப்ரவரி 25 ஆம் திகதியிடப்பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்தமானி முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சியின் கையொப்பத்துடன் குறித்த திகதியில் வெளியிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இறுதி கிரியைகள் தொடர்பிலான சுகாதார அமைச்சின் வழி காட்டல் அடங்கிய சுற்று நிருபத்துக்காக காத்திருக்க வேண்டியேற்பட்டது. இதற்குள் அடக்கம் செய்யும் இடம் தொடர்பில் சிக்கல் ஏற்படவே, முதலில் இரணை தீவில் ஜனாஸாக்களை அடக்கம்ச்செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. எனினும் அந்த அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இரணை தீவி மக்கள் அதற்கு எதிராக போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
இந் நிலையிலேயே, அனுமதியளிக்கப்பட்ட ஓட்டாமாவடி - மஜ்மா நகர் காணியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்கள் நல்லடக்கம் செய்யப்படும் பணிகள் கடந்த 2021 மார்ச் 5 இல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM