ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் சிறை வாசம் 667 நாட்களின் பின் நிறைவு

Published By: Digital Desk 3

10 Feb, 2022 | 11:36 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்தஞாயிறு தின தொடர்  தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது  சதி செய்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வெலிக்கடை, புதிய மெகசின் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல  மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 667 நாட்கள் சிறைப்படுத்தலின் பின்னர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.  

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவல ஆகியோர் அடங்கிய  நீதிபதிகள் குழாம், ஹிஜாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  CA/ PHC/APN/10/22 எனும் சீராய்வு மனுவின்  உத்தரவாக அவருக்கு பிணையளிக்குமாறு கடந்த 7 ஆம் திகதி அறிவித்தனர்.

அந்த உத்தரவை நேற்று புத்தளம் மேல் நீதிமன்றில் பி.ப.2.35 மணிக்கு பிரதிவாதியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தெளிவுப்படுத்திய, இந்த விவகாரத்தை விசாரிக்க என நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன , அவற்றை பிணையில் செல்ல அனுமதித்தார்.

அதன்படி, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் ஹிஜாஸை விடுவிக்க,  மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய நீதிபதி குமாரி அபேரத்ன கட்டளையிட்டார். 

அதன்படி ஹிஜாஸின் சகோதரரும் சகோதரியும் பிணையாளர்களாக நீதிமன்றால் திறந்த நீதிமன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

இதனைவிட, பிணை நிபந்தனைகளாக,  இதுவரை ஹிஜாஸ் தனது கடவுச் சீட்டை புத்தளம் மேல் நீதிமன்றில் சமர்ப்பித்திருக்காத நிலையில்  அது திறந்த மன்றில் நேற்று உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் தனது நிரந்தர வதிவிடத்தை அவர் உரிய கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் மேல் நீதிமன்றுக்கு பிணை நிபந்தனையாக முன் வைத்தார். 

ஒவ்வொரு மாதமும் 2 ஆம் 4 ஆம் ஞாயிற்றுக் கிழமைகளில்  மு.ப.9.00 மணிக்கும் பி.ப. 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புத்தளம்  புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தல் கையெழுத்திடுவது போதுமானது எனவும் எந்த நிலைமையிலும், வழக்கின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது சாட்சியாளர்களில் தலையீடுகள் செய்யக் கூடாது எனவும் நிபந்தனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மேனக விஜேசுந்தரவின் ஒப்புதலுடன் நீதிபதி நீல் இத்தவல அறிவித்த பிணை உத்தரவின் பிரகாரம்,  நேற்று 10 ஆம் திகதி  புத்தளம் மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள  H.C / 78 / 2021 எனும் வழக்கு முன் கூட்டி விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதற்காக ஹிஜாஸ் தரப்பால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது ஹிஜாசிக்காக நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம், சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தன, ஹபீல் பாரிஸ், கனேஷ யொகன், நிரான் அங்கிடெல் உள்ளிட்டோர் ஆஜராகினர். சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி கிஹான் குணசேகர ஆஜரானார். 

இந்நிலையிலேயே மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முன்னதாக தனக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம்  கடந்த 2022  ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வழங்கிய உத்தரவை திருத்தி தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி, சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட  CA/ PHC/APN/10/22 எனும் இலக்க  சீராய்வு மனுவின் உத்தரவு நேற்று அறிவிக்கப்பட்டது. 

ஏற்கனவே கடந்த 2021 நவம்பர் 19 ஆம் திகதி  ஹிஜாசுக்கு பிணையளிக்க மறுத்த புத்தளம் மேல் நீதிமன்றின் தீர்மானத்துக்கு எதிரான CA/PHC/APN 128/2021 எனும்  சீராய்வு மனு கடந்த 2022 ஜனவரி 21ஆம் திகதி விசாரணைக்கு வந்த போது, ஹிஜாசுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை எனவும்  கடந்த ஜனவரி 28 ஆம் திகதி இடம்பெற்ற  வழக்கு விசாரணைகளை தொடர்ந்து,   அவ்வழக்கின் பிரதிவாதி ( ஹிஜாஸ்) சார்பில் பிணைக் கோரிக்கைக்கு  எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க சடட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும்  மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அவ்வழக்கில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வாவினால் அறிவிக்கப்பட்டது.

எனினும் கடந்த 2022 ஜனவரி  28 ஆம் திகதி, புத்தளம் மேல் நீதிமன்றம்  ஹிஜாஸ் சார்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை,  மீண்டும் நிராகரித்து உத்தரவிட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேல் நீதிமன்றத்துக்கு   பிணை வழங்குவதற்கு அதிகாரமில்லையென்ற நிலைப்பாட்டில் இதற்கு முன்னர் கடந்த  2021 நவம்பர் மாதம்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை நிராகரிக்கப்பட்டுள்ளமையினால், அதே நிலைப்பாட்டில் பிணையை மீள  நிராகரிப்பதாக நீதிபதி குமாரி அபேரத்ன அறிவித்திருந்தார். 

இந்நிலையிலேயே கடந்த 2022 ஜனவரி 31 ஆம் திகதி  CA/ PHC/APN/10/22 ஆம் இலக்க சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு தொடர்பில்  மனுதாரரான ஹிஜாசுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் நிரான் அங்கிடெல்லும் ஆஜரானதுடன், பிரதிவாதி சட்ட மா அதிபருக்கக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ரொஹந்த அபேசூரியவும்  சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி கிரிஹாகமவும் ஆஜராகினர். 

இந்த மனு தொடர்பிலான வாதங்கள்  கடந்த 2022 பெப்ரவரி 2 ஆம் திகதி நடந்த நிலையிலேயே,  (7 thikathi மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு அறிவிக்கப்பட்டது.

இந்த சீராய்வு மனு  பரிசீலிக்கப்பட்ட போது சட்டத்தரணி  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் ஆஜராகி  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பிணையளிக்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லை எனவும் அதற்கான அதிகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கே உள்ளதாகவும் சுட்டிக்காட்டி  மேல் நீதிமன்ற நீதிபதியால் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் தனது சேவை பெறுநரை பிணையில் விடுவிக்க மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் உள்ள நிலையில், அவரை பிணையில் விடுவித்து உத்தரவிடுமாறு கோருவதாக   ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா வாதிட்டிருந்தார்.

இதன்போது மனுவின் பிரதிவாதியான சட்ட மா அதிபருக்காக மன்றில் ஆஜராகிய   மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  ரொஹந்த அபேசூரிய, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபருக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என  குறிப்பிட்டிருந்ததுடன், குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 404 ஆம் அத்தியாயம் பிரகாரம் அதற்கான எந்த தடையும் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு இல்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி தனது 8 பக்க தீர்ப்பை அறிவித்த மேன் முறையீட்டு நீதிமன்றம், பிணை வழங்குவது தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு உள்ள அதிகாரத்தை  குற்றவியல் நடை முறைச் சட்டக் கோவையின் 404 ஆம் அத்தியாயம்  பிரகாரம் உறுதி செய்தது. 

இதற்காக  உயர் நீதிமன்றால்  தீர்ப்பளிக்கப்பட்ட  சிங்கராயர் எதிர் சட்ட மா அதிபர் மற்றும் பென்வெல் எதிர் சட்ட மா அதிபர் ஆகிய வழக்குத் தீர்ப்புக்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் வழிகாட்டல்களாக பயன்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  அரசியலமைப்பின் 145 ஆவது  உறுப்புரை  பிரகாரம் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரத்தை  விளக்கி, அதன் பிரகாரம் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பில் தீர்ப்பறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளதுடன், பிணையில் விடுவிக்கும் தீர்மானத்தை எடுப்பதற்காக, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சுமார் 2 வருடங்களாக   தடுப்பில் உள்ளமை,  அவர் மீது  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கூட வழங்க முடியுமான தண்டனை தொடர்பில்  அவதானம் செலுத்தப்பட்டதாக நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சட்ட மா அதிபர்  பிணையளிக்க ஆட்சேபனை தெரிவிக்காமை மற்றும் வழக்கை விசாரிக்கும் மேல் நீதிமன்றுக்கு பிணியளிக்க அதிகாரம் இல்லாமை ஆகிய காரணிகளையும் பகுப்பாய்வு செய்து, ஹிஜாசுக்கு பிணையளிக்க தீர்மானித்ததாக  மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் தொடர்புபட்ட  சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய இன்சாப் அஹமட் எனும் குண்டுதாரியுடன் தொடர்புகளை பேணியதாக கூறி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டிருந்தார். அது முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை, தண்டனை சட்டக் கோவையின் 102, 113 (ஆ) ஆகிய அத்தியாயங்களின் கீழும்,  1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) ( உ) பிரிவின் கீழும்,  2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின்  3(1) ஆம் உறுப்புரையின் கீழும்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதற்கான நம்பகரமான  தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டியே, அக்குற்றச்சாட்டுக்களின் கீழ் அவரை மன்றில்  ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் கடந்த 2021 பெப்ரவரி 17 ஆலோசனை வழங்கினார்.

அதன்படி இக்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, ஹிஜாசிடம் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்துகொண்டு அதன் பின்னர் அவரை குற்றவியல் சட்டக் கோவை நடைமுறைக்கு அமைய நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் அறிவித்த நிலையிலேயே முதன் முறையாக கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி ஹிஜாஸ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே சட்ட மா அதிபர் கடந்த 2021 பெப்ரவரி 17 வழங்கிய ஆலோசனைக்கு அமைய ஹிஜாஸுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக கூறி, அல் சுஹைரியா மத்ரஸாவின் அதிபர் மொஹம்மட் சகீல் அன்றைய தினமே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே அவ்விருவருக்கும் எதிராக தற்போது புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம்  எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில்  பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின்  3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், 'இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்  நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.' என  கூறி இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக  மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக  பயங்கரவாத தடை சட்டத்தின்  2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக  சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைவிட,  பலஸ்தீன் - இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து  ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்  கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக  வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம்  உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின்  கீழ்  குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர்   சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றப் பத்திரிகை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கும் வழங்கப்பட்டது. அதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணையளிக்குமாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து அவருக்கு பிணையளிக்க முடியாது என புத்தளம் மேல் நீதிமன்றம்  கடந்த 2021 நவம்பர் 19 ஆம் திகதி அறிவித்தது. 

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமது நீதிமன்றுக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என குறிப்பிட்டே இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்து பிணை குறித்த தனது  தீர்மானத்தை அறிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அந்த  உத்தரவை திருத்துமாறு ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் சிராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் கடந்த ஜனவரி 28 ஆம் திகதி ஹிஜாஸின் 2 ஆவது பிணைக் கோரிக்கையையும் புத்தளம் மேல் நீதிமன்றம் நிராகரித்தது.  தற்போது ஹிஜாஸ் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீராய்வு மனுவின் மனுதாரருக்காக சட்டத்தரணி சனத் விஜேவர்தனவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில்  சட்டத்தரணிகளான  நிரான் அங்கெடெல் மற்றும் ஷானக குரே ஆகியோர்  ஆஜராகியிருந்தனர். சட்டமா அதிபர் சார்பில்  மேலதிக  சொலிசிட்டர் ஜெனரல்  ரொஹந்த அபேசூரிய, சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி கிரிஹாகம ஆகியோர்   ஆஜராகினர்.

எவ்வாறாயினும் ஹிஜாஸுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதுடன், வழக்கின் 2 ஆம் பிரதிவாதியான அதிபர் சகீல் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10