(எம்.மனோசித்ரா)
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு கடன் சான்று பத்திரங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனவே எரிபொருள் மற்றும் மின்விநியோக நெருக்கடிக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
எரிபொருள் , மின்விநியோக விவகாரம் காரணமாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடான மின்உற்பத்தியை மேம்படுத்தல் உள்ளிட்ட மாற்று திட்டங்கள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் , உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றங்களுக்கு அமைய இலங்கையில் விலைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சாரசபைக்கு கடனோ அல்லது நிதி உதவியோ வழங்க வேண்டாம் என்று மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்துண்டிப்பு தொடர்பில் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதோடு , அது இலங்கை மின்சாரசபைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி நிலைமை விரைவில் மாற்றமடையும் என்று எதிர்பார்க்கின்றோம்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை ஆகியவற்றின் நிதி நெருக்கடி நிலைமை தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அவதானம் செலுத்தினார்.
அதற்கமைய இவ்விரு நிறுவனங்களுக்கும் கடன் சான்று பத்திரத்தினை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துச் செல்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் இவ்வாறு எரிபொருள் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்திற்கு மத்தியிலேயே எரிபொருளை விநியோகிக்கின்றது என்பதும் அனைவரும் அறிந்த விடயமாகும். எனவே எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடும். எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.
ஒருபுறம் வரட்சியான காலநிலை மறுபுறம் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை ஆகிய இரு காரணங்களால் நாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம்.
நாட்டில் மின்சார தேவை வருடாந்தம் 10 மடங்காக அதிகரிக்கின்றது, இதனால் மின்சாரத்திற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.
எனவே மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் ஊடான மின்உற்பத்தி தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அமைச்சரவையில் ஜனாதிபதி வலியுறுத்தினார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM