(நா.தனுஜா)
நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், இதுவரையில் மூன்றாம் கட்ட செயலூட்டித்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆரம்ப சுகாதாரசேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, பொதுமக்களின் பங்களிப்புடன் மாத்திரமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டிருக்கின்றார்கள்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளடங்கலாக சர்வதேச நாடுகள் பலவற்றிலும் தற்போது ஒமிக்ரோன் திரிபு மிகவேகமாகப் பரவிவருகின்றது.
இலங்கையிலும் அவ்வாறான நிலையொன்று காணப்படக்கூடும். ஏனெனில் நாட்டுமக்கள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதுடன் நாடளாவிய ரீதியில் சுகாதாரப்பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இது இவ்வாறிருக்கையில் மூன்றாம்கட்டமாக பைஸர் தடுப்பூசியை வழங்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஆகவே மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் ஊடாக ஏனைய நாடுகளைப்போன்று எமது நாட்டிலும் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் தீவிரமடைவதைத் தடுக்கமுடியும்.
எனவே இதுவரையில் செயலூட்டித் தடுப்பூசியைப் பெறாதவர்கள் தயவுசெய்து அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.
மிகத்தீவிரமான பயணக்கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்ற அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவிவருகின்றது. ஆகவே எமது நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து கவனம் செலுத்துவதற்கு முன்னதாக, அனைவரும் மூன்றாம்கட்ட செயலூட்டித்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவேண்டும். தற்போது நூற்றுக்கு 23 சதவீதமானோர் மாத்திரமே செயலூட்டித்தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே பொதுமக்களின் பங்களிப்புடன் மாத்திரமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.
அதேவேளை இதுவரையில் தடுப்பூசியைப் பெறாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் வைத்தியநிபுணர் ஆனந்த விஜேவிக்ரம, இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது,
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகும் சாத்தியம் குறைவடைகின்றது. மாறாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஒருவர் தொற்றுக்குள்ளாகும் பட்சத்தில் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய நிலையேற்படுவதோ அல்லது உயிரிழப்பு ஏற்படுவதோ குறைவாகும்.
ஆகவே, இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதேவேளை வயது முதிர்ந்தவர்களும் சிறுநீரகநோய் மற்றும் நீரிழிவு உள்ளடங்கலாக வேறு நோய்நிலைமைகளைக் கொண்டவர்களும் மூன்றாம்கட்டத்தடுப்பூசியைப் பெறுவது அவசியமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM