(குமார் சுகுணா)
இன்றைய காலகட்டத்தில் நாட்டில் நிம்மதியாக ஒரு நாளை கடத்துவதே பெரும் பாடாக உள்ளது.
உரம் இல்லை என்பதனால் உண்பதற்கு உணவு பற்றாக்குறை. இந்த நிலை நீடித்தால் பட்டினிதான். இனி சாப்பிட என்ன செய்யப்போகின்றோம் என யோசிக்கும் முன்பே, சமையல் எரிவாயுகள் இன்று நாட்டில் நாளா பக்கமும் வெடிக்கின்ற சம்பவங்கள் சமைத்து உண்பதற்கே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு நாட்டில் பிரச்சினைகள் எல்லோருக்கும் உண்டென்ற போதிலும் தோட்டத்தொழிலாளர்களுக்கு எப்போதும் பல மடங்கு என்பது உண்மையே.
சம்பள உயர்வு , குடியிருப்பு பிரச்சினை , சுகாதார பிரச்சினை என்று பல பிரச்சினைகளை பல தசாப்தங்களாக சந்தித்து வருகின்ற தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வில் தற்போது மிக பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது அவர்களது வாழ்வாதாரமான தேயிலைகளே.
ஏன் எனில் இன்று ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்ட நிலையில் அதிக கிலோ எடுத்தாலே ஒரு நாள் பேர் கொடுக்கப்படும் என நிர்வாகங்கள் கூறுகின்றன.
அதாவது 20–24 கிலோ அல்லது 18 கிலோவிற்கு மேல் எடுத்தாலே 1000 ரூபா பெறுமதியான அந்த ஒரு நாள் பேரை பெற முடியும்.
அதற்கு குறைவாக எடுத்தால் அரை பேரும் கிலோவுக்கு 40 ரூபா என்றளவில் பணமே கொடுக்கப்படுகின்றன. சில நாட்களில் நாட் முழுவதும் கைகாசுக்கு அதாவது ஒரு கிலோ தேயிலை கொழுந்து 40 ரூபா என்ற அளவுக்கே அந்த நாளில் எத்தனை கிலோ எடுக்கப்படுகின்றதோ அதற்கேற்ப தொழிலாளர்களுக்கு கூலி கிடைக்கப்படுகின்றன.
இதேவேளை தேயிலை தோட்டங்கள் காடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன நிலையில் பல தோட்டங்களில் இப்போது கொழுந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. காரணம் உரம் இல்லை.சிறந்த முறையில் தேயிலை தோட்டங்கள் பராமரிக்கப்படுவதில்லை.
புல்லுக்கு அடிக்கும் மருந்துகள் கூட இல்லாமல் தேயிலையை விட அதிகமாக புற்கள் தோட்டங்களில் புரையோடியுள்ளன என்பதே உண்மை .
பனிக்காலம் என்பதால் வழமையாகவே கொழுந்து குறைவாக இருக்கும் நிலையில். இப்போது கொழுந்து கிலோ அதிகம் எடுக்க வேண்டும் என்பதோடு தொழிலாளர்களே தேயிலை தோட்டத்தில் புல் பிடுங்கி கொள்ள வேண்டும். தேயிலை நிறைகளை துப்புறவு செய்துக்கொள்ள வேண்டும்.
கூடவே 20 கிலோ கொழுந்தும் பறிக்க வேண்டும் என நிர்வாகங்கள் வழியுறுத்துகின்றன.
அவ்வாறு செய்தால் மட்டுமே ஒரு நாள் பேர் கிடைக்கும் என்ற நிலை. தேயிலை தோட்டங்கள் பராமரிப்பு இன்றி காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றமையால் வழமையான தேனீக்களின் தாக்குதலை விட பாம்புகள், சிறத்தைகள் உள்ளிட்ட விச ஜந்துக்களின் தாக்குதலுக்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அது மட்டும் அல்ல கால நிலை மாற்றங்களினால் மண்சரிவு அபாயங்களும் ஏற்படுகின்றன. இதற்கிடையே கொழுந்து பறிக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் கூறும் அளவுக்கு கொழுந்து பறிக்க முடியாத சூழல் இருப்பதனால் பல தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் மிக குறைவாக கிடைக்கின்றது.
அது மட்டும் அல்ல மிக அதிகளவான வேலை சுமைக்கும் முகம் கொடுக்க நேரிடுகின்றது.
தற்போது தொழிற்சங்கங்களுக்கு சந்தா வழங்காத காரணத்தினால் தொழிற்சங்கங்களிடம் இத தொடர்பில் முறையிட்டு தீர்வை பெற முடியாத சூழ்நிலையும் ஒரு பக்கம். இதனால் பல தோட்டங்களில் குடும்பம் குடும்பமாக மக்கள் தோட்டங்களை விட்டு தோட்டத்தோழிலை விட்டு நகர்புறங்களுக்கு தொழிலுக்காக இடம்பெயர்கின்ற சூழ்நிலை மலையகத்தில் பல தோட்டங்களிலும் ஏற்பட்டு வருகின்றன.
இதனை கண்கூடாக காணவும் முடிகின்றது. 'இங்கு ஆயிரத்து இவ்வளவு கஸ்டப்படுறதுக்கு பேசாம கொழும்பு பங்களா காடுகளுக்கு சென்றால் 20–30 ஆயிரம் மாதம் பெறலாம்'' என்பது அவர்களின் நிலைப்பாடு.
இதனால் பல தேட்டங்களில் வேன் மூலமாகவும் சில இடங்களில் பஸ் மூலமாகவும் தொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து செல்லப்படுவதனை காண முடிகின்றது.
விலைவாசி உயரும் அளவுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்களில் பலர் மாற்று்ததோழிலை நோக்கி செல்லுகின்றனர். இந்த நிலை நீடித்தால் நம்மோடான தேயிலையின் இருப்பு என்பது கேள்வி குறியாகும்.
இந்த நிலையில் கொஞ்சம் பின்நோக்கி பார்ப்போம்.
தென்இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரால் நாம் அழைத்து வரப்பட்ட போது இலங்கையில் இன்று தேயிலை வினளயும் பூமிகள் காடுகளாகவே இருந்தன. இதனை தேயிலை விதைத்து பொன்விளையும் பூமியாக மாற்றியது எமது முன்னோர்கள்தான்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் தேயிலை காடுகள் மிகவும் சுத்தமாவும் வளமானதாகவும் இருந்தது. எமது வாழ்க்கை தரத்துக்கு அது அக்காலத்தில் போதுமானதாக இருந்தது. ஏனெனில் அக்கால்பபகுதியில் தோட்ட மருத்துவ மனைகள் இருந்தன. தோட்ட சுத்திகரிப்பாளர்கள் இருந்தனர். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
தேயிலை என்பதனை தாண்டி எதனையும் யோசிக்காதவர்களாக எமது முன்னோர்கள் இருந்தனர். அவர்கள் தேயிலையை நேசித்தார்கள் அந்த நேசம்தான் இந்த நாட்டுக்கு அன்னிய செலவாணியை பெற்றுக்கொடுத்து இந்த நாட்டை உலகளவில் 'சிலோன் டீ 'என பிரபலப்படுத்தியது.
ஆனால் சுதந்திரத்துக்கு பின்னர் அரசியல் அதிகாரத்தில் எமது தலை உச்சத்துக்கு வந்துவிட கூடாது என்ற சதித்திட்டங்கள் எம்மை நாடற்றவர்களாக்கியது.
ஆனால் இன்று நிலைமை வேறு இன்று நாம் இந்த நாட்டு பிரஜைகளாகிவிட்டோம். நாடு நாட்டுப்பற்று என்பதனை தாண்டி மலையகம் என்பது நமது தாய் மண் என்பது உண்மை.
எமது முன்னோர்கள் இந்த மண்ணை நம்மை விட அதிகமாக நேசித்தார்கள். அதனால்தான் தாயகம் திரும்ப பல முறை வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் அவர்கள் இந்தியாவுக்கு செல்லாது இந்த மண்ணையே இறுகப்பற்றினார்கள்.
இலங்கையில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை தேயிலை சுதந்திரத்துக்கு பின்னர் செலுத்தி வருகின்றது.
தேயிலையின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த சமூகமாக இந்திய வம்சாவளித்தமிழர்கள் இந்நாட்டில் விளங்குகின்றார்கள். இவர்கள் தொழில் ரீதியிலான உழைப்பாளர்களாக மட்டும் அல்லாது , தமது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தேயிலைச் செடிகளுக்குப் பசளையாக அர்ப்பணிப்பவர்கள்.
ஆங்கிலேயர்கள் முறையான தேயிலைப் பயிர்ச் செய்கை மற்றும் உற்பத்தி முறைகளை அறிமுகப்படுத்தினர்.
தேயிலை நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய பயிர்.
இந்நாட்டின் பௌதிகவியல், காலநிலை இரண்டுமே தேயிலை உற்பத்திக்கு உகந்ததாக காணப்படவே ஆங்கிலேயர் இதில் பெரிதும் ஆர்வம் கொண்டனர்.
தகவல்களின் அடிப்படையில் ஆரம்பத்தில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிப்பட்ட தேயிலை சுமார் 25வருடங்களுக்குள் வியத்தகு அளவு அபிவிருத்தி கண்டது.
1880களில் 9723ஏக்கர்களை எட்டியிருந்த தேயிலை உற்பத்தியானது. 1886அளவில்150,000ஏக்கர்களாக ஏற்றம் கண்டிருந்தது.
ஆங்கிலேயரின் ஆர்வம், ஆதாயம் தேடும் அதே நேரம் நிலைபேறான விவசாயக் கொள்கையைக் கொண்டிருந்த தீவிர ஈடுபாடு, ஆளணிவளத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்ட திறமையான முகாமைத்துவ முனைப்பு தேசிய பொருளாதார அடையாளமாகவே தேயிலைப் பயிர்ச் செய்கையை மாற்றியது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தேயிலையின் உற்பத்தித் திறனை மையமாக வைத்தே விருத்தியடையலானது.
ஆங்கிலேயர் காலத்தில் அடக்குமுறை இருந்தது என்பது உண்மையே. ஆனால் பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலில் அப்போது காணப்பட்ட சலுகைகள் கூட இப்போது இல்லை என்பதே உண்மை. அந்த காலப்பகுதியில் திணைமாவு, சோளமாவு அரிசி என்பன தோட்டங்களுக்கே கொண்டுவந்து கொடுக்கப்பட்டதோடு, இதற்காக சம்பளத்தில் மிக குறைவான தொகையை அறவிடப்பட்டுள்ளது. அத்தோடு தோட்டங்களை சுத்தம் செய்வதற்கு ஆட்கள் இருந்தனர்.
வாசலை சுத்தம் செய்யும் தொழிலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அத்தோடு ஊர்களுக்கு பூச்சி கொள்ளிகள் தெளிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை வசதிகளும் தோட்டங்களில் அமைத்துக்கொடுக்கபட்டன. மற்றும் பிள்ளை மடுவஙங்கள் உருவாக்கபட்டு பராமரிக்கப்பட்டமை என பல சலுகைகள் . ஆனால் இவை அனைத்தும் இன்று தோட்டங்களில் சிறப்பாக இல்லை என்பதே உண்மை.
இது எல்லாவற்றுக்கும் மேலாக தேயிலை தோட்டங்கள் மிகவும் சிறந்த பராமரிப்புடன் அவர்கள் காலத்தில் இருந்துள்ளன. செய்யும் தொழிலே தெய்வம் என்பர்.
அதற்கேற்ப தேயிலை காடுகளில் வெறும் தரைகளில் அமர்ந்து பகல் உணவை சிறப்பாக சாப்பிடும் அளவு அன்று வேலைத்தளங்கள் சுத்தமாக இருந்துள்ளன. அதனால் மக்கள் மகிழ்வுடனும் இருந்துள்ளனர். மகிழ்சியாக வேலை செய்துள்ளனர்.
ஆங்கிலேய நிர்வாகம் தேயிலை விளைச்சலைப் பெறக் கூடிய காலவரையறையை கொண்டிருந்ததோடு முதிர்வயது செடிகளைக் அகற்றி அவ்விடங்களில் தேயிலையை மீள்நடுகை செய்வது என்பதை ஒரு சுழற்சி முறையிலேயே அவை மேற்கொண்டு வந்தது. இவ்வாறான மீள்நடுகை நடவடிக்கையால் தேயிலைச் செடிகள் உரிய செழிப்போடு எப்பொழுதும் காணப்பட்டன. தேயிலைத் தளிர்கள் இளமையோடு விளைச்சல் கண்டன. அறுவடையும் மிகுதியானது. ஆளணி வளத்துக்கு அவசியமும் ஏற்பட்டது.
ஆனால் இன்று சிறுத்தைகளின் கூடாரமாகவும் மீண்டும் காடுகளாகவும் தேயிலை தோட்டங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. இதனால் தொழிலாளிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாவதோடு தொழிலை விரும்பி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
பெருந்தோட்டங்கள் யாவும் 1972-1975வரையிலான காலப் பகுதியில் தேசியமயமாக்கப்பட்டமை மற்றும் அதன் பின்னர் தனியார் கைக்குப் போனமை என்பன தேயிலைத்தோட்டங்களையும் மக்களின் வாழ்வியலையும்சீரழித்துவிட்டது.
தம்மை நிருவகிப்போர் மீதான விசுவாசம் குறைந்து போனது. இதனால் உற்பத்தித் திறன் குறித்ததான அக்கறையும் அருகி வரலானது.
இது தேயிலைப் பயிர்ச் செய்கையின் எதிர்காலம் பற்றிய அச்சத்தை விளைவித்துள்ளது இன்று.
ஒரு காலத்தில் உலக சந்தையில் முதல்தரமாக இருந்த தேயிலை இன்று பின் தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் தேயிலை உற்பத்திப் போட்டி நாடுகளோடு ஒப்பீட்டு அளவில் குறைந்த உற்பத்தி திறனுக்கான வெளிப்பாட்டினையே காட்டுகின்றது.
சீனா, இந்தியா, வியட்னாம் கென்யா போன்ற நாடுகள் காலத்துக்கு ஏற்ப விவசாய நுட்பங்களை தேயிலை பயிர் செய்கையில் பயன்படுத்தி வெற்றிகண்டு வருகின்றனர். கு
றைந்தச் செலவினைக் கொண்டதும் கூடிய விளைச்சலைத் தருவதுமான அபிவிருத்தி நுணுக்கங்களைக் கொண்டதாக இந்நாடுகள் தேயிலை விவசாயப் பயிர்ச் செய்கையை முன்னெடுப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் இலங்கையில் தேயிலை காடுகள் இன்று காடுகளாக மாறிவருகின்றன. நமது முன்னோர்கள் இந்த நாட்டுக்கு வந்தபோதுதான் காடுகள் சிறுத்தைகள் தொல்லைகள் இருந்ததாக கதைகளில் கேட்டிருக்கின்றோம்.
ஆனால் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வளம் சுரக்கும் சொர்க்க பூமியாக இருந்த தேயிலை காடுகள் எப்படி சிறுத்தைகள் நடமாடும் காடுகளாகின. வேண்டுமென்றே சிறுத்தைகளை காடுகளில் விட்டதாகவும் ஒரு கதை உண்டு.
ஆனால் இன்று நாம் தேயிலை தோட்டங்களை பார்த்தால் முறையான பராமரிப்புகள் இல்லாமலேயே உள்ளன. பல தோட்டங்கள் குடியிருப்பு என்ற பெயரில் வெளியாட்களுக்கு விற்கப்படுகின்றன.
பல தோட்டங்கள் கைவிடப்பட்டு காடுகளாகிவிட்டன. பச்சை தாவணி கட்டிய தேவதை போல காட்சியளித்த தேயிலை மலைகாடுகளின் பசுமை இன்று தேய்ந்து விட்டது என்பது உண்மையே.
புற்களும் புதர்களும் நிறைந்து விட்டன. இதனாலேயே தேயிலை விளைச்சலில் மந்த நிலை காணப்படுகின்றது. கம்பனிகளோ நட்ட கணக்கை காட்டுவதில் மட்டுமே குறியாக உள்ளன. அவை இந்த மக்களையோ இந்த மண்ணையோ பற்றி சிந்திப்பதில்லை. கிடைக்கின்ற வரை லாபம் என்று மட்டுமே இருக்கின்றன.
தேயிலை தொழிலாளிகள் என்பதனை சிலர் அவமானமாக கருதுவோரும் உண்டு.
உண்மையில் அது அவமானம் அல்ல எமது அடையாளம். தேயிலைத்தொழிலில் தேயிலை காடுகள் இல்லை என்றால். எம்மையும் எமது மக்களையும் இந்த நாடு கண்டுக்கொள்ளுமா என்பதே கேள்விக்குறி.
ஏனெனில் தேயிலை இல்லை என்றால் சிறு விவசாய நிலங்களாக தோட்டங்கள் மாற்றப்பட்டு உருளைக்கிழங்கு போன்ற மாற்றுப்பயிர்கள் உருவாக்கப்பட்டால் கிராமத்து பெரும்பான்மையினர் கூட தோட்டங்களில் குடியமர்த்தப்பட கூடும்.
அப்போது எமது இருப்பே கேள்விக்குறியாகிவிடும். உண்மையில் தேயிலை பயிர்ச் செய்கையை மீள்கட்டியெழுப்புவது என்பது இன்றைய நிலையில் எமது சமூகம் சார்ந்த சவாலாகவே காணப்படுகின்றது.
இதனை பத்திரிக்கையில் எழுதுவதோ சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதாலோ தேயிலை தோட்டங்களை நாம் காப்பாற்ற முடியாது. இதற்கு எமது தலைமைகள் திறமான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயற்படுத்த முனைய வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM