(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
உக்ரைன் - ரஷ்ய மோதல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் நாட்டில் டீசல் பற்றாக்குறை நிலவுவதாகவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.
உலகில் மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் சகல நாடுகளின் தூதுவர்களையும் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வரவழைத்து நீண்டகால கடன் திட்டத்திற்கு அமைய எமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு நிலைமைகள் மற்றும் எரிபொருள் விலையேற்றம் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர் மொஹமட் முஸம்மில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில்,
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் எந்தவித தடைகளும் இன்றி இயங்க வேண்டுமானால் மாதத்திற்கு ஒரு இலட்சத்து 81 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெய் தேவைப்படும்.
அப்படியென்றால் வருடாந்தம் இரண்டு மில்லியன் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தேவைப்படும். ஒரு வருடத்திற்கு அண்ணளவாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் மசகு எண்ணெய் கொள்வனவுக்காக ஒதுக்கப்படுகின்றன.
எனினும் தற்போதைய விலை நிர்ணயத்திற்கு அமைய மாதத்திற்கு 500 மில்லியன் டொலர்களை எரிபொருள் கொள்வனவுக்காக செலுத்துகின்றோம்.
இன்று நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடோ, மருந்து தட்டுப்பாடோ ஏனைய அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடோ, மின்சார தட்டுப்பாடோ அல்ல, டொலர் தட்டுப்பாடும் வெளிநாட்டு கையிருப்பு இல்லாமையுமே ஏனைய சகல பிரச்சினைகளிலும் தாக்கத்தை செலுத்திக்கொண்டுள்ளது.
எனினும் தற்போது இலங்கைக்கு வந்துள்ள மூன்று எரிபொருள் கப்பல்களில் இரண்டு கப்பல்களுக்கு நிதி செலுத்தி கப்பல்களில் உள்ள எரிபொருளை இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கப்பலுக்கான நிதி இன்னமும் செலுத்தப்படவில்லை.
நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றமை உண்மையே. இலங்கைக்கு வந்துள்ள மூன்று கப்பல்களில் மூன்றாம் கப்பல் இன்னமும் எரிபொருளை வழங்கவில்லை என்ற காரணத்தினால் எம்மிடம் உள்ள டீசலை மட்டுப்படுத்தியே வழங்கிக்கொண்டுள்ளோம்.
மேலும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்ற அவ்வப்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து எரிபொருள் பதுக்கல் இடம்பெற்றமை உண்மையே, எனினும் இன்றுள்ள சூழ்நிலையில் ரஷ்யா - உக்ரைன் மோதல் நிலைமைகள் காரணமாக இன்று நள்ளிரவுடன் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த டிசம்பர் தொடக்கம் நேற்று வரையில் 38 வீதத்தினால் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எனினும் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை. அதேபோல் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்ததுடன் எரிபொருள் விலையை அதிகரிப்பதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் இலங்கையில் மட்டுமே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது.
அதேபோல், மார்ச் மாதம் 15 ஆம் திகதி, உலகில் மசகு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் சகல நாடுகளினதும் தூதுவர்களை வரவழைத்து நீண்டகால கடன் திட்டத்திற்கு அமைய எமக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளோம். இப்போதே எரிபொருளை பெற்றுக்கொள்ள பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM