கொரோனாவின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல்களிலும் வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது எமக்கு சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளதாக சமூக முயற்சியாண்மையாளரான ஏ.எம்.சலீம் தெரிவித்தார்.
அவர் தனது சமூக முயற்சியாண்மை குறித்து குறிப்பிட்டுள்ள விடயங்கள் வருமாறு :
கேள்வி:- சமூக முயற்சியாண்மையாளராக இருக்கும் தங்களுடைய தொழில் முயற்சி அதன் ஆரம்பம் பற்றிக் கூறுங்கள்?
பதில்:- மாத்தளை உக்குவெல்ல எமது சொந்தவூராகும். நானும் எனது சகோதரர் ரிஸ்வானும் இணைந்து இந்த முயற்சியாண்மையை கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பித்தோம்.
அப்போது வெறுமனே மூன்று இயந்திரங்களே இருந்தன.
ஆரம்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பைகளை உற்பத்தி செய்வதையே எமது பிரதான உற்பத்திப்பொருளாகக் கொண்டு எமது முயற்சியாண்மையை ஆரம்பித்திருந்தோம்.
தற்போது பயணப் பைகள் மற்றும் இதனை பைகளையும் உற்பத்தி செய்யுமளவிற்கு மேம்பட்டுள்ளோம், தற்போது எமது முயற்சியாண்மையின் கீழ் 16 இயந்திரங்கள் உள்ளன.
16 பேர் தொழில்வாய்ப்பினைப் பெற்றுள்ளனர் முன்னதாக எனது தொழில் முயற்சியாண்மை ஆரம்பத்தில் பெரியளவில் சோபித்திருக்கவில்லை.
இருப்பினும் 2020ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களை மையப்படுத்தி சமூக முயற்சியாண்மை ஒன்றை ஆரம்பிப்பதற்கான பயிற்சிகளை வழங்கினார்கள்.
அந்தப் பயிற்சிகளின் போது எனக்கு அதிகமான ஈடுபாடு காணப்பட்டது.
பயிற்சிகளைப் நிறைவு செய்ததன் பின்னரே சமூக முயற்சியாண்மை என்ற கருத்திட்டத்தின் கீழ் எமது முயற்சியாண்மையை விரிவுபடுத்தினோம்.
நான் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் 25 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள கந்தநுவர என்ற பகுதியில் எமது முயற்சியாண்மைக்கான இடத்தினை தெரிவு செய்து அங்கு இயந்திரங்களை பொருத்தி செயற்பட்டு வருகின்றோம்.
கேள்வி:- உங்களுடைய தொழில் முயற்சியை ஆரம்பித்து முன்னெடுத்துச் செல்வதில் நீங்கள் முகங்கொடுத்த சவால்கள் என்ன?
பதில்:- ஆரம்பத்தில் வெறும் வியாபார நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியாண்மையானது தற்போது சமூக முயற்சியாண்மையாக மாறியுள்ளது. இதனால் சாதாரண உற்பத்தியாளர்கள், வியாபாரிகளுக்கும் எமக்கும் இடையில் போட்டிகள் அதிகமாக கணப்படுகின்றன. சந்தைப்படுத்துவதில் சில சாவால்கள் உள்ளன. ஆனால் அவை படிப்படியாக நீங்கி வருகின்றன.
கேள்வி:- தொழில் முயற்சியாளராக ஆரம்பத்திலிருந்த நீங்கள் எவ்வாறு சமூக முயற்சியாண்மையாளராக மாற்றம் கண்டீர்கள்?
பதில்:- நான் தொழில் முயற்சியை ஆரம்பித்தபோது சமூகம் சார்ந்த அக்கறை காணப்பட்டாலும் எனது தொழில் முயற்சியை வைத்து எவ்வாறு சமூகத்திற்கு பங்களிப்பது என்று தெரியாத நிலைமையில் இருந்தேன்.
குறிப்பாக, தோட்டங்களில் பணியாற்றுபவர்கள் வெளியூர்களுக்குச் செல்வது அதனால் அவர்களும், அவர்களது குடும்பங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கரிசனை கொண்டிருந்தோன். இந்நிலையில் எனக்கு சமூக முயற்சியாண்மையாளராவதற்கான பயிற்சிகள் கிடைக்கப்பெற்றவுடன், எனது தொழில்முயற்சியை சமூக முயற்சியாண்மையாக மாற்றிக்கொண்டேன்.
இதனால், தோட்டப்பகுதிகளில் உள்ளவர்கள் நன்மைகளை அடைந்துள்ளார்கள். குறிப்பாக, அப்பகுதியில் உள்ள பெண்கள், ஆண்கள் நன்மைகளை அடைந்துள்ளார்கள்.இப்பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்கள், நாடுகள் ஆகியவற்றுக்கு தொழில் தேடி செல்லும் நிலைமைகள் அதிகமாக காணப்பட்டது. இதனால் அவர்களும், அவர்களின் சொந்தங்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தார்கள்.
ஆகவே அதற்கான தீர்வாக எமது முயற்சியாண்மையை ஆரம்பித்தோம். குறிப்பாக, அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியூர்களுக்குச் செல்வது போன்ற விடயங்கள் தற்போது படிப்படியாக தடுக்கப்பட்டு வருகின்றது.
கேள்வி:- சமூக முயற்சியாண்மையாளராக இருக்கும் நீங்கள் ஏனைய தொழில் முயற்சியாளர்களுடன் ஒப்பிடும்போது எவ்வாறு வேறுபட்டிருக்கின்றீர்கள்?
பதில்:- ஏனைய தொழில் முயற்சியாளர்கள் இலாபத்தினை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவார்கள். ஆனால், எம்மைப் போன்றவர்கள் இலாபத்துக்கு அப்பால் சமூகத்திற்கு ஏதாவது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகின்றோம். குறிப்பாக, தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், சொந்த இடங்களிலிருந்து வெளியேறுதலைத் தடுத்தல் ஆகிய விடயங்கள் காணப்படுகின்றன.
கேள்வி:- தற்போதைய நிலையில் சமூக முயற்சியாண்மையாளராக தொடர்ந்து செயற்படுவதில் நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்னவாக இருக்கின்றது
பதில்:- சமூக முயற்சியாளராக செயற்படும்போது ஏனைய தொழில் முயற்சியாளர்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. ஆனால், கொரோனாவுக்குப் பின்னரான சூழலில் வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் உள்ள உற்பத்திகளுக்கு கேள்விகள் அதிகரித்துள்ளன.
அந்த வகையில் எமது உற்பத்திகளுக்கும் நல்ல கேள்விகள் இருக்கின்றன. நாம் இப்போது மலையகம், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு உற்பத்திகளை சந்தைப்படுத்தி வருகின்றோம்.
அதேநேரம், மூலம்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சில சவால்கள் இருந்தாலும், அதனை முகாமை செய்து கொண்டு முன்னகரக் கூடியதாக உள்ளது. மேலும் மற்றுமொரு தொழிற்சாலையையும் விரைவில் நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM