(நா.தனுஜா)
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையினால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான உளவள ஆலோசனைக்கருத்தரங்குகளை நடாத்துவதற்கென கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் 48,950 அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றது.
ஒன்டாரியோ மாகாணத்தின் கல்வியமைச்சர் ஸ்டீபன் லெஸியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் பிரகாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 48,950 அமெரிக்க டொலர் நிதி ஒன்டாரியோ, ஸ்கார்பரோவில் இயங்கிவரும் 'கனேடிய தமிழ் அகடமி' என்ற இலாபநோக்கற்ற அமைப்பிடம் கையளிக்கப்படவுள்ளது.
தமிழினப்படுகொலை மற்றும் அதன் நீண்டகால விளைவுகளால் உளவியல் ரீதியில் பல்வேறு தாக்கங்களுக்குள்ளான மாணவர்களுக்கு அவசியமான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
கனேடிய தமிழ் அகடமி, தேசிய கனேடியத் தமிழர்கள் பேரவை, கனேடிய தமிழ் இளைஞர் அமைப்பு ஆகிய அமைப்புக்கள் மேற்படி நிதியுதவியின் மூலம் கனேடியர்கள் மத்தியில் நேர்மறையான மாற்றம் ஏற்படுவதை உறுதிசெய்வதில் தமது வலுவான பங்களிப்பினை வழங்கவுள்ளன.
அதன் பிரகாரம் கொவிட் - 19 தொற்றுப்பரவலால் ஏற்பட்ட நெருக்கடிகளைக் கையாளல் மற்றும் தமிழினப்படுகொலையினால் ஏற்பட்ட உளவியல் தாக்கங்களிலிருந்து மீட்சியடைதல் ஆகியவற்றை முன்னிறுத்தி சுமார் 15,000 தமிழ் மாணவர்களுக்கு இலவசக் கருத்தரங்குகளை நடாத்துவதற்குத் தாம் திட்டமிட்டிருப்பது குறித்து இவ்வமைப்புக்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
அதேவேளை தமிழினப்படுகொலைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவேண்டும் என்று கனேடியத்தமிழர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கை இச்செயற்திட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்படும் என்று தேசிய கனேடியத் தமிழர்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு அப்படுகொலைகளால் உளவியல் ரீதியில் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மீள்வதற்கான ஆரோக்கியமான வழிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக தமிழர்களின் இருப்பைக் கொண்டாடும் வகையிலும் இக்கருத்தரங்குகள் அமையும் என்றும் அப்பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் ஒன்ராரியோவில் வாழும் தமிழ்ச்சமூகம் தொடர்பில் தான் மிகுந்த பெருமையடைவதாகத் தெரிவித்துள்ள ஒன்ராரியோ மாகாண கல்வியமைச்சர் ஸ்டீபன் லெஸி, தமிழினப்படுகொலைகளின் கரும்பக்கங்களிலிருந்து மீட்சியடைவதற்கு அவர்களுடனும் அவர்களது பிள்ளைகளுடனும் எப்போதும் துணைநிற்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், 'வரலாற்று ரீதியிலான காயங்கள் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் சந்ததிகளாக வேரூன்றியுள்ளன. தமிழினப்படுகொலை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மத்தியிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், அவை அடுத்துவரும் சந்ததிகளுக்கும் தொடர்கின்றன.
எனவே இந்த நிதியுதவியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள கருத்தரங்குகள் தமிழ்ச்சமூகம் முகங்கொடுத்திருக்கக்கூடிய உளவியல் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்குப் பங்களிப்புச்செய்யும் என எதிர்பார்க்கின்றோம்' என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை 'இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை அனுபவித்தவன் என்ற அடிப்படையில், கனேடிய தமிழ் மாணவர்கள் முகங்கொடுத்திருக்கக்கூடிய உளவியல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் ஒன்ராரியோ மாகாண அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது' என்று ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM