(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசியல் செய்ததை போன்று நாட்டின் பொருளாதார நிலைமைகளை வைத்தும் அரசியல் செய்ய வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாகவும், பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக உள்ளோம் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.
பயங்கரவாத தடை சட்டமானது வடக்கு கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டிற்கும் பாதிப்பு என்பதை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர் எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
என்னால் இரகசிய கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் செமசிங்க கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது தெரிவித்திருந்தார். ஆனால் அன்றைய கூட்டம் நடத்தப்பட ஒரு மணித்தியாத்திற்கு முன்னரும் உங்களுடன் நான் உரையாடி உங்களையும் அந்த கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். ஆனால் நீங்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. அன்றைய கூட்டத்திற்கு அரசாங்கத்தில் சில உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண கலந்துகொண்டதுடன், அன்றைய கூட்டத்தின் அறிக்கையிலும் கையெழுத்திட்டிருந்தார். மேலும் இரு அரச தரப்பு உறுப்பினர்களும் அந்த கூட்டத்தில் பங்குபற்றினர். மூடிய அறையில் நடத்தப்படும் கூட்டம் இரகசிய கூட்டமாகாது.
அதேபோல், இன்றும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக நாம் முன்னெடுக்கும் போராட்டத்தையும் வேறு உட்கருத்துக்கள் இருக்குமென விமர்சிக்கின்றீர்கள். பயங்கரவாத தடை சட்டத்தை மீள்திருத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்து எழுந்த வேளையில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் குழுக்கூட்டங்களில் கலந்துகொண்டு இதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளனர். அதற்கான பதிவுகள் உள்ளன.
எனினும் அப்போது பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தம் செய்யப்படும் வேளையில் அது வேறு காரணிகளில் தாக்கத்தை செலுத்தும் என வேறு தரப்பினர் கூறினர். அவர்களின் கருத்துடன் நாம் இணங்கினோம். எனினும் பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக மீள் திருத்தம் செய்யப்படும் என்ற இணக்கத்திற்கும் நாம் வந்திருந்தோம்.
2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆராயப்பட்டு அதில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள நாம் வலியுறுத்தினோம். பல முரண்பாடுகள், எதிர் மறையான கருத்துக்கள் அந்த சட்டமூலத்திலும் இருந்தன.
அப்போது வெளிவிவகாரத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவிடம் உரையாடியபோது அதில் உள்ள முரண்பாடுகளை திருத்துவதாக அவர் எமக்கு வாக்குறுதியளித்தார்.
எனினும் 2018 ஒக்டோபர் மாதத்தில் அரசியல் சூழ்ச்சி செய்ததன் மூலமாகவும் ஸ்திரமற்ற அரசாங்கம் ஆட்சியில் இருந்த காரணத்தினாலும், அதன் பின்னரான ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்தும் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பயங்கரவாத தடை சட்டத்தின் ஏற்பாடுகள் நாகரீக சமூகத்தில் இடம் கொடுக்காது என்பதை ஏற்றுக்கொண்டு அதனை மீள் திருத்தம் செய்வதாக இணங்கி, சர்வதேச சமூகத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய மாற்றுவதாகும் இணக்கம் காணப்பட்டது.
பயங்கரவாத தடை சட்டமானது வடக்கு கிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டிற்கும் பாதிப்பு என்பதை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது அது குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வேளையில் 2019 ஆம் ஆண்டில் அதன் இறுதி அறிக்கை வெளிவந்த நேரத்தில் அதில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது, இந்த தாக்குதல் இடம்பெற்றதன் மூலமாக நாட்டு மக்கள் அனைவருமாக குரல் எழுப்பி ஒரு உறுதியான தலைவருக்கான கோரிக்கையை முன்வைக்கவா என்ற கேள்வி எழுந்தது. தாக்குதல் நடத்தப்பட மூன்று கிழமைக்கு முதல் இருந்தே புலனாய்வுத்துறை அறிக்கை கிடைக்கப்பெற்றும், தாக்குதல் நடத்த ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டும், முதல்நாள் பிற்பகல் அறிவிக்கப்பட்டும் அதனை தடுக்க ஒரு நகர்வினையேனும் முன்னெடுக்கவில்லை. இந்த திட்டத்திற்கு ஏற்ப குறித்த எவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை.
நாட்டின் பொருளாதார நிலைமைகளுக்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதனை சபைப்படுத்த விரும்புகின்றேன். அதேபோல் நாம கூறும் விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நாம் வலியுறுத்தவில்லை.
என்ன செய்திருக்க வேண்டும் என்பது சகலருக்கும் தெரிந்ததே. நெருக்கடி நிலைமைகளில் நிதி அமைச்சர் கூறும் விடயங்கள் என்னவென்பதே தெளிவில்லாமல் உள்ளது. ஒரு சில நேர்காணல்களை அவதானித்தோம், அதில் அவர் கூறும் விடயங்களை நினைத்து வெட்கப்படுகின்றோம். மத்திய வங்கி ஆளுநர் கூறும் கருத்துக்களை முற்றிலும் மாறான கருத்துக்களை நிதி அமைச்சர் கூறுகின்றார்.
நிதி இராஜாங்க அமைச்சர் வேறு கருத்துக்களை கூறுகின்றார். நாட்டின் பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்த நாட்டையும் பாதித்துள்ளது. நாம் அனைவருமே ஒன்றிணைந்து இந்த நிலைமைக்களில் இருந்து மீள நினைகின்றோம்.
ஆகவே ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசியல் செய்ததை போன்று நாட்டின் பொருளாதார நிலைமைகளை வைத்தும் அரசியல் செய்ய வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம், இந்த நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க நாம் தயராக உள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM