(எஸ்.என்.நிபோஜன்)
கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமம் பகுதியில் உள்ள வீடொன்றில் முகத்தினை மறைத்துக்கட்டியவாறு வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை பொல்லுகளால் அடிப்போம் எனப்பயமுறுத்தி வீட்டிலிருந்த இருபதாயிரம் பணம் மற்றும் ஐந்தரைப் பவுன் நகைகள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சம்பவத்தில் பாதிக்ப்பட்ட வயதான பெண் தெரிவிக்கையில்,
அதிகாலை பன்னிரண்டு நாற்பது மணியளவில் நாய்கள் குறைத்ததாகவும் அதனை தான் வெளியில் வந்து பார்வையிட்டபோது திடீர் என கைகளில் பொல்லுகளுடன் நுழைந்த மூவர் தனது கைகளை பிடித்தவாறு சத்தம் போட்டால் அடிப்போம் என கொச்சை தமிழில் பேசியவாறு வீட்டினுள் தன்னை அழைத்துச் சென்றதாகவும் பின்னர் கணவனையும் தன்னையும் பிடித்து ஒரு இடத்தில் இருத்திவிட்டு வீட்டின் மின்குமிழ்களை அடித்து உடைத்து விட்டு, முப்பதுநிமிடமாக வீட்டினை சல்லடை போட்டு வீட்டில் இருந்த இருபதாயிரம் ரூபா பணம் மற்றும் மூன்று பவுண் சங்கிலி, இரண்டுபவுண் சங்கிலி, அரைப்பவுண் மோதிரம் உள்ளடங்கலாக ஐந்தரைப் பவுண் நகைகள் என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்கிடையில் கணவனுக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டதகவும் அதில் தம்மை கட்டுப்பாட்டில் வைத்திருந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் காற்று விசுக்குவதற்கு மட்டை என்பவற்றையும் எடுத்துக் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த முறைப்பாட்டுக்கமைய கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

