(ஜெ.அனோஜன்)
பார்படோஸில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐந்தாவதும், தீர்மானமிக்கதுமான டி:20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்தை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இப் போட்டியில் ஜேசன் ஹோல்டர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, மேற்கிந்திய தீவுகளுக்கு ஒரு சிறந்த தொடர் வெற்றிக்கு தனிப்பட்ட முறையில் தனது பங்களிப்பினை வழங்கினார்.
மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத்தீவுகளுடன் 5 டி:20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக ஆரம்பமாகிய டி:20 தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும், இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளுடன் 2:2 என்ற கணக்கில் சமனிலையில் இருந்தது.
இந் நிலையில் தொடரின் தீர்மானமிக்க போட்டி உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை பார்படோஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்களை குவித்தது.
ஆரம்ப வீரர்களான பிரண்டன் கிங் (34) மற்றும் கைல் மேயர்ஸ் (31) நல்லதொரு ஆரம்பத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.
எனினும் அவர்களின் ஆட்டமிழப்பினையடுத்து களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் 06 ஓட்டங்களுடனும், நிக்கோலஸ் பூரன் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் 14.4 ஓவர்களில் 105 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
எனினும் பின்னர் அணித் தலைவர் கீரன் பொல்லார்ட் மற்றும் ரோவ்மேன் பவல் கைகோர்த்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
மேற்கிந்தியத் தீவுகளின் இரு வேக துடுப்பாட்டத்திற்கு பிறகு அணியின் ஓட்ட எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 179 ஆக உயர்ந்தது.
இதில் இரு வீரர்களும் இறுதி நான்கு ஓவர்களில் 66 ஓட்டங்களை விளாசினர்.
இறுதி வரை ஆட்டமிழக்காதிருந்த கீரன் பொல்லார்ட் 41 (25) ஓட்டங்களையும், ரோவ்மேன் பவல் 35 (17) ஓட்டங்களையும் பெற்றனர்.
180 என்ற வெற்றியிலக்கினை நோக்கி அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 162 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
ஜேம்ஸ் வின்ஸ் 55 ஓட்டங்களையும் சாம் பில்லிங்ஸ் 41 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். போட்டியின் இறுதி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனால் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத்தீவுகள் 3-2 என டி:20 தொடரை கைப்பற்றியது.
பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும், ஹொசைன் 4 விக்கெட்டுகளையும் மற்றும் ஒடியன் ஸ்மித் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் டி:20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் என்ற பெருமையை ஜேசன் ஹோல்டர் பெற்றார்.
இவருக்கு முன்னதாக, அயர்லாந்தின் காம்பெர், இலங்கையின் லசித் மலிங்க மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஆகியோர் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM