கேள்வி : நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அதற்கு நீங்கள் ஆதரவளிப்பீர்களா?
பதில் : இந்தப் பிரச்சினையை இனரீதியாக பிளவுபடுத்தி பார்க்க முடியாது. அனைவரும் ஒத்துப் போகின்ற வகையிலும் மகிழ்ச்சியடைகின்ற வகையிலும் அமையப்பெற வேண்டும். ஒரு இனம் மகிழ்ச்சியடைகின்ற அதே சமயம் மற்றுமொரு இனம் வேதனையடைவதாயின் அதனை ஏற்றுக்கொள்ள இயலாது. வடக்கு கிழக்கு பிரச்சினையை எடுத்துக்கொண்டால் கிழக்கில் உள்ள சிலர் இணைய வேண்டும் என கூறுகின்றநிலையில் மற்றுமொரு தரப்பு இணைய முடியாது எனக் கூறுகின்றது. நாட்டின் அபிவிருத்திக்கு இது ஒருபோதும் சாத்தியப்படாது. நாடு அபிவிருத்தியடைய வேண்டுமாயின் அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுவது முறையல்ல. பிரதான அரசியல் கட்சிகள் அரசியல் நலனுக்காக இந்த விடயத்தை கையாள்வது முறையல்ல.
கேள்வி : புதிய அரசியலமைப்பு ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிப்பீர்களா?
பதில் : தீர்வு என்னவென்பதை முதலில் நாங்கள் அறிய வேண்டும். தீர்வுத்திட்டத்தை அறியாது என்னால் பதிலளிக்க முடியாது.
கேள்வி : விமல் வீரவன்ச போன்றவர்கள் புதிய அரசியலமைப்பை முன்வைப்பதற்கு முன்னரே விமர்சிக்கின்றனரே?
பதில் : அரசியலமைப்பை தயாரிப்பதற்காக லால் விஜயநாயக்க தலைமையில் குழுவொன்றை ஸ்தாபித்துள்ளனர். அந்தக்குழுவினரால் முன்வைக்கப்பட்டுள்ள சில விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் இனங்கள் ஒன்றிணையாது. மாறாக மென்மேலும் பிளவுகளுக்கு உட்படும்.
அந்த குழு மதவாதத்தை தூண்டும் வகையிலும் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் செயற்படும் விதமும் தெரிவிக்கும் கருத்துக்களுமே சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது. ஆனால் புதிய அரசியலமைப்பை விட நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வருவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதே எனது நிலைப்பாடு ஆகும்.
கொல்வின் ஆர்.டி. சில்வா அரசியலமைப்பை தயாரிக்க மூன்று வருடங்கள் சென்றது. பாராளுமன்றத்தில் அன்று நான் இளைய உறுப்பினராக அங்கம் வகித்தேன். அன்று மீனவர் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து போராட்டங்களை கூட நடத்தினோம். எனவே புதிய அரசியலமைப்பாக கொண்டு வருவதை திருத்தங்களாக முன்வைப்பதை சிறந்த விடயமாக கருதுகின்றேன். அரசியலமைப்புச் சபை என பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கின்ற நிலையில் எந்தவொரு இறுதியான நிலைப்பாட்டுக்கும் அரசாங்கம் வரவில்லை. எனவே நாங்கள் நடப்பவற்றை வேடிக்கை பார்க்கின்றோம். நாட்டை பிளவுப்படுத்தி பிரச்சினையை தீர்க்க முடியாது. ஏன் என்றால் இது ஒரு சிறிய நாடு.
கேள்வி : கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் இராணுவ சூழ்சியினூடாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்ததாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது.
பதில் : சூழ்ச்சி செய்திருந்தால் இன்றும் நான் அதிகாரத்தில் இருந்திருப்பேன். எனவே இதுவொரு அரசியல் பொய்.
கேள்வி : பிரதமர் அந்த சந்தர்ப்பத்தில் உங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன் உண்மை தன்மை என்ன?
பதில் : தேர்தல் தோல்வியை அறிந்த பின்னர் உரிய முறையில் ஒப்படைத்துவிட்டு வெளியேறுவதற்காகவே நான் அந்த சந்தர்ப்பத்தில் செயற்பட்டேன். தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அங்கிருந்து நான் சென்று விட்டேன். காலையில் ஆறு மணியளவில் ஒப்படைத்துவிட்டு சென்றேன். பல வருட காலமாக செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு இருந்தமையால் மக்கள் அலை எவ்வாறு காணப்படுகின்றது என்பதை எம்மால் உணர முடிந்தது. சிலர் கூற வேண்டாம் என்று கூட என்னிடம் கேட்டு கொண்டனர். ஆனால் நான் இல்லை அவ்வாறு வேண்டாம் உரிய முறையில் ஒப்படைத்து விட்டு செல்வோம் என்றே கூறினேன்.
கேள்வி : தேர்தல் தோல்விக்கு பிரதான காரணம் எதுவென நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில் : போலியான பிரசாரங்களே தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது. மக்கள் மத்தியில் எமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியும் வெறுப்புக்களை ஏற்படுத்தியுமே செயற்பட்டனர்.
கேள்வி : உரிய காலத்துக்கு முன்னரே தேர்தலை வைத்தமையேன்? அதனையிட்டு தற்போது வேதனையடைகின்றீர்களா?
பதில் : ஒருபோதும் இல்லை. சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு தோன்றும்.
கேள்வி : சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் குறைவதற்கு என்ன காரணம்?
பதில் : ஏற்கனவே நான் கூறியது போன்று போலியான பிரசாரங்கள் தான். முஸ்லிம் மக்கள் மத்தியில் சென்று என்ன கூறினார்கள். அதேபோன்று "கிறீஸ்பூதம்" விவகாரம், எனவே திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்த சூழ்ச்சி இலங்கையில் மாத்திரம் முன்னெடுக்கப்படவில்லை. சில வெளிநாடுகளும் தொடர்புபட்டிருந்தன. பல வருடங்களாக இந்த சூழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் மத்தியில் எம்மை தவறாக சித்தரித்தனர். ஆனால் உண்மை நிலையை தற்போது உணரக் கூடியதாக உள்ளது.
2011ஆம் ஆண்டிலிருந்து இந்த சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுகின்றனர். சிலர் ஆட்சி கவிழ்ப்பை பெரும் சாதனையாக வெளிப்படுத்தி புத்தகங்கள் கூட அச்சிடுகின்றனர். மேலும் சிலர் தாம் தான் அதற்கு காரணம் என கூறி புத்தகங்களில் எழுதுகின்றனர். ஆனால் நாங்கள் அவற்றை எதிர்கொள்ளவில்லை.
கேள்வி : சிறுபான்மையின மக்களின் வாக்குகள் கிடைக்கப் பெறாது என தேர்தலுக்கு முன்னர் பலர் தெரிவித்திருந்தனர். இருந்தும் நீங்கள் தேர்தலை நடத்தினீர்களே?
பதில் : நான் அதனை நம்பவில்லை. காரணம் அவ்வாறு இடம்பெற வாய்ப்பு இல்லை. தமிழ் மக்களுக்கு சுதந்திரம் எவ்வாறு கிடைத்தது. வடக்கு மக்களுக்கு சுதந்திரம் எவ்வாறு கிடைத்தது என்று கூறுங்கள். சுதந்திரமாக நடமாட, எழுதுவதற்கு உங்களுக்கு இப்போது முடிந்தது என்று கூறுங்கள் பார்ப்போம். மறந்து விட்டீர்கள். தமிழ் மக்களுடன் நாங்கள் போர் செய்யவில்லை. தவறான கருத்துக்களையே பரப்பினார்கள்.
கேள்வி : ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு இந்தியா ஒரு காரணம் எண்ணுகின்றீர்களா?
பதில் : வெளிநாடுகளின் தொடர்பு குறித்து நான் பேச விரும்பவில்லை. எனவே தான் பெயர்களை கூறாமல் சென்றேன்.
கேள்வி : அந்தக் காலப்பகுதியில் சீனாவுடன் நெருங்கிய நட்பை வைத்திருந்தீர்களே..
பதில் : நான் எந்த நாட்டை முதன்மையாக கொண்டு செயற்பட வேண்டும்? இந்தியாவா? சீனாவா? அமெரிக்காவா? இலங்கையா? என கூறுங்கள் பார்ப்போம். இலங்கை தொடர்பாக நாம் சிந்தித்து செயற்பட வேண்டும். இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் நான் செயற்பட வேண்டும்.
இந்த விடயத்தில் எனக்கு சீனா இந்தியா மற்றும் அமெரிக்கா என அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்கினார்கள். தற்போதைய அரசாங்கம் எங்கு செல்கின்றது. சீனாவிற்கு பின்னால் தான் ஓடுகின்றது. அவர்கள் வழங்கிய நிதியை பெற்றுக்கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்திருந்தால் இன்று நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்திருத்திருக்காது. சர்வதேச சஞ்சிகை ஒன்றில் இலங்கையின் கடன்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடன் எவ்வளவு என்று தெரியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் உள்ளது. படுமோசமான நிலையில் நாட்டின் பொருளாதாரம் காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்படப்போவது நாட்டு மக்களே.
மாத சம்பளத்தால் வாழமுடியாத நிலையே மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும். இன்று நாட்டில் காணப்படும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையை பாருங்கள். வருமானம் தொடர்பான பிரச்சினைகளினாலே இவ்வாறான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. எனவே இந்த பிரச்சினை மிகவும் ஆழமானது. எமது ஆட்சி காலத்தில் மக்கள் கரங்களில் தாராளமாக பணம் இருந்தது. ஆனால் இன்று யாழ்ப்பாண விவசாயிகளின் நிலைமையை சென்று பாருங்கள். அதேபோன்று செட்டிதெருவுக்கு சென்று வியாபாரிகளின் நிலைமையை பாருங்கள். உண்மை வெளிப்படும்.
கேள்வி : உங்கள் ஆட்சி காலத்தில் சர்வதேசத்தை பகைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளதே?
பதில் : சர்வதேசம் வேண்டுமென்றே எம்மை பகைத்துக்கொண்டதாக கருத முடியாது. சில விடயங்கள் தொடர்பாக காணப்பட்ட அழுத்தங்கள் ஒரு காரணம். இறுதிக் கட்டப்போரின் போது பல்வேறு அழுத்தங்கள் எமக்கு காணப்பட்டது. அவற்றுக்கு அடிபணிந்திருந்தால் போரை முடிவுக்கு கொண்டு வர முடிந்திருக்காது. அவ்வாறு முடிந்திருக்காவிட்டால் என்னை உங்களுக்கோ உங்களை எனக்கோ சந்தித்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்காது. ஏன் என்றால் நாட்டில் போர் காணப்படும் போது அவ்வாறு சந்திப்புகளுக்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் என்னை சந்திக்க அச்சப்படுவீர்கள். நான் உங்களை சந்திக்க அச்சப்படுவேன். அவ்வாறானதொரு சூழ்நிலை நாட்டில் ஏன் ஏற்பட்டது. அவ்வாறானதொரு சூழ்நிலையை நாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது. ஆகவேதான் போரை முடிவுக்கு கொண்டு வந்தோம். போர் முடிவடைந்தமையால் தான் அரசியல் தீர்வு குறித்து பேச முடிகின்றது. இதுதான் உண்மை நிலை.
கேள்வி : போர்க்குற்றம், சர்வதேச நீதிமன்றம் மற்றும் மின்சார கதிரை அச்சுறுத்தல்களிருந்து உங்களை பாதுகாத்துள்ளதாக தற்போதைய அரசாங்கம் கூறுகின்றது. இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் : வீண் பேச்சுக்களே அவை. அவர்கள் செய்யும் பணிகள் யாருக்கும் தெரிவதில்லை என கூறுகின்றனர். ஒரு காலத்திலிருந்த மன்னரின் உடையை போன்றதே இவர்களின் செயற்பாடும்.
கேள்வி : மருத்துவ சபை மற்றும் பொறியியல் துறைசார் நிபுணர்கள் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அச்சம் தெரிவிக்கின்றனர். இது குறித்த உங்களது நிலைப்பாடு என்ன?
பதில் : சேவைத்துறையை மையப்படுத்தி ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து பணிபுரிவார்கள். அவர்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் மொழி நன்கு தெரியும். குறைந்த சம்பளத்தில் அவர்கள் இங்கு தொழில் செய்வார்கள். அதேபோன்று தொழில்நுட்பத்துறை எடுத்துக் கொண்டாலும் பாதிப்பு மிக அதிகமாகவே உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அதிகமாக தமிழ் மக்களே பாதிக்கப்பட போகின்றனர். வட, கிழக்கில் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அதிகமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பலனை தமிழ் இளைஞர் யுவதிகள் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ் நாடு இன்று குறைந்த சம்பளத்திற்கு இங்கு வந்தால் நிலைமை மோசமானதாகவே காணப்படும்.
தெற்கிற்கும் இதே நிலைதான். வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் போன்றவர்களின் நிலைமையும் கேள்விக்குறியாகும். பல இலட்சம் பேர் அங்கிருந்து எமது நாட்டுக்கு வந்து தொழில் செய்வதற்காக கதவுகளை திறந்து விடுகின்றோம். தற்போதும் இலங்கையில் பல வர்த்தக நிலையங்களில் இருப்பவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உரிய முறையில் முன்னெடுத்துவிட்டு எட்கா தொடர்பில் பேச முடியும்.
இதனை செய்யாது மற்றுமொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடாது. போரை முடிவடையச் செய்து மக்கள் அபிவிருத்திகளை அடைகின்ற இந்த தருணத்தில் அந்த தொழில் வாய்புகளுக்கான சந்தர்ப்பங்களுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது. சுதந்திரமாக கல்வியை முன்னெடுக்கும் இளைஞனுக்கு தொழிலுக்கான வாய்ப்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும். இதுவே பிரச்சினை. ஆகவே இந்த ஒப்பந்தத்தினால் தமிழ் மக்களுக்கே அதிகமாக பாதிப்புகள் ஏற்பட போகின்றது.
கேள்வி : இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிலிருந்து விலகுவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. இதனூடாக அரசாங்கம் தொடர்ந்தும் இந்தியாவின் தேவையை ஈடு செய்வதாக அமைகின்றது தானே?
பதில் : அவ்வாறு நீங்கள் கூறுகின்றீர்கள். சிந்தித்து செயற்பட வேண்டும். எமக்கும் அவ்வாறான ஒரு சூழ்நிலை காணப்பட்டது. அப்போதும் அந்த நாடுகள் என்னிடம் வந்து கலந்துரையாடியது. ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். அறிக்கையை வெளியிட்டிருக்க கூடாது. அவசரப்பட்டிருக்க தேவையில்லை. எப்படியும் அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது என்ன நடந்துள்ளது. காலையில் இலங்கை அறிக்கையை வெளியிடும் போது மாலையில் அவர்கள் மாநாட்டை ஒத்திவைத்து விட்டனர். எனவே சர்வதேச கொள்கைகள் தொடர்பில் இதனை விட சிந்தித்து பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். சீனாவை பகைத்துகொண்டனர். ஆனால் நான் சீனாவை பகைத்துக்கொள்ளவில்லை. பொருளாதார நன்மைகள் அதிகளவு கிடைக்கும் நாடு சீனா. இந்தியாவை நான் பகைத்துக்கொண்டதாக கூறுகின்றனர். நான் பகைத்துக்கொள்ளவில்லை.
போரை வெற்றிக்கொள்ள எனக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியது. அதேபோன்று பொருளாதார அபிவிருத்தியில் இந்தியா எனக்கு ஒத்துழைப்பு வழங்கியது. ஆனால் தேர்தல் தோல்விக்கு செயற்பட்டதா என்று தெரியவில்லை. அவ்வாறு செயற்பட்டும் இருக்கலாம். ஆனால் முக்கியமான இரண்டு விடயங்களான பயங்கரவாத ஒழிப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியா கூடிய ஒத்துழைப்புகளை வழங்கியது. ஆனால் தற்போதைய அரசாங்கத்துக்கு எந்தவொரு ஒத்துழைப்புக்களும் கிடைக்கப்பெறவில்லை. பகைத்துக்கொண்டுள்ளனர். சார்க் வலயத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினைகள் காணப்படுமாயின் சமாதானப்படுத்த செயற்பட வேண்டுமே தவிர பக்கச்சார்பாக செயற்பட கூடாது. இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு நல்ல நண்பர்கள். ஆகவே இந்த இரு நாடுகளும் மோதுகின்ற நிலையில் சமாதானப்படுத்த செயற்பட வேண்டும். மாறாக மேலும் பிளவுப்படுத்த காரணமாகிவிடக் கூடாது.
கேள்வி : துறைமுக நகர்த் திட்டம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உங்களுக்கு எதிராக முன்வைக்கபட்டனவே?
பதில் : தேர்தல் பிரசாரங்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விடயங்களே அவை. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள துறைமுக நகர் ஒப்பந்தம் சீனாவுக்கு நன்மை தருவதாக அமைகின்றது. முன்பு இருந்ததை விட அதிகளவான நிலப்பரப்பு சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி : துறைமுக திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களா?
பதில் : ஒப்பந்தம் தொடர்பில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இரு நாட்டு ஜனாதிபதிகள் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்துள்ள முதல் நாடு இலங்கையாகும். உலகில் முதற் தடவையாக இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்காக எந்த செலவும் எமது சார்பில் இல்லாத நிலையில் முன்னெடுக்கப்பட்டது. மக்களுக்கு போலியான பிரசாரங்கள் செய்து திட்டத்தை குழப்பி விட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் முக்கிய காரணங்களாகும். முட்டாள்தனமான செயற்பாடுகள்.
கேள்வி : அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. தோட்டத்தொழிலாளர்கள் சம்பள உயர்வை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில் : உழைக்கும் மக்களுக்கு உரிய வருமானம் இல்லாவிட்டால் வாழ்வாதார பிரச்சினை ஏற்படும். இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். வற் வரி அதிகரிக்கப்பட்டால் இந்த நிலைமை இன்னும் மோசமடையும். 15 ஆம் திகதிக்கு பின்னர் அதனை உங்களால் உணர முடியும். பத்திரிகைகளுக்கும் வற் வரி விதிக்கப்படும். இதனால் பத்திரிகையின் விலை அதிகரிக்கப்பட்டு வாசகர்களின் எண்ணிக்கை குறைவடையும். இதன் விளைவாக உங்களின் மாதச் சம்பளம் வீழ்ச்சியடையும். எனவே போலியான விடயங்களை கொண்டே அரசாங்கம் ஆட்சியை முன்னெடுக்க முற்படுகின்றது. குறுகிய கால நன்மைகள் கிடைக்குமே ஒழிய எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை.
கேள்வி : உங்கள் தலைமையில் புதிய கட்சி உருவாக உள்ளதாக கூறுவது உண்மையா?
பதில் : நான் கட்சி ஒன்றை ஸ்தாபிக்கமாட்டேன். அரசாங்கம் அனைவரையும் விரட்டுகின்றது. மக்கள் கட்சிஒன்றை உருவாக்கும் நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.
கேள்வி : நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக் ஷ குடும்பம் காரணம் என குற்றச்சாட்டு உள்ளதே?
பதில் : பொய். நாங்கள் பெற்றுக்கொண்ட கடனுக்கு செய்த அபிவிருத்தி வேலைகள் உங்கள் கண் முன் காணப்படுகின்றது. இலங்கையில் எந்தப் பகுதிக்கு சென்று வேண்டுமென்றாலும் பாருங்கள். நாங்கள் மேற்கொண்ட அபிவிருத்தி பணிகளை காணலாம். ஆனால் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்த ஒரு அபிவிருத்தி விடயத்தையேனும் கூறுங்கள் பார்க்கலாம். ஒன்றும் இல்லை.
கேள்வி : உங்களது ஆட்சிக் காலத்திலும் தற்போதைய ஆட்சியின் கீழும் காணப்படும் ஊடக சுதந்திரம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? ஊடகவியலாளர்கள் கொலை உங்களுடை ஆட்சிக்காலத்தில் அதிகம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்களும் உள்ளனவே?
பதில் : இல்லை. தற்போது ஊடக சுதந்திரம் என்ற சொல் மாத்திரமே காணப்படுகின்றது. உங்களால் தற்போது சுதந்திரமாக எழுத முடியாது. தொலைக்காட்சிகளுக்கு சுதந்திரமாக செய்திகளை தெரிவிக்க முடியுமா. எனது ஆட்சிக் காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. பத்திரிகைகளை எடுத்து பாருங்கள். எனக்கு எதிராக எத்தனை செய்திகள் வெளிவந்துள்ளன என்று. தற்போது மிக எளிதாக ஊடகவியலாளர்கள் பெயர் கூறி எச்சரிக்கப்படுகின்றனர். இவ்வாறு எச்சரிக்கப்பட்டால் சுதந்திரமாக செயற்பட முடியுமா?
கேள்வி : ஆனால் உங்கள் ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் கடத்தல் கொலை அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகின்றதே?
பதில் : அவ்வாறு இல்லை. அது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன. விசாரணை முடிவில் உண்மை வெளிவரும். ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அந்த கொலைகளை யார் செய்தார்கள் என்று கூறியுள்ளார். தற்போது கூறுவதில்லை. அவர்கள் இன்று ஒன்றாக உள்ளார்கள்.
கேள்வி : தமிழ் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காமையினாலே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தீர்கள். மீண்டும் சிறுபான்மையின் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியுமா என கருதுகின்றீர்களா?
பதில் : முடியும். முஸ்லிம் மக்கள் மாத்திரமல் தமிழ் மக்களின் ஆதரவையும் என்னால் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது இடம்பெறும் செயற்பாடுகள் ஊடாக உண்மை நிலையை உணர்ந்து கொண்டுள்ளனர். அந்த மக்களின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும். ஏன் என்றால் நாங்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக நேர்மையாக செயற்பட்டோம்.
கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாக உங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இது குறித்து விளக்க முடியுமா?
பதில் : பொய். கட்சி மாறுபவர்கள் கூறும் கதையே அது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மாத்திரம் ஸ்தாபிக்கவில்லை. எனது தந்தையும் அதன்போது இருந்தார். நாங்கள் அன்று தொடக்கம் இன்று வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர். கட்சியை கட்டியெழுப்பியவர்கள் நாங்கள். ஐக்கிய தேசியக் கட்சியிடம் திருட்டுத்தனமாக ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோல்வியடைய செய்தனர். அது போதாதன்று 129 பேர் இருந்த கட்சிக்கு பிரதமர் பதவி வழங்காது 43 பேரை கொண்ட ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கினார்கள். அது தவறு. வழங்கியதும் தவறும். பெற்றுக்கொண்டதும் தவறு.
கேள்வி : அதிகாரத்தை கைப்பற்ற இனவாதத்தை கையாள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது?
பதில் : நான் இனவாதத்துக்கு எதிரானவன். ஆட்சியை கைப்பற்ற மக்கள் எதிர்கொள்ளும் பட்டிணியையும் ஏனைய வாழ்வாதார பிரச்சினைகளை கூறினால் மாத்திரமே போதுமானது. ஆனால் யாராவது இனவாதம் பேசினால் ஏன் இந்த நிலைமை என்பதை நாங்கள் விமர்சிப்போம். ஏன் என்றால் எனக்கு இனவாதத்தை தூண்ட முடியாது. எனது வீட்டின் நிலையும் அது தான். ஏன் என்றால் எனக்கு யாழ்ப்பாணத்திலும் உறவினர்கள் இருக்கின்றனர்.
கேள்வி : விடுதலைப்புலி இயக்கத்தில் மற்றும் ஆட்லறி மற்றும் தற்கொலை குண்டுதாரிகள் இருக்கும் போது தான் தோல்வியடைய செய்தீர்கள். மீண்டும் புலிகள் வருவதாக உங்கள் கட்சியில் உள்ளவர்கள் கூறுகின்றீர்களே?
பதில் : இது ஒரு சாதாரண அச்சமாகும். இலங்கையில் அந்த அச்சுறுத்தல் இல்லை என்றாலும் சர்வதேசத்தில் காணப்படுகின்றது. அனைவரும் புனர்வாழ்வு பெற்றுள்ளனர். எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விட்டது என்று கூறி விட முடியாது. தற்கொலை குண்டுதாரிகள் இல்லையென உங்களால் கூறமுடியுமா? அந்த உத்தரவாதத்தை என்னால் தரமுடியாது. ஆகவேதான் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறினேன். எனவே இது அரசாங்கத்தின் கடமையாகும். மோசமான நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே கூறுகின்றோம்.
கேள்வி : அரசியலிலிருந்து எப்போது ஓய்வு பெறப்போகின்றீர்கள்?
பதில் : உண்மையாகவே நான் அரசியலிருந்து ஓய்வு பெறவே விரும்பினேன். ஆனால் மக்கள் அனுமதிக்கவில்லை. பல மைல் தூரம் காத்திருந்து நாட்டின் நான்கு திசையிலும் இருந்து ஊருக்கு வந்து சுகம் விசாரித்து சென்றனர். வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து கூட மக்கள் வந்தனர், அதுபோன்று என்னை திருடன் திருடன் என இந்த அரசாங்கம் கூறுகின்றது. அதற்கு பதிலளிக்கச் சென்று மீண்டும் என்னை அரசியலில் ஈடுபட இந்த அரசாங்கம் வைத்துவிட்டது. எனவே மக்கள் என்னை ஓய்விற்கு அனுப்புவதாக இல்லை. இரத்தினபுரியை போன்று யாழ்ப்பாணத்திலும் கூட்டம் ஒன்றை நடத்துவோம். அப்போது மலேஷியாவில் இடம்பெற்றதை போன்று கறுப்பு கொடி போராட்டங்கள் காணப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு செல்வோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM