(நா.தனுஜா)
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின்கீழ் நீதியமைச்சு, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் ஆகியன இணைந்து இலங்கையின் நீதிக்கட்டமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் முன்னெடுக்கவுள்ள 'நீதி மறுசீரமைப்புச் செயற்திட்டம்' நேற்றையதினம் நீதியமைச்சில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இச்செயற்திட்டத்திற்கென ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக 18 மில்லியன் யூரோ நிதியும் (சுமார் 4 பில்லியன் ரூபா) ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக ஒரு மில்லியன் யூரோ நிதியும் (சுமார் 225 மில்லியன் ரூபா) வழங்கப்பட்டிருப்பதுடன் நீதித்துறையுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஒத்துழைப்புடன் எதிர்வரும் நான்கரை வருடகாலத்திற்குள் இந்தச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நீதிக்கான கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டத்தின் ஊடாக நீதிக்கட்டமைப்பின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும்தன்மை என்பன மேம்படுத்துவதுடன் சிறப்பானதும் செயற்திறன் வாய்ந்ததுமான சேவைவழங்கலை உறுதிசெய்வதும் நீதியமைச்சின் எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி இச்செயற்திட்டம் நீதக்கட்டமைப்பு மறுசீரமைப்பை முன்னிறுத்திய வேலைதிட்டத்தின் பிரதான செயற்திட்டமாகவும் அமையவுள்ளது.
மேலும் இச்செயற்திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுமாறு கோருவதற்குக் காணப்படும் வாய்ப்பை விரிவுபடுத்தல், வர்த்தக ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை மாற்றுவழிமுறைகள் ஊடாக வழங்கல், டிஜிட்டல் தொழில்நுட்பப்பாவனையின் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளின் செயற்திறனை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளது.
'நாட்டின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கு விரிவானதும் செயற்திறன் வாய்ந்ததுமான நீதிக்கட்டமைப்பின் இருப்பை உறுதிசெய்வது இன்றியமையாததாகும்.
நீதிமன்றச்செயற்பாடுகள் சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்யும் அதேவேளை, சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கு இலங்கையின் நீதிவழங்கல் பொறிமுறையை வலுப்படுத்தவேண்டும். நவீன பொறிமுறை மற்றும் அபிவிருத்திப் பங்குதாரர்களின் ஒத்துழைப்பின்றி இந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது சிரமமான பணியாகும்.
எனினும் மேற்படி நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு இந்த உத்தேச நிகழ்ச்சித்திட்டம் வழிவகுக்கும் என்பதுடன் அதற்காக ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் என்பன நீதியமைச்சுடன் கைகோர்ப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்' என்று இந்நிகழ்வில் உரையாற்றிய நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
அதேவேளை அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனிஸ் சைப், சமூக சகவாழ்விற்கும் பிரஜைகளுக்கிடையில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் விரிவானதும் செயற்திறனானதுமான நீதிக்கட்டமைப்பைப் பேணிச்செல்வதன் அவசியம் தொடர்பில் எடுத்துரைத்தார்.
அத்தோடு இலங்கையின் நீதிக்கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்னுரிமை வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM