(ஆர்.யசி)
நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கியுள்ள நேரத்தில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததன் மூலமாக ஏதேனும் உண்மைகளை மூடிமறைக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் செயற்பட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அரசாங்கம் தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹசீம் தெரிவித்தார்.
நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு மக்கள் நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டுள்ள இந்த காலகட்டத்தில், சகல விதத்திலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் இதனை எமக்கு சாதகமான அரசியல் கலமாக மாற்றிக்கொள்ள எதிர்க்கட்சி நினைக்கவில்லை.
நாமும் மக்களுடன் நின்று அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவே முயற்சிக்கின்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்க எதிர்க்கட்சி தயாராக இருப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் வெளிப்படையாக தெரிவித்தும் அரசாங்கம் தமது சுயநல அரசியலை முன்னெடுக்க வேண்டி தவறான தீர்மானங்களை கையாண்டு நாட்டையும் மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளிக்கொண்டுள்ளனர்.
நாட்டில் நெருக்கடி நிலையொன்று நிலவுகின்ற நேரத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து நாட்டில் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்குவதாக கூறி மக்களை ஏமாற்றும் வேலையையே ஜனாதிபதி முன்னெடுத்தார்.
நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் புதிதாக உருவாகியுள்ள நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எவ்வாறு முன்வைப்பது என்பதை கூறாது, மக்களின் பிரச்சினைகளை பேசாது முற்றிலும் வேறுபட்ட விதத்தில் தான் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை அமைந்தது.
ஆகவே அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை எனக்கூறி முற்றுமுழுதாக மக்களை ஏமாற்றும் செயற்பாட்டையே ஜனாதிபதி கையாண்டுள்ளார்.
ஜனாதிபதியும் அமைச்சர்களும் நாளுக்கு நாள் பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து நாட்டை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கவும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கத்திற்கு வேலைத்திட்டம் ஒன்று இல்லை.
எந்த தீர்மானங்களை மேற்கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பது என்பது அரசாங்கத்திற்கு தெரியவில்லை. முதலீடுகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தெரியவில்லை.
வெறுமனே வாய் வார்த்தைகளில் இவர்களின் வேலைத்திட்டங்களை முன்வைத்தாலும் அதனை நடைமுறைப்படுத்த தெரியவில்லை. ஏற்றுமதியை எவ்வாறு அதிகரிப்பது, இறக்குமதிக்கு எவ்வாறு இடம் வழங்குவது என்பது தெரியவில்லை.
நாட்டிற்குள் எவ்வாறு டொலர்களை பெற்றுக்கொள்வது என்பது குறித்த தெளிவான வேலைத்திட்டமொன்று இவர்களிடம் இல்லை. இதுவே நாட்டின் நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தின் முகாமைத்துவம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ நாசமாக்கிவிட்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகளிலும் இவர்களினால் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. இவர்களின் ஆட்சி முடிவுக்கு வரும் வேளையில் நாட்டில் பாரிய அளவில் சமூக பிரச்சினைகள் மற்றும் நிதி நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கும்.
அரசாங்கம் இப்போதும் தவறான பாதையில் பயணித்துக்கொண்டுள்ளது, எதிர்கட்சிகள் கூறும் காரணிகளை கவனத்தில் கொள்ளவும் விரும்பவில்லை. பாராளுமன்ற செயற்பாடுகளை முடக்கி நிதி தொடர்பான தீர்மானங்களை தன்னிச்சையாக கையாள்வது ஆரோக்கியமான விடயம் அல்ல.
பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறாத வகையில் அரசாங்கம் செயற்படுவது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை உருவாக்கும். உண்மையில் நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமையொன்று உருவாகியுள்ள நிலையில், மக்கள் வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததன் மூலமாக ஜனாதிபதி ஏதோ ஒரு உண்மையை மூடி மறைக்கவே சூழ்ச்சி செய்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாட்டிற்கு எதிராக ஏதோவொரு வேலைத்திட்டத்தை ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்னெடுக்கின்றதா என்ற கேள்வியை பொது அரங்கில் முன்வைக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM