(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கையின் விவாகம் (பொது) கட்டளைச் சட்டத்தின் நியதிகளை மாற்றத்திற்கு உட்படுத்தும் வகையில் இலங்கைப் பதிவாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இலங்கையிலிருந்த போர்ச் சூழலாலும் பொருளாதாரக் காரணிகளாலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் திருமணம் மற்றும் குடும்ப உறவுகளில் அதிகூடிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அந்த சுற்றறிக்கையை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. யான எஸ். சிறீதரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய ஸ்ரீதரன் எம்.பி. மேலும் பேசுகையில்,
இலங்கையின் விவாகம் (பொது) கட்டளைச் சட்டத்தின் 112 வது அத்தியாயத்தில் குறித்துரைக்கப்பட்ட நியதிகளை மாற்றத்திற்கு உட்படுத்தும் வகையிலும் இலங்கையிலிருந்து போர்ச்சூழலாலும் பொருளாதாரக் காரணிகளாலும் புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் திருமணம் மற்றும் குடும்ப உறவுகளில் அதிகூடிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக நாம் உணர்கிறோம்.
இச் சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள்,அதிலும் குறிப்பாக வடக்கு,கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இளைஞர்,யுவதிகள் தத்தம் பண்பாடு, கலாசார, மரபியல் அடையாளங்களை ஒத்தவர்களை திருமணம் செய்ய முடியாத அபாய நிலையே உருவாக்கப்படும்.
இச்சுற்றறிக்கையின் மூலம் இலங்கையின் விவாகம் (பொது) கட்டளைச் சட்டத்தின் கீழ் விவாகப்பதிவை மேற்கொள்வதற்கு உரித்துப்பெற்ற, மாதாந்த வேதனமற்ற கௌரவ பதவியை உடைய கிராமிய விவாகப் பதிவாளர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான விவாகப் பதிவை மேற்கொள்ள முடியாதென தடைசெய்து அதற்கான அதிகாரத்தை மேலதிக மாவட்டப்பதிவாளர்களுக்கு வழங்கியிருப்பது கிராமிய விவாகப் பதிவாளர்களை அகௌரவப்படுத்தி உளவியல் தாக்கங்களுக்கு உட்படுத்துவதாகவும் மாதாந்த வேதனமோ நிலையான வருமானமோ அற்ற அவர்களுக்குரூபவ் விவாகப் பதிவின் போது வழங்கப்படும் சிறு வருமானத்தை இல்லாமற்செய்வதாகவும் அமைந்துள்ள சமநேரத்தில் நிரந்தரமான மாத வேதனத்திற்கு உரித்துடைய அரச உத்தியோகத்தர்களான மேலதிக மாவட்டப் பதிவாளர்கள் பிறிதொருவழியில் வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து விவாகப் பதிவிற்காக இலங்கைக்கு வருகைதரும் தமிழ் இளைஞர், யுவதிகள் இலங்கையின் தேசிய பாதுகாப்பைக் காரணம்காட்டி தமது விவாகப் பதிவுகளை மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே மேற்கொள்ள வேண்டுமென்பதும் ஆறு மாத காலத்தினுள் தாம் வதியும் நாட்டின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியால் குறித்த நபர் குற்றவாளியல்லர் என்பதை சான்றுறுதிப்படுத்தி வழங்கப்படும் பாதுகாப்பு தடைநீக்கல் அறிக்கையினை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டுமென்பதும் இந்தியாவிலிருந்து வருகைதந்து இலங்கையின் மத்திய மற்றும் மேல் மாகாண உறவுகளைத்திருமணம் செய்பவர்களையே அதிகம் பாதிப்பதாக அமைந்துள்ளது.
இச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் சிங்கள மக்களின் திருமணச் சடங்குகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
மாறாக இலங்கையில் வாழும் தமிழர்களையும் புலம்பெயர் நாடுகளில் வதியும் தமிழர்களையுமே பாதிப்பதாக அமைந்துள்ளது.
மேற்படி சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் மேலதிக மாவட்டப் பதிவாளர் மூலமே திருமணத்தைப் பதிவு செய்ய முடியும்’ என்ற விடயம் முகூர்த்த தினமொன்றில் குறிக்கப்பட்ட சுபநேரத்தில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்களைப் பதிவுசெய்ய முடியாத நிலைக்கு வழிகோலுவதனூடு தமிழர்களின் மத, பண்பாட்டு வரையறைகளில் பிறழ்வை ஏற்படுத்தும் வகையிலான நடைமுறைச் சிக்கல்களை மேலெழச் செய்வதாக உள்ளது.
இலங்கையின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் பிறப்பு, இறப்புப் பதிவுகளை தத்தம் தாய்மொழிகளிலேயே பதிவுசெய்ய வேண்டுமென்ற உரித்து வழங்கப்பட்டிருந்தும், அதனை மீறி மேற்படி பதிவுகள் பெரும்பாலும் தனிச்சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப்படுவதால் பல தமிழ்க் குழந்தைகளின் பெயர்கள் தவறான அர்த்தப் படுத்தல்களுக்கும், தவறான உச்சரிப்புக்களுக்கும் உட்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறான சூழலில் ஏற்கனவே பல்வேறு வழிகளிலும் வஞ்சிக்கப்பட்டுவரும் தமிழர்களின் இயல்பான வாழ்வில் தாக்கம் செலுத்தும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள 2021.10.18 ஆம் திகதிய 18/2021 ஆம் இலக்க சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்து இந்நடைமுறை மூலம் தமிழர்களும், கிராமிய விவாகப் பதிவாளர்களும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM