(நா.தனுஜா)
இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி சங் நாளையதினம் (சனிக்கிழமை) கொழும்பை வந்தடையவுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடனும் சிவில் சமூக அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத்தூதுவர் அலைனா டெப்லிட்ஸின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய தூதுவராக ஜுலி சங்கை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஜோபைடனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க செனட்சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அதனைத்தொடர்ந்து கடந்த 10 ஆம் திகதி (இம்மாதம்) இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவராக ஜுலி சங் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட விடயம் அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச்செயலாளர் வென்டி ஆர்.ஷேர்மனின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவருக்குரிய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்த பதிவில், குறித்த டுவிட்டர் பக்கம் புதிதாக நியமனம் பெற்றுள்ள தூதுவர் ஜுலி சங்கிடம் கையளிக்கப்படுவதாகவும் அந்த டுவிட்டர் பக்கத்தைப் பின்தொடர்வதன் ஊடாக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் இலங்கையின் சுபீட்சம், இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி இருதரப்பும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்துகொள்ளமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து அந்த டுவிட்டர் பக்கத்தின் ஊடாக புதிய தூதுவர் ஜுலி சங் பதிவொன்றைச் செய்திருந்தார். கொழும்பிற்கான விமானப்பயணத்திற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கசெயலர் அன்ரனி பிளின்கெனைச் சந்தித்ததாக அப்பதிவில் குறிப்பிட்டிருந்த ஜுலி சங், இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமையை தான் கௌரவமாகக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இருநாடுகளினதும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அன்ரனி பிளின்கென் போன்ற நபர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்த்திருப்பதாக இராஜாங்கசெயலரிடம் தான் கூறியதாகவும் ஜுலி சங் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக நியமனம்பெற்றுள்ள தூதுவர் ஜுலி சங் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தில் மேற்கு ஹெமிஸ்பியர் விவகாரப்பணியகத்தின் பதில் உதவிச்செயலாளராகப் பணியாற்றியிருப்பதுடன் இராஜாங்கத்திணைக்களத்தில் ஜப்பானிய விவகார அலுவலகத்தின் பணிப்பாளராகவும் பதவிவகித்துள்ளார்.
மேலும் கம்போடியாவின் ஃபோம் பென்னில் அமைந்துள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்கான பிரதி தலைவராகவும் தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் ஜுலி சங் செயற்பட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத்தூதரகங்களிலும் சீனாவிலுள்ள அமெரிக்க கொன்சியூலர் அலுவலகத்திலும் அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
ஜுலி சங் கலிபோர்னியா - சான்டியாகோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டத்தையும் சர்வதேச மற்றும் பொதுவிவகாரங்களுக்கான கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM