(நா.தனுஜா)
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நிதியமைச்சில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பேரண்ட நிதிப்பிரிவின் நிதி ரீதியான இயலுமையை வலுப்படுத்துவதற்கு அவசியமான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி உடன்பட்டிருப்பதுடன் அச்செயற்திட்டம் கடந்த மாதம் 20 ஆம் திகதி நிகழ்நிலை ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவைக் கோரியுள்ளதாகவும் அதற்கிணங்க நிபுணர்குழுவொன்று விரைவில் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்திற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகளைப் பெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கான பிரதிபலிப்பாக சர்வதேச நாணய நிதியத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகாரத்திணைக்களத்தின் பணிப்பாளர் விக்டர் கஸ்பரால் கையெழுத்திடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
உங்களுடைய அமைச்சில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பேரண்ட நிதிப்பிரிவின் நிதிரீதியான இயலுமையை வலுப்படுத்துவதற்கு அவசியமான பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு உங்களது அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தெற்காசியப்பிராந்திய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கல் நிலையத்துடன் இணைந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகாரத்திணைக்களத்தினால் சாதகமான பதிலை வழங்கக்கூடியதாக இருப்பது குறித்து உங்களுக்கு அறியத்தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
தெற்காசியப்பிராந்திய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கல் நிலையத்தினால் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார ஆய்வுக் காரணிகளை மேலும் விரிவுபடுத்துவதன் ஊடாக இப்பயிற்சி வழங்கல் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.
இச்செயற்திட்டத்தின் பிரகாரம் நடுத்தரகால நிதித்திட்ட மேம்பாடு தொடர்பில் மேலும் விரிவாக ஆராயப்படுவதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகாரத்திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட நிதி அச்சம் தொடர்பான மதிப்பாய்வு குறித்தும் விளக்கமளிக்கப்படும்.
அத்தோடு உயர் பாதீட்டு நடைமுறை தொடர்பில் பயிற்சியளிக்கப்படும்.
அத்தோடு தொழில்நுட்ப உதவி வழங்கலைப் பொறுத்தமட்டில், அதுகுறித்து ஆராய்ந்து பேரண்ட நிதிப்பிரிவினால் பயன்படுத்தப்படவேண்டிய பொருளாதார ஆய்வுக் காரணிகள், அதன் வருடாந்த தொழிற்பாட்டுத்திட்டம், அதன் பிரதான வெளியீடுகள், பாதீட்டுத் தயாரிப்புடன் தொடர்புடைய செயன்முறைகள், பேரண்ட மற்றும் நிதி ரீதியான தரவு ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்றகரமான நடவடிக்கைகள், ஊழியர் எண்ணிக்கை மற்றும் பயிற்சி வழங்கல் என்பன தொடர்பில் உரியவாறான வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் நிலைவரத்தைக் கருத்திற்கொண்டு இச்செயற்திட்டமானது ஜனவரி மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதிவரை நிகழ்நிலையில் முன்னெடுக்கப்படும்.
அதனை முன்னெடுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி விவகாரத்திணைக்களத்தின் குழுவானது ஹொல்கர் வான் எடென் தலைமையில் லெஸ்லே ஃபிஷர், ஜோன் கிரின்யெர், ராஜு ஷரன், அன்ட்ரூ எவான்ஸ் மற்றும் மிச்சேல் மேரியொன் ஆகியோரை உள்ளடக்கியிருக்கும்.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தினால் முன்னெடுக்கப்படும் இயலுமை மேம்பாட்டு செயற்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்கீழ் இச்செயற்திட்டத்திற்கு நிதியளிக்கப்படும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM