(நா.தனுஜா)
போருடன் தொடர்புடைய மீறல்கள் உள்ளடங்கலாகக் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்குக் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து அரசாங்கங்களும் தவறியிருக்கின்றன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாகப் பேணப்படுவதை உறுதிசெய்வதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கான வலுவான கருவியாக ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பயன்படுத்தவேண்டும். அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறைக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் நிதியுதவி உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை வழங்கமுன்வரவேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவின் அமர்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில், அதில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்பட்டது. அந்த அமர்வில் பங்கேற்று நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்திய சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், அங்கு எடுத்துரைத்த முக்கிய விடயங்கள் வருமாறு:
போருடன் தொடர்புடைய மீறல்கள் உள்ளடங்கலாகக் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்குக் கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கம் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்து அரசாங்கங்களும் தவறியிருக்கின்றன. அதுமாத்திரமன்றி இலங்கையில் பொலிஸ் வன்முறைகளும் சித்திரவதைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் சட்டமீறல்களையும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கையும் இயல்பாக மாற்றியிருப்பதானது நீண்டகாலமாகத் தொடரும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினையை விளக்குகின்றது. கடந்த 2006 ஆம் ஆண்டில் திருகோணமலையில் 5 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் உள்ளடங்கலாக மனித உரிமைகள்சார் முக்கிய வழக்குகளுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளியையும் பொறுப்புக்கூறச்செய்வதற்குத் தவறியிருப்பதானது,
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதாக அரசாங்கம் வழங்கு;ம வாக்குறுதிக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதையே காண்பிக்கின்றது.
அதுமாத்திரமன்றி இலங்கையைப் பொறுத்தமட்டில் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் முன்னெடுத்துச்செல்லப்படும் 'பெரும்பான்மைவாதம்' தொடர்பில் அவதானம் செலுத்தவும் அதற்குத் தீர்வுகாண்பதற்கும் ஆட்சிப்பொறுப்பிலிருந்த அரசாங்கங்கள் தவறியிருப்பதுடன் ஏனைய இன, மத சமூகங்கள் மீதான அடக்குமுறைகளை சர்வசாதாரணமாகக் கருதுவது இயல்பாக்கப்பட்டுள்ளது.
இது லிபரல்வாதப்போக்குடைய அரசாங்கங்கள் தாம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிடுவோம் என்ற அச்சத்திற்குள்ளாவதற்குப் பங்களிப்புச்செய்யக்கூடும். இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கம் ஏகாதிபத்தியவாதப்போக்கைப் பின்பற்றிவருவதுடன் சட்டத்தின் ஆட்சிக்கு முரணான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றது. கொள்கைவகுப்பிலும் நிர்வாகத்திலும் அனைவரையும் உள்ளடக்கியதும் வெளிப்படைத்தன்மையானதுமான நடைமுறை பின்பற்றப்படுவதாகக் காண்பித்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளைக்கூடத் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மாறாக கிடைக்கக்கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அதன் ஏகாதிபத்தியவாதப்போக்கைப் பறைசாற்றும் வகையிலேயே செயற்படுகின்றது.
சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கம் ஆகியவையே ஜனாதிபதியின் இரண்டு முக்கிய கொள்கைகளாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருப்பதுடன் சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் பயன்படுத்தி வெறுப்புணர்வைக் கக்குகின்ற அரசியல் நடத்தை தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்குவைக்கின்றது.
இது அச்சமூகங்கள் ஒடுக்கப்படுவதற்கும் அவர்கள்மீதான அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கின்றது. பௌத்ததேரர் ஒருவரின் தலைமையில் பௌத்ததேரர்களின் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை முகாமைசெய்வதற்கான ஜனாதிபதி செயலணியும் ஞானசாரதேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள 'ஒரே நாடு, ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியும் ஜனாதிபதியின் மேற்படி கொள்கைக்கு வலுச்சேர்க்கும் இருபிரதான கூறுகளாக விளங்குகின்றன.
மேலும் சிவில் சமூக இடைவெளி சுருக்கமடைந்திருப்பதுடன் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடியவகையிலான பல்வேறு முறைசாரா - சட்டவிரோத நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் அரச அடக்குமுறைகளுக்கும் கைது மற்றும் கட்டாயத்தடுத்துவைப்புக்களுக்கும் உள்ளாகக்கூடிய அச்சுறுத்தல் நிலையிலிருக்கின்றார்கள்.
சிவில் சமூக ஒன்றுகூடல்களையும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது அன்பிற்குரியவர்களை நினைவுகூருவதையும் கட்டுப்படுத்துவதற்கும் தடைகளை விதிப்பதற்கும் அரசாங்கம் கொவிட் - 19 சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பயன்படுத்தியது. இருப்பினும் அவ்வழிகாட்டல்கள் அரச அனுசரணையுடனான நிகழ்வுகளின்போது பிரயோகிக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் பயங்கரவாத்தடைச்சட்டத்திருத்தம் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதி உள்ளடங்கலாக நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாகப் பேணப்படுவதை உறுதிசெய்வதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கான வலுவான கருவியாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம். அதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களைத் திரட்டுவதற்கான பொறிமுறைக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் நிதியுதவி உள்ளிட்ட ஒத்துழைப்புக்களை வழங்கமுன்வரவேண்டும்.
நிறைவாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கு ஏதுவான சர்வதேச நியாயாதிக்கத்துவத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடுகள் ஆதரவளிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM